Monday, July 22, 2019

புனித மகதலா மரியா

இன்றைய (22 ஜூலை 2019) திருநாள்

புனித மகதலா மரியா

'குறைவாக மன்னிப்பு பெறுபவர் குறைவாக அன்பு செய்கிறார். அதிகமாக மன்னிப்பு பெறுபவர் அதிகமாக அன்பு செய்கிறார். அல்லது அதிகமாக அன்பு செய்கிறவர் அதிகமாக அன்பு செய்யப்படுகின்றார்' - மகதலா நாட்டு மரியாவைப் பற்றி இயேசு சீமோன் என்னும் பரிசேயரிடம் (காண். லூக் 7:36-50) கூறும் மொழிகள் இவை.

'என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களா?' என்று தெருக்களிலும் நாற்சந்திகளிலும் தேடி அலையும் ஒரு இளவல் (காண். இபா 3:1-4) தன்னுடைய ஆண்டவரைக் கண்டுகொள்கிறாள்.

இயேசுவை அடக்கம் செய்த கல்லறைக்கு ஓடிச் சென்ற மகதலாம மரியா முன்பின் தெரியாத இரு ஆடவரிடம், 'என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கே வைத்தனரோ தெரியவில்லை' என்கிறார்.

இவரின் இவ்வார்த்தைகள் ஆண்டவரைக் காணோம் என்ற பதற்றத்தையும், அந்த இடம் தெரிந்தால் தானே அவரை எடுத்துக்கொள்ள நினைக்கும் பேரார்வத்தையும் ஒருசேரக் குறிக்கின்றது. இப்போது அங்கே மூன்றாவது ஆடவர் ஒருவர் வருகிறார். அவரைத் தோட்டக்கரார் என நினைக்கிறார். ஆனால், 'மரியா' என்றவுடன், 'ரபூனி' ('என் போதகரே') எனப் பற்றிக்கொள்கின்றார் இயேசுவை.

'என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே' என்று சொல்லும் அளவுக்கு இயேசுவைப் பற்றிக்கொள்கின்றார் மரியா. நாம் யாரையாவது ரொம்ப அன்பு செய்கிறோம் என்றால் அவரை அப்படியே சின்ன உருவமாக்கி வாய்க்குள் போட்டு மென்று தின்று நம்முடையவராக்கிக்கொள்ள வேண்டும் என்று நம் மனம் துடிக்கும். அப்படித்தான் துடிக்கின்றது மகதலா மரியாவின் மனம்.

'என் ஆண்டவரைக் காணோம்' என்றவள், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' எனச் சீடர்களிடம் அறிவிக்க ஓடுகின்றாள்.

இதுதான் உயிர்ப்பு அனுபவம்.

ஏன் அவள், 'என் ஆண்டவர்' என்று சொல்லவில்லை?

'இயேசு எனக்கு வேண்டாம்' என்று நினைத்துவிட்டாளா?

அல்லது 'உயிர்த்த இயேசு எனக்கு வேண்டாம்' என்று நினைத்தாளா?

தன் இயேசுவை அவள் தியாகம் செய்தாளா?

'இனி என் இயேசு எல்லாருக்கும் பொதுவானவர்' என்று விட்டுவிட்டாளா?

அன்பின் இயல்பு இதுதான் என நினைக்கிறேன்.

அன்பு என்பது ஜென் அனுபவம் போன்றது என நினைக்கிறேன்.

ஜென் அனுபவத்திற்குள் நுழையுமுன் மலைகள் மலைகள் போலவும், ஆறுகள் ஆறுகள் போலும், கடல் கடல் போலவும் தோன்றும். ஜென் அனுபவத்திற்குள் இருக்கும்போது மலைகள் ஆறுகள் போலவும், ஆறுகள் கடல் போலவும், கடல் மலை போலவும் தோன்றும். ஜென் அனுபவம் முடிந்தவடன் மறுபடியும் மலைகள் மலைகள் போலவும், ஆறுகள் ஆறுகள் போலவும், கடல் கடல் போலவும் தோன்றும்.

'ஆண்டவர்' என்று நினைத்தாள்.

'என் ஆண்டவர்' என்று அன்பு செய்தாள்.

'ஆண்டவர்' என்று அறிவிக்க ஓடினாள்.

மகதலா மரியா!

1 comment:

  1. விவிலியத்தில் வரும் ஒன்றுக்கு மேற்பட்ட ‘மரியாக்கள்’ குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன.ஆனால் இன்று எங்களின் உதவிப்பங்குத் தந்தை அவரின் மறையுரையில், யார்? எந்த மரியா? எனும் தெளிவான ஒரு விளக்கம் தந்தார். தந்தையின் இந்தப் பதிவும் அதை உறுதி செய்கிறது. நமக்கு மிக நெருக்கமான ஒருவரைக் காணப்போகிறோம் என்ற எண்ணம் நம்முள் ஏறபடுத்தும் பதற்றமும்,கண்டபின் அவரை நம்முடன் நீண்டநேரம் தக்க வைத்துக்க கொள்ள வேண்டுமெனும் ஆவல் தரும் பதற்றமும் இயற்கையே! ஆனால் மரியாவுக்கு ஆண்டவரைக் காணுமுன் இருந்த பதற்றமும், அவரின் மேல் அவள் கொண்டாடிய உரிமையும் அவரைக்கண்டவுடன் காணாமல் போய்விட்டது எதனால்? இதை ‘ஜென் அனுபவம்’ என்கிறார் தந்தை.” என் ஆண்டவர்” எனத் தான் அன்பு செய்த ஒருவரை....சொந்தம் கொண்டாடிய ஒருவரை இந்த வையகத்துக்காக விட்டுக்கொடுத்தாளா மரியா? இதுதான் ஜென் அனுபவமா? “எனக்குத் தெரிந்த ஒருவரை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்; நான் அன்பு செய்யும் ஒருவரை நீங்களும் அன்பு செய்யுங்கள்” இப்படியொரு கோணத்தில் நினைக்க எத்துணை பரந்த மனது வேண்டும்! அது’ மகதலா மரியா’ வுக்கு நிறையவே இருந்தது.பட்டும் படாமலும் தெரிந்து வைத்திருந்த ஒரு ‘புனிதை’ யைப் பற்றிய ஆழமான புரிதலைத்தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete