Thursday, July 4, 2019

பின்பற்றி வா

இன்றைய (5 ஜூலை 2019) நற்செய்தி (மத் 9:9-13)

பின்பற்றி வா

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர் மத்தேயுவின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். சுங்கச்சாவடியில் அமர்ந்திருக்கும் அவரைக் கண்ட இயேசு, 'என்னைப் பின்பற்றி வா!' என அழைக்க, அவரும் உடனே எழுந்து இயேசுவைப் பின்பற்றுகிறார்.

'நீ தயாராக இருக்கும்போது போதகர் வருவார்!' என்று ஜென் புத்தமதத்தில் ஒரு சொலவடை உண்டு. போதகர்களை, ஆசிரியர்களை யாரும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நம்முடைய தயார்நிலையே போதகரை நம் அருகில் கொண்டுவந்து சேர்க்கும். மத்தேயு தயாராக இருந்ததால்தான் அவரால் உடனே எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்ற முடிந்தது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 23:1-4, 19, 24:1-8, 62-67) ஈசாக்கிற்குப் பெண் பார்க்கும் நிகழ்வை வாசிக்கிறோம். நிகழ்வின் இறுதியில், ஈசாக்கு தற்செயலாக வயல்புறம் செல்கிறார். அப்போது ரெபேக்காவை அழைத்துக்கொண்டு வரும் ஒட்டகக்கூட்டத்தைப் பார்க்கிறார்.

மத்தேயு-இயேசு நிகழ்வு, ரெபேக்கா-ஈசாக்கு நிகழ்வுகளிலும் என இரண்டு நிகழ்வுகளிலும் நாம் பார்ப்பது 'ஈர்ப்பு விதியைத்தான்.' 'நான் தயாராக இருக்கும்போது என் போதகர் வருவார்.'

ஈர்ப்பு விதி என்றால் என்ன?

ஒரு காந்தம் இரும்பை தன்னத்தே இழுக்க வேண்டும் என்றால், அது காந்த ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அந்த ஆற்றலை அது பெற்றிருக்கும்போது அதன் அருகில் இருக்கின்ற இரும்புத் துகள்களை அது இழுத்துக்கொள்கிறது. வெறும் இரும்பு காந்த ஆற்றல் பெறும்போது அது மற்ற இரும்புத் துகள்களைத் தன்னிடம் ஈர்த்துக்கொள்கிறது.

பணம், வெற்றி, புகழ் எல்லாம் ஈர்ப்பு விதியின்படி வருபவைதாம். பணமுள்ள ஒருவரிடமே பணம் சேருவது ஏன்? வெற்றி பெறுகின்ற ஒருவரே வெற்றி பெறுவது ஏன்? நண்பர்கள் அதிகம் இருக்கிற ஒருவரையே நாடிப் பலர் செல்லக் காரணம் என்ன?

ஒரு முறை அவர் தயாராக இருந்துவிட்டால் அதுவே ஒரு தொடர் செயலாக மாறிவிடும்.

ஆக, இன்று என் தலைவர் என்னிடம் வர நான் தயாரா?

அவரை நான் என்னிடம் ஈர்க்கத் தகுதி பெற்றுள்ளேனா?

1 comment:

  1. மத்தேயு-இயேசு,ரெபேக்கா- ஈசாக்கு, இரும்பு- காந்தம்,ஈர்ப்பு விதி..... ஒரு இயற்பியல் வகுப்புக்குள் சென்று வந்த ஒரு உணர்வு.கொல்லன் பட்டறையில் ஓரமாக்க் கிடக்கும் ஒரு துண்டு இரும்பு,தான் காந்த சக்தியைப்பெற்றவுடன் மற்ற இரும்புத் துகள்களைத் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் ஆற்றலைப்பெறுகிறதெனில், ஊணும்,இரத்தமுமாக உள்ள நான் யாரை என்னகத்தே இழுத்துக்கொள்ள, என்ன தகுதியைப் பெற்றுள்ளேன்? போதகர் என்னிடத்தே வர நான் ‘தயார் நிலையில்’ இருக்க வேண்டுமென்கிறார் தந்தை. ‘தயார் நிலை’ என்றால் எனன? பணம்,வெற்றி,புகழ் ...இவை ஒருவரிடம் இருப்பதாலேயே ஒருவர் தயார்நிலையில் இருப்பவராகி விட முடியுமா? நான் போதகருக்கு ஏற்புடையவளாக “என்னைத்” தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.எப்படித்தயார் செய்ய வேண்டும்? அவரவர் மனமே இதற்கான பதிலைக்கண்டு பிடிக்க வேண்டும்.என்னையே நான் கேள்வி கேட்டுப், பதிலை அறிந்து, என்னையே தயார் நிலையில் வைக்க ஒரு உந்துசக்தியாக செயல்படும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete