Monday, May 6, 2019

தங்கள் மேலுடைகளை

இன்றைய (7 மே 2019) முதல் வாசகம் (திப 7:51-8:13)

தங்கள் மேலுடைகளை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர் ஸ்தேவானின் மறைசாட்சிய நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு அடுத்தபடியாக குற்றமற்ற ஒரு உயிர் சிந்தப்படுவதாக விவிலியத்தில் பதிவுசெய்யப்படுவது இந்நிகழ்வுதான்.

வாழ்வில் சில கேள்விகளுக்கு பதில் இல்லை தானே. ஸ்தேவான் ஏன் கல் எறியப்பட வேண்டும்? வுhழ்க்கை முழுவதும் கடவுளை நம்பிய, கடவுளுக்கே திருத்தொண்டு ஆற்றிய ஸ்தேவான் ஏன் கல் எறியப்பட வேண்டும்? ஸ்தேவான் கொல்லப்பட்டபோது அவர் வணங்கிய கடவுள் ஏன் காப்பாற்ற முன்வரவில்லை? கடவுளர்கள் இப்படித்தான். தங்கள் அன்புக்குரியவர்கள் துன்புறும்போது தூரமாகவே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

கடவுள் வேடிக்கை பார்க்க, மனிதர்கள் வேடிக்கை பார்க்க பட்டப்பகலில் ஸ்தேவான் கல்லால் எறியப்பட்டு கொல்லப்படுகின்றார்.

நிற்க.

'சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் என்னும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா.

இதற்கு அடுத்த நிகழ்வாக சவுலின் மனமாற்றத்தை நாம் வாசிக்கின்றோம்.

இரண்டு காரணங்களுக்காக சாட்சிகள் தங்களுடைய மேலுடைகளை சவுலிடம் கொடுத்திருக்கலாம்:

ஒன்று, ப்ராக்டிகல். கல்லால் எறியும்போது ஸ்தேவானிடமிருந்து தெறிக்கும் இரத்தமும், நிலத்தின் தூசியும் தங்கள் மேல் படக்கூடாது என்பதற்காக.

இரண்டு, சவுலிடம் நல்ல பெயர் வாங்க. சவுல் புதிய நம்பிக்கையாளர்களை அழிக்க மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்றவர். ஆக, இங்கே புதிய நம்பிக்கையாளர் ஸ்தேவானை அழிக்க எத்தனை பேர் உதவி செய்தார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பதற்காக சவுலிடம் இவர்கள் மேலுடைகளைக் கொடுத்திருக்கலாம்.

இந்த நேரத்தில் சவுலின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?

இந்நிகழ்வு ஸ்தேவானின் குற்றமற்ற நிலையை ஒரு பக்கம் நமக்குச் சொன்னாலும், இன்னொரு பக்கம் சவுலின் கொடூரமான குணத்தையும் நமக்குச் சொல்கிறது. ஆக, தன் கண்களுக்கு முன் ஒருவர் கல்லால் எறிந்து கொல்லப்படுவதை நேருக்கு நேர் பார்த்து, அவர் இறப்பதை உறுதி செய்யும் நபராக இருக்கின்றார் சவுல்.

கொஞ்ச நேரத்திற்கு முன் கடவுள் தூரத்தில் இருக்கிறார் என்று சொன்னோமே.

கடவுள் தூரத்தில் இல்லை. கடவுள் சவுலைக் கவனித்துக்கொண்டிருந்தார். 'இவனே என் பணிக்கு உரியவன்' என்று எண்ணிக்கொண்டிருந்தார்.

இன்று நாமும் சில நேரங்களில் மொத்தமாக மற்றவர்களின் மேலுடைகளை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் கடவுள் நம் அருகில் இருக்கிறார்.

அடுத்தவர் மேல் இன்று நாம் கல் எறியாமல் இருக்கலாம்.

ஆனால், அமைதியாக அமரும்போதும் நாம் சவுல் போல கல் எறிதலுக்கு உடன்படலாம்.

ஒன்று நிச்சயம்.

நாம் எதிர்பாராத நேரத்தில் இறைவன் வருவார். நாம் கவனித்துக்கொண்டிருக்க வேண்டியது மேலுடைகளை அல்ல என்று நமக்குக் கற்றுத்தருவார். நம் பெயரையும் மாற்றுவார். நம் பணியையும் மாற்றுவார்.


1 comment:

  1. இன்றையப் பதிவின் கதாநாயகன் ஸ்தேவானா இல்லை சவுலா தெரியவில்லை. ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படும் ஒரு கொடூரமான செயலுக்கு சாட்சியாக நின்றவர் சவுல்.கண்டிப்பாக அவருக்குள்ளும் கொடூரம் இருந்திருக்கும்.ஆனாலும் பல நேரங்களில் நமக்குத்தூரமாக நிற்கும் கடவுள் சிலசமயங்களில் பாரபட்சமாகவும் செயல் படுகிறார். ஒரு திருத்தூதராக இருந்த யூதாசுக்கு மனம் மாற சந்தர்ப்பம் தர மறுத்த கடவுள் அவரின் பிள்ளைகளை வதைப்பது ஒன்றையே தொழிலாகக் கொண்டிருந்த சவுலுக்கு மனம் மாறி அவரின் தொண்டனாக சந்தர்ப்பம் தருகிறார்.காரணம் " இவனே அவரின் பணிக்கு உரியவன்" என அவருக்குத்தெரிந்திருந்தது. "உங்கள் எண்ணம் என் எண்ணமல்ல" என்பதன் பொருள் இதுதானோ?தொடர்கிறார் தந்தை..."இன்று நாம் எதிர்பாராத நேரத்தில் இறைவன் வருவார்; நாம் கவனித்துக்கொண்டிருக்க வேண்டியவை நம் மேலுடைகளை அல்ல என்று கற்றுத்தருவார்;நம் பணியையும்,பெயரையும் மாற்றுவார்." அவர் வரும் நேரத்தில் என்னுள் உள்ள சவுல் மறைந்து நான் பவுலாகத் தெரிய இறைவனிடம் வரம் கேட்போம்.
    ஆம் தந்தையே! தங்கள் கூற்று சரிதான்.வாழ்வின் பல கேள்விகளுக்கு பதில் இல்லைதான். கையாலாத நம்மால் என்ன செய்ய இயலும்? அதனால் தான் அவர் கடவுளாக உயர்ந்து நிற்கிறார்.நாம்!?வாழ்க்கையின் நிதர்சனத்தைக்காட்டும் ஒரு பதிவு! தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete