Monday, May 20, 2019

உலகம் தரும் அமைதி

இன்றைய (21 மே 2019) நற்செய்தி (யோவா 14:27-31)

உலகம் தரும் அமைதி

ஜென் தியானத்தில் 'நோ தாட் மெடிடேஷன்' அல்லது 'சேஸிங் தெ தாட்ஸ் மெடிடேஷன்' என்று ஒரு தியான முறை உண்டு. அதாவது, உள்ளத்தில் ஒரு எண்ணம் உதித்தவுடன் அது என்ன என்பதை அறிவது. நாம் அறிய முற்படும்போது அது மறைந்துவிடும். இத்தியான முறையின் நோக்கம் நம் மூளையை அமைதிப்படுத்துவது. நம் மூளை சதா குரங்கு மாதிரி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டிருக்கும். நாம் கொள்ளும் சந்தேகம், அச்சம், விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை அனைத்தும் நம் மூளையில் நடக்கின்றன. இதில் விந்தை என்னவென்றால் மூளை நம்மை ஏமாற்றிவிடும். ஆக, நம் எண்ணங்களை நாம் நம்பவே கூடாது.

எப்படி?

இன்று நான் என்னுடைய பைக்கை எடுத்து வெளியூர் செல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம். 'அவ்ளோ தூரம் பைக்கா? வேண்டாம்,' 'உன்னால் ஓட்ட முடியாது,' 'நீ யார்மேலாவது இடித்துவிடுவாய்' என்று மனதில் எண்ணங்கள் எழ ஆரம்பிக்கும். இவ்வெண்ணங்கள் அச்சத்தை உருவாக்கும். ஆனால், சாலை வெறிச்சோடி இருக்கிறது. வானிலை இதமாக இருக்கிறது. மூளை அப்படியே எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்: 'நல்ல வேளை பைக்கில் வந்தாய். இல்லை என்றால் எவ்வளவு நேர விரயம். சாலை ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது' - இப்படி நிறையச் சொல்லும். இவையும் மூளையின் எண்ணங்களே. ஆக, வெறும் 30 நிமிடங்களுக்குள் நம்மை நம்ப வைக்கும் அளவிற்கு எண்ணங்களை மாற்றிக்கொள்ளத் திறமை பெற்றது நம் மூளை. ஆக, மூளையை நம்புதல் ஆபத்து.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 14:27-31), இயேசு தன் சீடர்களிடம், 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்கிறார்.

அது என்ன உலகம் தரும் அமைதி?

இன்று உலகம் நமக்கு அமைதி தரவே செய்கிறது. நீண்ட பயணத்திற்குப் பிறகு நாம் போடும் குட்டித் தூக்கம், ரொம்ப கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியபின் பார்க்கப் போகும் சினிமா, ஐந்து நாள்கள் வேலை செய்துவிட்டு இரண்டு நாள்கள் ஓய்வு, நண்பர்களின் வருகை, சுற்றுலா, திருப்பயணம் இவை எல்லாமே நமக்கு அமைதியைத் தரத்தான் செய்கின்றன. வேளாங்கண்ணி போகிறோம். ஆலயத்தில் அமர்கிறோம். மனம் அமைதி கொள்கிறது. கடற்கரையில் காலாற நடந்து மயங்கும் மாலையில் சற்றுநேரம் அமர்கிறோம். மனம் அமைதி கொள்கிறது.

இவ்வமைதி எல்லாமே உடல் அல்லது மூளை சார்ந்தவை. மேலும், இவை மிகக் குறுகியவை. கடற்கரை தரும் அமைதி கடற்கரையில் மட்டும்தான். கடற்கரையின் அமைதி நம் அறைக்குள் வந்தவுடன், 'என்ன ஒரு பிசுபிசுப்பு' என்று சலித்துவிடுகிறது. ஆலயம் தரும் அமைதி அது திறந்திருக்கும் வரைதான்.

ஆக, உலகம் தரும் அமைதியில், அமைதியைப் பெற நாம் ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும், இது மிகக் குறுகியது. சில நேரங்களில் இதற்கு நாம் பெரிய விலையையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இயேசு இதற்கு மாற்றாக ஒருவகை அமைதியை முன்வைக்கிறார். அது ஆன்மா சார்ந்தது. இது யாரையும் சாராதது. இவ்வமைதி நம் உடல் அல்லது மூளையையும் தாண்டியது. உடல் மற்றும் மூளை சார்ந்தவற்றைக் கடக்கும்போது, நம் சார்புநிலையைக் கடக்கும்போதே இவ்வகை அமைதி சாத்தியமாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:19-28), திருத்தூதர்கள் பவுலும் பர்னபாவும் தாங்கள் எவ்வளவு துயருற்றாலும் எப்படி தொடர்ந்து முன்னேற முடிந்தது. அவர்கள் தங்கள் துயரோடு தங்களை இணைத்துக்கொள்ளாமல், அல்லது தங்கள் நிகழ்வுகள்மேல் சார்ந்திராமல் அவற்றைக் கடந்து நிற்கிறார்கள்.

இதுவே இயேசு தரும் அமைதி.

இதை நாம் பெற எங்கும் தேவையில்லை. இப்போதே உடனே கிடைக்கும். நம் உடலைவிட்டு, நம் எண்ணங்களைவிட்டு நாம் ஒதுங்கும்போது.

2 comments:

  1. Great!
    🙏
    நம் உடலை விட்டு, நம் எண்ணங்களை விட்டு , நாம் ஒதுங்கும்போது...
    ஆனால் இது மிக மிகக் கடினமாயிற்றே.‌...

    ReplyDelete
  2. உண்மையே! உலகம் தரும் அமைதியைப்பெற நாம் ஒன்றையோ, ஒருவரையோ சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதில் பல நேரங்களில் மிஞ்சுவது ஏமாற்றமே! நம்முடைய சிறிய அசைவுகளைக்கூட இயக்கும் மூளையின் வழி பிறக்கும் அமைதியைத் தேடி ஓடாமல் நம் ஆன்மா சார்ந்த அமைதியைக் கண்டுணரச் சொல்கிறார் தந்தை.இதை சாத்தியமாக்க தங்கள் துயரை தங்களோடு இணைத்துக்கொள்ளாமல் அவற்றைக்கடந்து நின்ற பவுலையும்,பர்னபாவையும் துணைக்கழைக்கிறார்.நம் உடலை விட்டு,எண்ணங்களை விட்டு ஒதுங்குவது அத்தனை எளிதான விஷயமா... தெரியவில்லை. முயற்சிப்போம். புதுமையான விஷயங்களைப் புதுமையான முறையில் வெளிப்படுத்தும் தந்தைக்கு வாழ்த்துக்கள்,!!!

    ReplyDelete