Sunday, May 5, 2019

இரு கேள்விகள்

இன்றைய (6 மே 2019) நற்செய்தி (யோவா 6:22-29)

இரு கேள்விகள்

'நோஸ்டால்ஜியா' என்ற வார்த்தையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, 'அன்றைக்கு அப்படி இருந்துச்சே!' 'அன்றைக்கு அப்படி இருந்தோமே!' 'அங்கு எல்லாம் நல்லா இருந்துச்சே!' 'ச்சே! அங்கேயே இருந்திருக்கக் கூடாதா?' என்ற கேள்விகள் நம் உள்ளத்தில் எழ ஆரம்பித்தால் நம்மிடம் இந்த உணர்வு இருக்கிறது என்று பொருள். ஆனால், இந்த உணர்வு வந்தால் நம் மனம் ஒரு 'ரோலிங் சேரில்' அமர்வது போல இருக்கும். அது விடிய விடிய நினைவுகளை அசை போட்டாலும் அதனால் இறந்த காலத்தை நெருங்க முடியாது. ரோலிக் சேரில் நாம் விடிய விடிய சுழன்றாலும் அதே இடத்தில்தான் இருப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நிறைய அப்பம், நிறைந்த வயிறுகள், நிறைந்த கூடைகள்' என அனைத்தையும் பார்த்து அனுபவித்த மக்கள் இதே நோஸ்டால்ஜியா உணர்வுடன் இயேசு அப்பம் பலுகச் செய்த இடத்திற்கு வருகிறார்கள். ஆனால், அங்கே இயேசு இல்லை. சீடர்களும் இல்லை. எனவே அவர்களைத் தேடி கப்பர்நகூம் வருகிறார்கள். வந்தவர்கள், 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' எனக் கேட்கின்றனர்.

'நான் வந்தது இருக்கட்டும். நீங்க ஏன் இங்க வந்தீங்க!' ஏன்ற ரேஜ்சில் அவர்களை டீல் பண்ணுகிறார் இயேசு. எடுத்த எடுப்பிலேயே, 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல. மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்' என்று அவர்களின் தேடுதலின் பொய்மையைச் சுட்டிக்காட்டுகின்றார். தொடர்ந்து அவருடைய பேச்சைக் கேட்கும் மக்கள், 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கின்றனர்.
மேற்காணும் இரு கேள்விகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

அ. நீர் எப்போது இங்கு வந்தீர்?

ஆ. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதல் கேள்வியில், இயேசுவும் மக்களும் ஒரே இடத்தில் இருக்கின்றனர். ஆக, நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், 'நான் எங்கே இருக்கிறேன்?' 'நான் எப்போது இங்கே வந்தேன்?' 'நான் என்ன செய்கிறேன்?' என்று நம் இருத்தல் மற்றும் இருப்பு பற்றிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாம் கேள்வியில், மக்கள் தாங்கள் போக வேண்டிய பாதையின் மேப்பை இயேசுவிடம் கேட்கின்றனர். 'நான் என்ன செய்ய வேண்டும்?' அதுவும், 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று ஒரே குழுவாகக் கேட்கின்றனர். இந்தக் கேள்விதான் நம்மைச் சரியான பாதையில் நடத்தும்.

இன்று மேற்காணும் இரு கேள்விகளை நாமும் கேட்டு, அதற்கான விடையைக் காண்போம்.

சில நேரங்களில் நாம் இருக்கும் இடம் ஆபத்தான இடமாக இருக்கும். இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 6:8-15) திருத்தொண்டர் ஸ்தேவான் இருக்கும் இடம் போல. ஆனாலும், வாழ்க்கை நகரும். ஆகையால்தான், தன் உடல்பலத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களைத் தன் பேச்சுத் திறனால் எதிர்த்து நிற்கிறார் ஸ்தேவான். ஏனெனில், இவருக்குத் தான் எங்கே இருக்கிறோம்? என்பதும் தெரிந்திருந்தது. 'என்ன செய்ய வேண்டும்?' என்றும் தெரிந்திருந்தது.  

1 comment:

  1. " நோஸ்டால்ஜியா" ஒருவரைப் புன்னகைக்கவும்,புலம்பவும் வைக்கக் கூடியதொரு உணர்வு.இறந்த காலத்தை நிகழ்காலமாக்கக்கூடிய தொரு உணர்வு. இவ்வுணர்வின் அடிப்படையில் இரு கேள்விகள்....முதல் கேள்வி..."நான் எங்கே இருக்கிறேன்? எப்பொழுது இங்கே வந்தேன்? என்ன செய்கிறேன்?" என்பது பற்றியது. இக்கேள்விகளுக்கு திருப்தியான பதிலை நம்மால் கொடுக்க முடிந்தால் மட்டுமே நாம் அடுத்த கேள்விக்கு நகரமுடியும்." நான் என்ன செய்ய வேண்டும்?".... இக்கேள்விக்கு சரியான பதில் கிடைத்தால் மட்டுமே நான் சரியான பாதையில் போக முடியும். இதற்கு உதாரணமாக ஸ்தேவானைத் துணைக்கழைக்கிறார் தந்தை. இன்றையப் பதிவின் அத்தனை கேள்விகளுக்கும் தெளிவான பதில் அவரிடம் இருந்த காரணத்தினால் தான் அவருக்கு எதிராகப் பேசியவர்கள் ஸ்தேவானைத் உற்றுப் பார்த்த போது அவரின் முகம் வானதூதரின் முகம் போல் இருக்கக் கண்டனர் என்கிறது இன்றைய வாசகம்.நம் முகமும் கூட வானதூதரின் முகம் போல ஜொலிக்க முடியும்....வந்த வழியும்,செல்ல வேண்டிய பாதையும் தெளிவாக இருந்தால்....... என்று எடுத்துரைக்கும் தந்தைக்கு என் நன்றிகளும்! வரும் வாரம் இனிதாய் அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete