Friday, May 31, 2019

உறுதிப்படுத்துதல்

இன்றைய (1 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 18:23-28)

உறுதிப்படுத்துதல்

இன்று புதிய மாதம் தொடங்குகிறது. கல்வி ஆண்டின் முதல் நாள்.

புதிய செயல்கள் பல செய்ய நாம் முடிவெடுத்திருப்போம். 'கஷ்டப்பட்டாவது இந்த ஆண்டு முன்னால் வர வேண்டும் என நாம் முடிவெடுத்திருந்தால், இந்த ஆண்டு ஒரு கஷ்டத்தைக் கடவுள் நம் முன்னால் வந்து நிறுத்துவார்' என நாள்கள் நகரக் காத்திருக்கின்றன.

இன்றைய நாளில் பவுல் நமக்கு அழகான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இயேசு சொல்லும் உருவகங்களில் விந்தையான உருவகம் ஒன்று உண்டு. ஒரு வீட்டிலிருந்து வெளியேறுகிற பேய் திரும்பி வந்த அந்த வீட்டைப் பார்க்கும் போது அந்த வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. அது போய் வேறு ஏழு பேய்களைக் கூட்டிவந்து அந்த வீட்டில் குடியிருக்க, அவரின் முந்தைய நிலையை விட பிந்தைய நிலை மோசமாகிறது. ஏன்? அந்த வீட்டுக்காரர் செய்த தவறு என்ன?

ஒரு நாள் கூட்டி அழகுபடுத்தினால் போதாது. தொடர்ந்து வீட்டைக் கூட்டிப் பத்திரமாகக் காவல் காக்க வேண்டும்.
பவுல் இதைத்தான் செய்கிறார்.

புதிய குழுமத்தை உருவாக்கினால் மட்டும் போதாது என நினைக்கின்ற அவர், அதை தொடர்ந்து சந்தித்து உறுதிப்படுத்துகின்றார். இப்படி அவர் இரண்டாம் முறை போகும்போது அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களில் புதியவர்களைச் சந்திக்கவும் முடியும்.

மருத்துவத்திலும், ஒரு மாத்திரை கோர்ஸ் எடுக்கும்போது 'ஃபாலோ அப்' மிகவே அவசியம். ஒரு மாத்திரை அதை எடுப்பவரின்மேல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய இது உதவும்.

ஆக, நற்செயல்களைத் தொடங்குவோம். தொடங்கும் நற்செயல்களை உறுதிப்படுத்துவோம்.

பவுல் இப்படி இருக்க, அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் தங்களைச் சேராத அப்பொல்லோ என்பவரைச் சந்தித்து அவரை ஊக்கப்படுத்துகின்றனர். அவர் தங்களைவிட பெரியவர் என்று ஒதுங்கிச் செல்லாமல் அல்லது பொறாமை கொள்ளாமல் ஊக்கப்படுத்துகின்றனர்.

இதுவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கலாம்.

2 comments:

  1. கல்வியாண்டின் முதல் நாள். மலரும் நினைவுகளாய் விரிகிறது என் எண்ண ஓட்டம். இந்தக்கால சிறுசுகள் அளவுக்கு இல்லை எனினும்,அன்று புதிதாய் கிடைத்த பல விஷயங்கள்....புது பை,புது பேனா, புது பென்சில்,புது நண்பிகள்...டீச்சர் கூட புதுசுதான்.அந்தக்காலத்தோடு அப்படியே உறைந்துபோயிருக்கலாமோ!(freeze) என்று தோன்றுகிறது.எனக்கென்னாச்சு? தந்தை என்னத்தையோ சொல்லவந்தால் என் மனம் வேறெங்கோ செல்கிறது. ஆமாம்!.. விந்தையான உருவகம் தான்.பல பேர் இந்த உருவகத்தை அவரவர்களுக்கு சாதகமாக்கிப் பேசக் கேட்டுள்ளேன்.இந்த உருவகம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ரொம்ப சிம்பிள். ஒரு விதையை விதைத்து விட்டோம்; இனி தானே அது தன்னைக்கவனித்துக் கொள்ளும் என்றிராமல் அந்த விதை விருட்சமாகிப் பலன் தரும் வரை அது நம் நேரடிக்கண் பார்வையில் இருக்க வேண்டும்.இலையெனில் அந்த விதையை நாயோ,நரியோ சாப்பிட்டுவிடும் என்கிறார் தந்தை.ஒரு பெரிய காரியம் ஆரம்பிக்கையில் கூடவே ஒரு குட்டி விஷயத்தையும் சேர்த்துக்கொள்வோம் ....அதை பலப்படுத்த. நன்றாகப் படித்து,நன் மதிப்பெண் பெறும் மாணாக்கர் அதைப் புரியாத நான்கு பேருக்கு சொல்லித்தந்தால் அவர்கள் கற்றதன் அஸ்திவாரம் இன்னும் பலப்படுமில்லையா?...அதுமாதிரி. அக்கில்லாவும்,பிரிஸ்கில்லாவும் போல் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள், கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடங்கள் ஏராளம்.அவற்றில் பாதியை கடைபிடிப்பதற்கே ஒரு வாழ்க்கை போதாதென்று எண்ணுகிறேன். நல்ல விஷயங்களை நன்றே செய்வோம்; அவற்றை இன்றே செய்வோம். புது கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கக்காத்திருக்கும் அத்தனை மாணவச்செல்வங்களுக்கும்.....ஏன் அனைத்துத் துறைகளிலும் இருப்பவர்களுக்கும் சேர்த்தே என் வாழ்த்துக்களும்! செபங்களும்!! தந்தைக்கும் சேர்த்துத்தான்!!!

    ReplyDelete