Monday, October 4, 2021

நல்ல பங்கு

இன்றைய (5 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 10:38-42)

நல்ல பங்கு

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், நிலைவாழ்வு பெறுவதற்கான இரு முதன்மையான கட்டளைகளை இயேசு முன்மொழிந்தார். பிறரை அன்பு செய்வதற்கான உருவகமாக நல்ல சமாரியரைத் தருகின்றார். தொடர்ந்து லூக்கா பதிவு செய்யும் நிகழ்வு கடவுளை அன்பு செய்வதைப் பற்றியதாக இருக்கின்றது. இதை ஓர் உருவகமாக அல்லாமல் நிகழ்வாகப் பதிவு செய்கின்றார்.

இயேசு பெத்தானியாவுக்கு வருகின்றார். அங்கே மார்த்தா தம் வீட்டில் அவரை வரவேற்கின்றார். இயேசுவைக் கவனிப்பதில் மிகவும் அக்கறை காட்டுகின்றார். அந்தப் பணியில் தான் தனியாக விடப்பட்டதாக உணர்கின்றார். மரியாவோ இயேசுவின் காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இயேசு மரியாவின் செயலைப் பாராட்டுகின்றார்.

இங்கே இரு வகை விருந்தோம்பலைக் காண்கின்றோம். முதல் வகை விருந்தோம்பலில், விருந்திற்கு அழைத்தவர் விருந்தினருக்குப் பரிமாறுகின்றார். அதாவது, மார்த்தா இயேசுவுக்குப் பரிமாறுகின்றார். இரண்டாம் வகை விருந்தோம்பலில், விருந்துக்கு அழைத்தவர் விருந்தினரால் பரிமாறப்படுகின்றார். அதாவது, மரியா இயேசுவால் பரிமாறப்படுகின்றார்.

ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது, அவருடைய காலடிகளில் நாம் அமர, அவர் நமக்குப் பரிமாறுவது. 

முதல் வகை விருந்தோம்பலில், விருந்தினர், பெறுகின்ற நிலையில் (receiving end) இருக்கின்றார்.

இரண்டாம் வகை விருந்தோம்பலில், விருந்தினர், தருகின்ற நிலையில் இருக்கின்றார்.

நம் இறைவன் பெறுகின்ற நிலையில் இருப்பவர் அல்லர். அவர் நிறைவாக இருப்பதால் அவருக்கு நாம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. குறைவானவர்களாக இருக்கின்ற நாம் அவரால் நிறைவுசெய்யப்பட வேண்டும். இதுவே மேன்மையான நிலை.

முதல் வகை நிலையில், விருந்தினர் உயர்ந்த நிலையில் இருக்கின்றார். அதாவது, நின்றுகொண்டிருக்கின்றார். அழைக்கப்பட்டவர் அமர்ந்திருக்கின்றார். 

இரண்டாம் வகை நிலையில், விருந்துக்கு அழைத்தவர் அழைக்கப்பட்டவரின் காலடிகளில் அமர்ந்து, மற்றவரை உயர்த்துகின்றார்.

ஆக,

இறைவனால் நாம் பரிமாறப்படாத வரை, நம் வயிறுகள் என்றும் காலியாகவே இருக்கும்.

இறைவனை, பெறுகின்ற நிலையில் வைத்து, நாம் அவருக்குத் தர முயற்சிக்கும்போதெல்லாம் நம் வாழ்வில் பரபரப்பும், கவலையும்தான் மிஞ்சும்.

இறைவனைத் தாழ்த்தி, நம்மை நாம் உயர்த்தினால் நம் உறவுநிலைகளில் தனிமையே மிஞ்சும்.

இயேசுவைத் தன் வீட்டுக்குள் அழைத்து விருந்து பரிமாறினார் மார்த்தா.

ஆனால், ஆண்டவரின் காலடிகளில் அமர்ந்தார் மரியா.

மார்த்தா, வந்த விருந்தினரில் இயேசுவைக் கண்டார். மரியாவோ, ஆண்டவரைக் கண்டார்.

இயேசுவைக் காணும் நிலையிலிருந்து ஆண்டவரைக் காணும் நிலைக்குக் கடத்தலே சிறந்த பங்கு. அந்தப் பங்கு நம்மிடமிருந்து எடுக்கப்படாது. ஏனெனில், அது தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்.


1 comment:

  1. மார்த்தா- மரியா இயேசுவை அன்புசெய்வதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர்.அதை வெளிப்படுத்தும் விதத்தில் சிறு வேறுபாடு.அவ்வளவே! உண்மைதான் ‘ விருந்தோம்பல்’ என்பது ‘ அவர்’ காலடிகளில் அமர்ந்து, அவரைப்பேச வைத்து நாம் செவிமடுப்பது.அவர் பெறுகிறவரா? தருகிறவரா? என்ன சந்தேகம்? நிறைவாக உள்ள அவர் நமக்கு அள்ளிக் கொடுக்கும் நிலையில் இருக்கிறார். பெறுபவர் நாம் தான் அவர் காலடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
    மார்த்தா வந்த விருந்தினரில் இயேசுவைக்கண்டார்.மரியாவோ ஆண்டவரைக்கண்டார்.
    ஆண்டவரைக் காணும் நிலைக்கு நாம் கடந்து செல்வது தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்….அருமை!
    தந்தையால் பலமுறை தரப்பட்ட பதிவு எனினும், செய்திகளைப்படம் பிடித்துக் காட்டுவதில்தான் எத்தனை கோணங்கள்! தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete