Monday, February 6, 2017

கழுவாத கைகள்

பாலைவனத்தில் பயணம் செய்துவிட்டு வீட்டிற்குள் வரும் ஒருவர் கைகளைக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். அதுதான் சுகாதாரம்.

ஆனால், வெளியில் பயணம் செய்யாத ஒருவர் சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிவிட்டு அமர்ந்தால் அது மரபு.

நாலு பேரு நாலு நாள்கள் செய்வது எளிதாக மரபாகிவிடுகிறது.

பூசை வைக்கும் குரு காணிக்கையை ஒப்புக்கொடுத்ததும் கைகளைக் கழுவுகிறார்.

எப்படி வந்தது இந்த மரபு?

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பலி உருவம் பெறத் தொடங்கிய வேளையில் நிறையப் பேர் காணிக்கை கொண்டுவந்திருக்கலாம். ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு, தானியம் என வந்த காணிக்கைகளை குரு வாங்கியிருப்பார். இப்படி வந்த காணிக்கைகள் அவருடைய கைகளில் பட்டு அழுக்கானதால் கைகளைக் கழுவிவிட்டு திருப்பலியைத் தொடர்ந்திருக்கலாம்.

ஆனால், இன்று கைகள் கறை படும் அளவிற்கு காணிக்கைகள் வருவதில்லை.

இருந்தாலும் நாம் கைகளைக் கழுவுகின்றோம்.

இப்போது அதே செயலுக்கு புதிய அர்த்தம் கொடுத்து, 'என் பாவங்களைக் கழுவி என்னைத் தூய்மையாக்கும்' என்று குரு செபிக்க ஒரு செபத்தையும் கொடுத்து, இதே தண்ணீர் நம் அக அழுக்கை அகற்றுகிறது என்ற இறையியலையும் புகுத்திவிட்டோம்.

மரபை மீறுவதற்கு நாம் பயப்படுகிறோம். ஏனெனில் மரபைக் கடைப்பிடிப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. புதியதாக எதுவும் சிந்திக்கத் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றை அப்படியே பின்பற்றினால் போதும். மேலும் மரபைப் பின்பற்றும்போது மற்றவர்களும் நம்மை எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் இந்த மரபினால் பாதிக்கப்படும் மானுடம் இருக்கத்தான் செய்கிறது.

என் வீட்டு வாட்ச்மேன் சைக்கிள் ரிப்பேர் ஆகி உருட்டிக் கொண்டே போகிறார்.

அவருக்கு 50 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் அனுப்பலாம் என நினைத்தால்,

உடன் வந்தவர், 'அப்படிக் கொடுக்காதே! அதுவே பழக்கமாயிடும்!' என்று எச்சரிக்கை செய்கிறார்.

அப்படி என்றால் நல்லது செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளல் கூடாதா?

மரபு, வழக்கம், பழக்கம் என நாம் நினைக்கும் பல நம்மை அடிமையாக்கி விடுகின்றன.

நாளைய முதல் வாசகத்தில் இறைவனின் படைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம்.

படைப்பின் ஒவ்வொரு நாளும் புதுமை நிகழ்கின்றது. அங்கே மரபும், வழக்கமும், பழக்கமும் இல்லை.

மரபு நம் படைப்புத்திறனையும் அழித்துவிடலாம்.

கொஞ்சம் கவனமாயிருக்கணும் பாஸ்!

3 comments:

  1. சிறு வயதில் திருப்பலியில் குருவானவரின் ஒவ்வொரு செயலுக்கும் என்ன அர்த்தம் என சொல்லிக்கொடுத்துள்ளார்கள். அதில் பிலாத்து இயேசுவை இழுத்து வந்த கூட்டத்தினரைப் பார்த்து" இவன் விஷயத்தில் நான் சம்பந்தமற்றவன்" என்பதை நினைவுகூற கைகழுவுவதாக்க் கேட்ட ஞாபகம்.ஆனால் இன்று தந்தை கூறும் "என் பாவங்களைக் கழுவி என்னைத் தூய்மையாக்கும்" எனும் வார்த்தைகளும் அர்த்தம் சேர்பப்பதாகத் தான் தோன்றுகிறது.மந்தையோடு சேராத ஆட்டைப் 'பிரிந்து போன' எனும் அடைமொழி தாங்கி நிற்பது போல் மரபை விட்டு விலகுபவர்களையும் இந்த சமூகம் அந்நியமாகத்தான் பார்க்கிறது." நமக்கேன் வம்பு" என்று நினைப்பவர்களே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.ஆனாலும் " அடிக்க அடிக்க அம்மியும் நகரும்" என்பது போல் இன்று நாம் புதிதாக செய்யும் ஒரு நல்ல காரியம் நாளை மரபாக மாறி ஏற்றுக்கொள்ளப்படலாம்.அடுத்தவருக்காக வேண்டாம்...' இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி தருகிறது' என செய்ய ஆரம்பித்தால் மரபும் வேண்டாம்! மக்களும் வேண்டாம்!! எனத்தோன்ற ஆரம்பித்து விடும்.ஆகவே நாலு பேருக்கு நன்மை பயக்கும் எதையும் நன்றே செய்வோம்! அதை இன்றே செய்வோம்! தந்தையே! தாங்களும் கூட அந்தப் பெரியவருக்கு 50 ரூபாய் கொடுத்திருக்கலாம்..தப்பில்லை.கண்டிப்பாக நாங்களும் இனி கவனமாயிருப்போம் பாஸ்! தூவிய நல்ல விதைகளுக்காக வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous2/07/2017

    Good reflection Yesu

    ReplyDelete
  3. Anonymous2/07/2017

    Good reflection Yesu

    ReplyDelete