Sunday, February 5, 2017

ஆடைகளின் ஓரங்கள்

'அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.'

(காண். மாற்கு 6:53-56)

நம் ஆடைகளின் ஓரங்கள் ஆச்சர்யமானவை.

ஓரங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

ஓரத்தில தான கிழிஞ்சிருக்கு,

ஓரத்தில தான அழுக்காயிருக்கு என அவைகளை நாம் கண்டுகொள்வதில்லை.

ஓரத்தை வெட்டி எடுத்தாலும் பரவாயில்லை.

ஆனால், ஆடையின் ஓரங்களுக்கும் நலம்தரும் குணம் உண்டு என்பதைக் கண்டுகொள்கின்றது இயேசுவைப் பின்பற்றி வந்த கூட்டம்.

அவர்கள் தொட்டவுடன் பெற்ற நலம் ஆடையில் இருந்ததா?

இல்லை.

அவர்களின் நம்பிக்கையில்தான் இருந்தது.

நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு ஓரங்களும் மையமே.

இன்று நாம் கடவுளை 'மையப்படுத்தியே' பார்த்துப் பழகிவிட்டோம். ஆகையால் அவரை விளிம்புகளில் பார்க்க நம்மால் முடிவதில்லை.

'நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்'  என்ற அழகிய செபத்தை என் நண்பர் பெர்னார்ட் அவர்கள் அனுப்பியுள்ளார். இதன் ஆசிரியர் ஜான் மெக்கின்தி. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்கிறேன் இங்கே:

'என் ஆசை உன்னைப் பார்க்க விரும்புவது.
உண்மையில் நீ யார் என்பதை.

உன்னைப் பற்றி நான் வாசிக்கும் போது என் மனம் உருவாக்கும் உருவத்தை அல்ல.
'வார்த்தை' என்ற வார்த்தையை நான் வாசிக்கும் போது என்னுள் உருவாகும் உணர்வை அல்ல.
என் தனிமையிலும், விரக்தியிலும், பயத்திலும், பாவத்திலும்என் மனம் கற்பனை செய்யும் கடவுளை அல்ல.

அடுத்தவர்கள் உன்னைப் பற்றிச் சொன்ன உன்னை அல்ல.
என் இளமைப் பருவத்தில் நான் உன்னைப் பின்பற்றத் தொடங்கியபோது
மேசை, கல்லறை, கல்லறைக்கு அப்பால் என்று நான் பின்பற்றிய உன்னை அல்ல.

மிக நேர்த்தியாக தலை சீவிய போதகர்கள் போதிக்கும் உன்னை அல்ல.
உன்னைப் பற்றி சண்டை போடுபவர்கள் வேகமாகச் சொல்லிக் கொள்ளும் உன் பெயரை அல்ல.

என் ஆசை எல்லாம் உன்னைச் சந்திப்பதே.
யார் கையிலும் சிக்கி கசங்கி விடாத உன்னைச் சந்திப்பதே.
அதிரச் செய்யும் உன்னை.
உன் எல்லா குணங்களாலும் அதிரச் செய்யும் உன்னை.

எல்லாப் புயல்களைவிட வலிiயான,
ஆனால் மிகவும் மென்மையான,
மிக நீண்ட பாலைநிலம் ஆன,
ஆனால் மிகவும் மெல்லிய மணல் துகளாக,
இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களைவிட கூட்டாக,
இருந்தாலும் ஒரு சின்ன புள்ளி மற்றும் டிஎன்ஏவின் நுணி போல.

இப்படிப்பட்டன உன்னைத்தான் நான் சந்திக்கவும், கேட்கவும் விரும்புகிறேன்.
நீ என்னைத் தேடுகிறாயோ,
அல்லது நான் உன்னைத் தேடுகிறேனோ,
அல்லது நீயும் நானும் ஒருவரை ஒருவர் சேர்ந்து தேடுகிறோமோ,
உன்னைச் சந்திக்கணும் நான்.

அந்த ஒரு சந்திப்பில்
நான் என்னையே நிறைவு செய்வேன்.
அந்த நிறைவே என் தொடக்கமாக இருக்கும்.

ஒளியின் ஒளியே
இந்த இருளின் ஆடைக்குள் வா!
வந்து ஒளிர்!
உனக்குப் பயப்படுகிறேன் நான்!
உன்னைக் காதலிக்கிறேன் நான்!

எனக்குப் பயப்பட ஒன்றுமில்லை.
ஆனால் காதலிக்க எல்லாம் இருக்கிறது...

இப்போதே வா!'

2 comments:

  1. " நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு ஓரங்களும் மையமே".... இன்றையப் பதிவின் மையப்புள்ளி மட்டுமல்ல; அழகான புள்ளியும் கூட. இயேசுவைப் பின்பற்றி வந்த கூட்டம் ஆடையின் ஓரங்களுக்கும் நலன் தரும் குணம் உண்டு என்று நம்பியதாலேயே அவரின் பின்னே போக முடிந்தது.ஆனால் அவர்களுக்கு சுகம் தந்தது ஆடையின் ஓரமோ,மையமோ இல்லை...அவர்களது நம்பிக்கை மட்டுமே என்பது அவர்களுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை.இத்தகைய நம்பிக்கை நம்மில் பிறக்கவும் வழி உண்டு..நாம் இறைவனை எங்கோ ஒய்யாரத்தில் உறைபவர் என எண்ணாமல்,அவரை ஆலயத்திலும்,செபக்கூட்டங்களிலும் மட்டுமே தேடாமல் அவர் என்னில்,எனக்குள் உறைபவர் என நம்பினால் நம்மாலும் நமக்கு அடுத்திருப்போரை நலன்களால் நிரப்ப முடியும்; அவர்களின் உதட்டோரங்களில் ஒரு சிறு புன்னகையையாவது மலரச் செய்ய இயலும்.முயன்றுதான் பார்ப்போமே!
    தந்தையின் நண்பர் அனுப்பிய அந்த செப வரிகளின் தமிழாக்கம் அருமை." நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்".... ஒருவர் மீது மற்றொருவருக்கு உள்ள பிரியத்தை வெளிப்படுத்த அன்பு,ஆசை,பாசம்,காதல்,கருணை....இப்படி எத்தனையோ வார்த்தைகளிருப்பினும் என்னைத் தொட்ட, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான வார்த்தை " வாஞ்சை". இதை யாரும் யார் மீதும் வைக்கலாம்.இந்த வாஞ்சையோடு இறைவனைத் தேடும் ஒருவரின் மனத்தின் வெளிப்பாடு தான் இந்த வரிகள் என்பது என் புரிதல்.இறைவனைத் தேடும் நாம்,அவரைத்தொட விரும்பும் நாம் அதே வாஞ்சையோடு நமக்கடுத்திருப்போரின் மனங்களையும் தேடுவோம்; அந்த மனங்களைத் தொட முயற்சிப்போம். கொடுத்த அழகான வரிகளுக்காக,அவை சுமந்து வரும் செய்திகளுக்காகத் தந்தைக்கும்,அவர் நண்பருக்கும் என் வாழ்த்துக்கள்! இறைவன் தங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete