Tuesday, February 14, 2017

மரங்களைப் போல

'மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகின்றார்கள். ஆனால், நடக்கிறார்கள்' என்று சொன்னார். (காண். மாற்கு 8:24)

மாற்கு நற்செய்தியில் வரும் இந்தப் பார்வையற்றவர் எனக்குள் அதிக ஆச்சர்யத்தைத் தூண்டுபவர்.

இவர் பிறவியிலேயே பார்வை அற்றவராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால் மரங்கள் எப்படி இருக்கும், மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்திருக்கும் இவருக்கு.

இவர் ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த பார்வையற்ற மனிதரை இங்கே ஓர் உருவகம். மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் சீடர்களை வரையறுக்கப் பயன்படுத்தும் உருவகமே இவர்.

எப்படி?

'பார்வை' என்பது இங்கே 'நம்பிக்கை'

மாற்கு நற்செய்தியில் சீடர்களின் நம்பிக்கை மூன்று நிலைகளில் வளர்கிறது:

அ. இயேசுவின் மேல் முற்றிலும் நம்பிக்கை அற்று இருக்கிறார்கள். அதாவது, இதுதான் முழுவதுமான பார்வையற்ற நிலை.

ஆ. கொஞ்சம் நம்பிக்கை. கொஞ்சம் சந்தேகம். இதுதான் இன்றைய பார்வையற்றவரின் மனநிலை. இருக்கிறது போல இருக்கிறது. ஆனா இல்ல. மரங்கள் போல இருக்கிறார்கள். ஆனால் மனிதர்கள். அசையாமல் நிற்கிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்.

இ. முழு நம்பிக்கை. 'நீரே இறைமகன்'. இந்ந நம்பிக்கையை சீடர்கள் சார்பாக வெளிப்படுத்துபவர் பேதுரு. மாற்கு நற்செய்தியின் முதல் 8 அதிகாரங்களும் பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை நோக்கி நகர்வதாகவே இருக்கிறது. இதுதான் முழுப்பார்வை. இதையே மாற்கு நற்செய்தியாளர், 'அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்' (8:25) எனப் பதிவு செய்கின்றார்.

இறுதியாக, இயேசு அவரிடம், 'ஊருக்குள் நுழைய வேண்டாம்' என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார் - என்று நிகழ்வை நிறைவு செய்கிறார் மாற்கு.

அப்படின்னா அவர் வெளியூர்க்காரரா மிஸ்டர் மாற்கு?

அல்லது அவரின் உருவகத்தை நிறைவு செய்வதற்காக அவரை அப்படியே அனுப்பிவிட்டீர்களா?

நிற்க.

நாம் கடவுளைப் பார்க்கும் ஒரு பயணம் நம்பிக்கைப் பயணம்.

முதலில் ஒன்றும் தெரியாது.

பின் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

அப்புறம் முழுமையா தெரியும்.

இதை நம் சக உறவுகளுக்கும் பொருந்தும்.

அன்புடை நெஞ்சங்கள் நெருங்கும்போது முதலில் ஒன்றும் தெரியாது. பின் கொஞ்சம் தெரியும். அப்புறம் முழுமையாகத் தெரியும்.

சில நேரங்களில் நாம் மனிதர்களை வேண்டுமென்றே மரங்கள் போல பார்க்கின்றோம்.

அது தவறு. சரியா?

1 comment:

  1. நாம் இறைவனை,மனிதர்களைப் பார்க்கும் ' பார்வையை' ' நம்பிக்கை' யுடன் ஒப்பிடுகிறார் தந்தை.இங்கு குறிப்படப்படும் மூன்று வகையான நம்பிக்கைகளில் அந்த இரண்டாவது வகை தான் நம்மில் பலருக்கு இருக்கிறது.ஆம்...நம்பிக்கை இருப்பது போல் தோன்றும்.ஆனாலும் எப்படி நம்புவது எனும் கேள்வியும் கூடவே நம்மை அலைக்கழிக்கும். இறைவனைப் பார்க்கும் பார்வையிலும் பல சமயங்களில் இப்படித்தான். சில தருணங்களில் நம் வேண்டுதல் கேட்கப்படாமல் போவதற்கும் இந்த அரைகுறை நம்பிக்கையே காரணம்.மஞ்சள் காமாலைக் காரனுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரியும் என்பது வழக்கு.அப்படி இல்லாமல் முதலில் நாம் அடுத்தவரின் நம்பிக்கைக்குரியவராவோம்.பிறகு நம் இறைவனையும், அன்புடை நெஞ்சங்களையும் முழுமையாக நம்புவோம்; அவர்களை நம்மவராக ஏற்றுக்கொள்வோம்.கண்டிப்பாக மனிதர்களை மரங்களைப் போல் பார்ப்பதைத் தவிர்ப்போம்.சரியா?.. சரியே தந்தையே!!!

    ReplyDelete