Sunday, February 12, 2017

வயல்வெளி

'நாம் வயல்வெளிக்குப் போவோம்' (காண். தொநூ 4:1-15, 25)

ஆதாம் - ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோரின் முதல் பிள்ளைகள் காயின் - ஆபேல், நம் மூத்த சகோதரர்களின் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை நாம் நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

ஆபேல் ஆடு மேய்ப்பவர். காயின் விவசாயம் செய்பவர். மனுக்குலத்தின் தொடக்ககால பணிகள் இவை இரண்டும்தான். இரண்டு பேருமே ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றனர். ஆபேலின் பலி ஏற்கப்படுகிறது. காயினின் பலி நிராகரிக்கப்படுகின்றது. காயினுக்கு பொறாமை வந்துவிடுகிறது. தன் சகோதரன் ஆபேலைக் கொன்றுவிட முடிவெடுக்கின்றார்.

'வயல்வெளிக்குப் போவோம்' என்கிறார் காயின்.

தன் வாழ்விடத்திற்கு தன் தம்பியை அழைக்கிறார் காயின்.
வயல்வெளியில் இருக்கும்போது அவர்மேல் பாய்ந்து கொல்கின்றார் காயின்.

'வயல்வெளி' விவிலியத்தில் ஒரு முக்கியமான இடம்.

யோசேப்பு தன் சகோதரர்களைக் கண்டது வயல்வெளியில்தான்.

மோசே எகிப்தியன் ஒருவனைக் கொன்றது வயல்வெளியில்தான்.

வயல்வெளி என்பது வெட்ட வெளி.

சின்ன வயசுல எங்க ஊருல வயல்காட்டு வழியாக சுத்தித் திரிவதுண்டு. வயல்வெளி இயல்பாகவே பயத்தைத் தரும்.

காயின் எதற்காக வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தார்?

தன் சகோதரனை காட்டு விலங்கு கொன்றுவிட்டது என்று காட்டவா?

அல்லது தன் இடம் என்பதால் தனக்கு பாதுகாப்பு என்றா?

எப்படி இருந்தாலும், வயல்வெளியில் இருவர் சாட்சிகளாக திகழ்கின்றனர். மேலே வானம். கீழே பூமி. வானமும், வானத்தில் உறையும் கடவுள் மேலிருந்து இந்தக் கொலையைப் பார்க்க, பூமி தன் வாயைத் திறந்து இரத்தத்தைக் குடித்துவிடுகிறது.

எது தனக்கு பாதுகாப்பு என காயின் நினைத்தாரோ அதுவே அவர் காலுக்குக் கண்ணியாகிவிடுகிறது.

எனக்கு இங்கே ஒரு கேள்வி:

தனக்கு ஏற்புடைய பலி செலுத்தி தனக்கு ஏற்புடையவராக இருந்த ஆபேலை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

'ஆபேல்' என்ற வார்த்தையிலிருந்து 'ஹாவேல்' என்ற வார்த்தையை உருவாக்கும் சபை உரையாளர் 'ஹாவேல் ஹவாலிம்' ('வீணிலும் வீண்') என்கிறார். ஆபேல் அநியாயமாகக் கொல்லப்பட்டதன் பின்புலத்தில்தான், 'விதித்துள்ளபடிதான் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும், பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும், மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும், பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (சஉ 9:2) என்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நம் பலி கடவுளின் மனதை மாற்றுவது இல்லை.

நிற்க.

நாம் கற்கும் பாடம் என்ன?

நம் அண்ணனே கூப்பிட்டாலும் நமக்கு உரிமை இல்லாத இடத்திற்குச் சென்றால் நாமும் அங்கே மடிய வாய்ப்புண்டு.

ஆபேல் பாய் தன் ஆடுகளோடு இருந்திருக்கலாம்!

'வயல்வெளிக்குப் போவோம்!'

2 comments:

  1. மிகவும் சீரியஸான ஒரு விஷயத்தைத் தனக்கே உரித்தான ஸ்டைலில் சுவைபடத் தந்துள்ளார் தந்தை.தான் செய்யப்போகும் செயலுக்கு சாட்சிகள் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தம்பி ஆபேலை வயல்வெளிக்குக் கூட்டிச்சென்று கொலை செய்கிறார் அண்ணன் காயின். அவனது நினைப்பு மண்ணைக் கவ்வுகிறது." மேலே வானமும், அதில் உறையும் கடவுளும்,கீழே காயினின் இரத்தத்தைத் தனதாக்கிக்கொள்ளப்போகும் பூமியும் இவன் செயலுக்கு சாட்சிகளாய் நிற்கின்றனர் என்கிறார் தந்தை.அதுமட்டுமல்ல..." தனக்கு முறையாக பலி செலுத்தி தனக்கு ஏற்புடையவராக இருந்த ஆபேலைக் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?" எனும் கேள்வியையும் உடன் வைக்கிறார். "என்னதான் அவருக்கு ஏற்புடையவராக நமது நடத்தை இருப்பினும், நமது செபங்களும்,பலிகளும் கடவுளின் மனத்தை மாற்றுவதில்லை; எல்லாமே நம் விதிப்படிதான் நடக்கிறது" என்பதும் கூட தந்தையின் வாதமாகத் தெரிகிறது.பிறக்கும் எந்த ஒரு உயிரும் இறப்பை சந்திக்க வேண்டுமென்பது இயற்கையின் கட்டாயம்.இறப்பு என்ற ஒன்று இருந்தால்தான் பிறப்புக்கே அர்த்தம் என்பது நாமறிந்த ஒன்றுதான். தமக்கு உகந்தவர்கள் என்பதற்காக யாருக்கேனும்,'சாகாவரம்' தரப்படுகிறதா என்ன?விதி என்றும்,தலையெழுத்து என்றும்,இறைவன் சித்தம் என்றும் பலபெயர்களில் கூறப்பட்டாலும் மனிதன் இயற்கையோடு இணைந்தே வாழ்கிறான். ஒருவனுக்கு 'இயற்கை' என்பது இன்னொருவனுக்கு 'கடவுள்' எனப்படுகிறது. நான் இங்கு 'இறையியல் எல்லாம் பேசவில்லை.ஒரு பொதுநிலையினரின் மிகச் சாதாரண நம்பிக்கை சொல்லக்கூடியதைத் தான் எடுத்து வைக்கிறேன்.இது தந்தைக்கு மட்டும் தெரியாதா என்ன? முரண்பாடாகப் பேசி நமது விசுவாசத்தை பலப்படுத்துகிறாராம்.எது எப்படியோ " அண்ணனே கூப்பிட்டாலும் நமக்கு உரிமை இல்லாத இடத்திற்கு நாம் செல்லக்கூடாது" எனும் அரியதொரு தத்துவத்திற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Anonymous2/13/2017

    Good reflection Yesu

    ReplyDelete