Tuesday, November 25, 2014

விண்ணைத் தாண்டி வருவாயா!

நேற்று இரவு கழகஸ்தானின் (ரஷ்யா) பைக்கனூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட் சோயுஸ் டிஎம்ஏ-15எம் என்ற விண்கலத்தை சுமந்து சென்றது. இதில் பயணம் செய்யும் மூன்று பேரில் இத்தாலி நாட்டைச் சார்ந்த பெண்ணும் ஒருவர். இத்தாலி நாட்டின் முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெரும் இவரின் பெயர் சமந்தா. நேற்று இரவு இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்வைப் பார்ப்பதற்காக விழித்தே இருந்தேன். அந்த விழிப்பு நேரத்தில் இந்த ராக்கெட் குறித்தும், வானில் சுற்றிக் கொண்டிருக்கும் 'வான்வெளி ஆய்வுக்கூடம்' பற்றியும், அது செயல்படும் முறை பற்றியும், அங்கே போகவும், திரும்பவும் செய்யவேண்டிய செய்முறைகள் குறைத்தும் எடுக்கப்பட்ட சில காணொளிகளை யூடியிபில் பார்த்தேன். மெய்ம்மறந்து போனேன்.

'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்று பாடக் கேட்டிருக்கிறோம். அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கண்டு வியந்து போனேன்.

வான்வெளி ஆய்வுக்கூடம் (இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்) என்பது ஒரு மனிதர்கள் வசிக்கும், பயணம் செய்து, பூமியைச் சுற்றி வரும் ஒரு செயற்கைக்கோள். அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், பிரேசில், ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வுக்கூடம் 1998ஆம் ஆண்டு முதல் 93 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருகிறது. இதன் மணிக்கு 27000 கிமீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஆய்வுக்கூடத்தின் எடை 450,000 கிலோகிராம். இதனுள் ஆறு பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த ஆய்வுக்கூடத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ தான் நேற்று இரவு புறப்பட்ட சோயுஸ். புறப்படும் போது ஒரு கத்தோலிக்கக் குருவானவர் வந்து தீர்த்தம் தெளித்து ஆசீர் அளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. நாம டூர் போறதுக்கு முன்னால பஸ் டயர்ல எலுமிச்சம் பழம் வைக்கும் நிகழ்வு போல இருந்தாலும், மனித வளர்ச்சி என்னதான் இருந்தாலும் அதையும் மிஞ்சிய சக்தி ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு நினைவூட்டுவதாகத் தான் இருந்தது. 10க்கு 10 அடி கேபினில் இன்னும் ஆறு மாதத்திற்கு இந்த மூன்று பேரும், அங்கு ஏற்கனவே இருக்கும் மற்ற மூன்று பேரோடு சேர்ந்து உண்டு, உறங்கி, இளைப்பாறி, வேலை பார்க்க வேண்டும்.

புவியின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லும் போது இவர்களின் உடலின் எடை திடீரென அதிகரித்துப் பின் படிப்படியாகக் குறைகின்றது. இந்த ஆய்வுக்கூடத்தில் இருக்கும் கிராவிட்டி ரொம்ப ரொம்ப மைக்ரோ. ஆகையால் இவர்கள் எப்போதும் மிதந்து கொண்டே தான் இருப்பார்கள். தக்காளி, கத்தி, பிரட், பட்டர் எல்லாம் மிதக்கும். வாரம் ஒரு முறை குளியல், நுரை வராத சாம்பு, கடித்துத் திண்ணும் டூத்பேஸ்ட், நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர், காதை அடைக்கும் 'கொய்ங்' சவுண்ட், கதிரியிக்கம், அடிக்கடி வந்து போதும் விண்கற்கள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இவர்கள் மனித உடலியல், கோளங்கள், விண்வெளி ஆய்வில் ஈடுபடுவர். இவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இவர்கள் எந்நேரமும் கீழுள்ள 12 ஆய்வுக்கூடங்களின் கட்டுப்பாட்டில் இருப்பர். ஒவ்வொரு நாளும் பத்து மணி நேரம் வேலை, இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி என இவர்களின் வாழ்க்கை இருக்கும்.

இந்த ஆய்வுக்கூடத்தின் ஒவ்வொரு ஸ்குருவுக்குப் பின்னாலும் ஒருவரின் மூளைத்திறன், உடல் திறன், உழைப்பு இருக்கிறது.

நாம் ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே வெற்றி கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தாலும், வானம் இன்னும் விரிந்து கொண்டே செல்கின்றது.

இந்த வான்வெளியோடு, பால்வெளியோடு, நம் பூமித்தாயின் அதிசயம், ஆச்சர்யம் இவற்றோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பெருமை கொள்ள எதுவும் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆச்சர்யம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு ஆச்சர்யம்.

நான் கண்டு ரசித்த காணொளிகளின் இணைப்பை இங்கே தருகின்றேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பாருங்கள். நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள்!

சமந்தா...விண்ணைத் தாண்டி சீக்கிரம் வா! எனக் காத்திருக்கிறது இத்தாலி!

Soyuz Launch Explained - Video 1 (11:30)

Soyuz Docking Explained - Video 2 (21:06)

Soyuz Undocking Explained - Video 3 (20:44)



1 comment:

  1. தந்தையின் புண்ணியத்தில் 'சோயுஸ்' விண்கலம் பற்றிய அனைத்துக் காணொளிகளையும் கண்டேன். பிரமிக்க வைக்கும் விஷயம்தான்.மனிதன் உட்பட ஒவ்வொரு படைப்பும்,அவனைச்சுற்றிய அத்தனையுமே ஆச்சரியங்கள்தான்; அதிசயங்கள்தான்.அவன்தான் அதை உணருவதில்லை.வானதூதர்களையும் விட மேலானவர்களாக நாம் படைக்கப்பட்டிருக்கும் காரணத்தால் மனிதன் இத்தனை அதிசயிக்கத்தக்க விஷயங்களைத் தன்னுள் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.ஆனால் அத்தனைக்கும் 'அர்த்தம்' கிடைப்பது நாம் ஆண்டவனை சரண்டையும் போது மட்டுமே! அதைத்தான் செய்துள்ளனர் அந்த விஞ்ஞானிகள்..புறப்படும்போது செபம்செய்து தீர்த்தம் தெளித்த கத்தோலிக்க குருவானவர் மூலம்.ஆம்...வானும் விண்வெளியும் 'அவரின் படைப்பே!'
    " நம், கூடவே நம் அருகிலிருக்கும் அதிசயங்கள் செய்யும் ஆண்டவனைப் போற்றுவோம்". தந்தையின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete