Thursday, November 20, 2014

நாய் வளர்க்கலயோ நாய்?

இன்று மதியம் கல்லூரியிலிருந்து மெட்ரோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மொபைலில் ஆனந்த விகடன் படிப்பதில் மும்முரமாயிருந்தேன். நான் ஏறிய நிறுத்தத்திற்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பெண்மணி பெரிய நாயோடு ஏறினார். இத்தாலியில் நாய் ஒவ்வொன்றும் கன்னுக்குட்டி அளவிற்கு இருக்கும். நாயைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. வேகமாக எழுந்து வேறு இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டேன். அங்கிருந்து இந்த நாயைக் கவனித்தேன். நாயைப் பிடித்துக் கொண்டு வந்த பெண்மணி இப்போது நான் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். தன் கையில் பிடித்திருந்த நீண்ட குச்சியை வேகமாக மடித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் புரிந்தது அவர் பார்வையில்லாதவர் என்று. பார்வையில்லாதவர்களுக்கு வழிகாட்டும் நாய்கள் இருப்பதாக என்றோ வாசித்தது இன்று நினைவிற்கு வந்தது.

'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படத்தில் கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் குரோட்டன்ஸ் செடி வளர்ப்பதில் கருத்து வேறுபாடு உண்டாகும். அப்போது கதாநாயகன் கேட்பார்: 'பணக்காரர்கள் குரோட்டன்ஸ் செடி வளர்ப்பது என்பது பூனையும், நாயும் வளர்ப்பதுபோல. குரோட்டன்ஸ் செடிகளை ஆடு, மாடுகள் கூட மேய்வதில்லை. பூனையும், நாயும் அப்படித்தான். அவைகளுக்கு உணவளிப்பதிற்குப் பதில் தேவையில் இருக்கும் நான்கு குழந்தைகளுக்கு உணவளிக்கலாம்!' இதற்கு கதாநாயகி, 'எல்லாருமே கத்தரிக்காய், புடலங்காய் என சாப்பாட்டுக் காய்கறிகளே உருவாக்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி இருக்கும். இந்த குரோட்டன்ஸ் செடியால எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள்? இதை வளர்க்கும் நர்சரி உரிமையாளர். இதற்கு தொட்டி செய்பவர். தொட்டியை இடமாற்றுபவர். இதற்கு உரம் தயாரிப்பவர். ஆக, எல்லாவற்றிலும் ஒரு பயன்பாடு இருக்கவே செய்கின்றது!'

எனக்குத் தெரிஞ்சு நான் பிறந்தது முதல் எங்கள் வீட்டில் பூனைக்குட்டி இருந்திருக்கிறது. ஒன்று காணாமற்போக மற்றொன்று கொண்டுவரப்படும். அந்தப் பூனையோடு தான் உண்பது, உறங்குவது என சின்ன வயது கழிந்தது. மதுரை குருமாணவ பயிற்சிக்குச் சென்ற பின்பும் வீட்டிற்குக் கடிதம் எழுதும் போது அதில் 'பூனைக்குட்டி நலமா?' என்று நான் எழுதுவேன் என்று என் குருமட அதிபர் அண்மையில் சுட்டிக்காட்டினார்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்து உண்டு. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் திருமணமான முதல் நாள் அன்று 'குழந்தை பெற்றுக்கொள்வதா' அல்லது 'நாய்க்குட்டி வளர்ப்பதா' என்று கணவனும் மனைவியும் அமர்ந்து முடிவெடுத்துக் கொள்வார்களாம். இந்த மனநிலை கொஞ்சம் ஓவர்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

நான் கேள்விப்பட்ட வரையில் ஒரு பெண்மணி தன் பூனைக்குட்டியை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கொண்டு போக முயலும் போது, அந்த பூனைக்குட்டி தப்பியோட அதை அடையாளம் கண்டுபிடிக்க லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அதைக் கண்டும் பிடித்து விட்டாராம்.
'பாசம்கிறது ஒரு வகையான கிறுக்குதான!' என்ற நீர்ப்பறவைகள் டயலாக் தான் நினைவிற்கு வருகிறது.

பொம்மைகள், விளையாட்டுச் சாமான்களை விட செல்லப் பிராணிகள் கொஞ்சம் உயர்ந்தவை தாம். நம் உணர்வுகளை அவைகள் புரிந்து கொள்ளவில்லையென்றாலும் அவைகளிடம் நாம் வெளிப்படுத்தலாம். அவைகள் நம்மை எதிர்த்துப் பேசுவதில்லை. சண்டை போடுவதில்லை.

ஒவ்வொரு செல்லப் பிராணியும் தனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்கின்றது. எங்கு சென்றாலும் திரும்பி தன் இடத்திற்கே வந்துவிடுகிறது. இது மனித இனம் செய்த ஒரு சாதனைதான்.

மற்றொரு பக்கம் பிராணிகளின் மேல் வன்முறை.

ஆனா ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நம்மைவிட வலுக்குறைந்தவர்களிடமே நம் வன்முறையைக் காட்டுகிறோம். சிங்கத்தை அடிங்களேன் பார்க்கலாம்! புலியை வாலைப் பிடித்துத் திருகுங்களேன்!

என்னதான் சங்கிலி, பெல்ட் போட்டு நாயை இத்தாலியில் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனாலும், எந்தப் பிடியும் இல்லாமல் நம்ம ஊர் யானைப் பாகன்கள் அவ்வளவு பெரிய யானையை வாக்கிங் கூட்டிட்டுப் போவதைப் பார்க்கும் போது, 'தம்பி! நீ இன்னும் வளரனும்!' என்று தான் இத்தாலியைப் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

சரி! இந்த பதிவினால் என்ன பயன்?

நாய், பூனையை மாதிரி இதுவும் சும்மா இருக்கட்டுமே! எப்பவுமே பயன்பாட்டை மட்டுமே பார்க்க வேண்டுமா?


1 comment:

  1. ஹலோஃபாதர்! என்ன இந்த வார வேலைப்பழு மிக அதிகமா? ' மூளைச்சோர்வு' நம்மைத்தாக்கும்போது 'செல்லப்பிராணிகளை' நாடுவது சகஜம் தானே! அதைத்தான் தாங்களும் தங்களின் 'மலரும் நினைவுகளோடு' வெளிப்படுத்தியுள்ளீர்கள்.நன்றாக ஓய்வெடுத்துப் புதுப்பொலிவோடு வாருங்கள்...காலை வணக்கங்கள்!!!!

    ReplyDelete