Saturday, January 28, 2023

இவர் யாரோ?

இன்றைய இறைமொழி 

சனி, 28 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம்

எபி 11:1-2,8-19. மாற் 4:35-41.

இவர் யாரோ?

நற்செய்தி வாசகம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் இயேசு தம் சீடர்களோடு கடற்கரையில் நிற்கின்றார். இரண்டாம் பிரிவில், அவர் தம் சீடர்களோடு கடல் நடுவே நிற்கின்றார். முதல் பகுதியில், இயேசு தாமே செயல்பாட்டை முன்னெடுக்கின்றார். இரண்டாம் பகுதியில், அவர் தூங்கிக்கொண்டிருக்கின்றார். சீடர்கள் அவரை எழுப்பிச் செயல்படுமாறு செய்கின்றனர்.

இந்த நற்செய்தி வாசகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உரையாடலை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். முதல் பகுதியில் இயேசு தம் சீடர்களிடம் பேசுகின்றார்: 'அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்!' சீடர்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறவும் புதிய கரையைக் கண்டுகொள்ளவும் அழைக்கின்றார்.

இரண்டாம் பகுதியில் நான்கு உரைகள் உள்ளன: (அ) சீடர்கள் இயேசுவை நோக்கிப் பேசுகின்றனர் – 'போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?' (ஆ) இயேசு கடலை நோக்கிப் பேசுகின்றார் – 'இரையாதே, அமைதியாயிரு!' (இ) இயேசு சீடர்களை நோக்கி – 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' (ஈ) சீடர்கள் தங்களுக்குள் - 'காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?' 

சீடர்கள் இயேசுவை 'போதகர்' என அழைக்கின்றனர். இங்குதான் முதன் முதலாக இயேசு இவ்வாறு அழைக்கப்படுகின்றார். அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இயேசுவின்மேல் தங்கள் கண்களைப் பதிய வைக்காமல், அமைதியற்ற கடலின்மேல் தங்கள் கண்களைப் பதித்ததால் பயத்தால் பரிதவிக்கின்றனர்.

இன்று நம் பார்வை எங்கே பதிந்திருக்கிறது? 

பேயோட்டும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி – அமைதியாயிரு - இயேசு கடலைக் கடிந்துகொள்கின்றார். கடல் என்பது இயற்கை மற்றும் தீமையை உருவகிக்கிறது. ஒரே நேரத்தில், இயேசு இயற்கையின்மேலும், தீமையின்மேலும் அதிகாரம் கொண்டவராக இருக்கின்றார்.

நம் வாழ்வில் தீமை மேலோங்கி நிற்கும்போது இயேசு அதன்மேலும் ஆட்சி செலுத்துகிறார் என்பதை நான் உணர்கின்றேனா?

இயேசு தம் சீடர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார். தங்கள் கண்முன்னே இயேசு நிறைய வல்ல செயல்கள் ஆற்றினாலும் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளத் தயங்குகின்றனர் சீடர்கள்.

சீடர்கள் அச்சப்படுகின்றனர். அச்சம் நம்பிக்கையின் முதல் எதிரி ஆகும்.

இறுதியில், கடல் அமைதியாகிறது. சீடர்களின் உள்ளத்தில் புயல் வீசத் தொடங்குகிறது. 'இவர் யாரோ?' என்னும் கேள்வி அவர்களை அலைக்கழிக்கின்றது.

முதல் வாசத்தில், 'நம்பிக்கை' என்னும் சொல்லை வரையறுக்கின்ற ஆசிரியர், நம்பிக்கையால் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொண்ட நல்லோர்களின் பெயர்களைப் பதிவு செய்கின்றார்.

இன்றைய நாளில், நாம் அக்வினா நகர் புனித தோமாவை நினைவுகூர்கின்றோம். இறைவன், மனிதர்கள், உலகம் என்னும் மறைபொருள்களைக் காண முயன்ற இவர் இறுதியில், இறைவன் என்னும் மறைபொருள்முன் சரணாகதி அடைகின்றார்.


No comments:

Post a Comment