Wednesday, January 25, 2023

பொருளும் பயனும்

இன்றைய இறைமொழி 

வியாழன், 26 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம்

1 திமொ 1:1-8. மாற் 4:21-25.

பொருளும் பயனும்

'பேனா எதற்குப் பயன்படுகிறது?' - என்று ஒரு கேள்வி நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்டது.

'எழுத' - என்று பதிலளித்தார் கேட்கப்பட்டவர்.

'வேறு எதற்கு?' - கேள்வி நீட்டிக்கப்பட்டது.

'பரிசளிக்க'

'வகுப்பறையில் நமக்கு முன் இருப்பவரைத் தொட்டு அழைக்க'

'வாசிக்கும் பக்கத்தை நினைவில் கொள்ளும் புக்மார்க் ஆக'

'பறந்து போகும் பேப்பர் மேல் வைக்கப்படும் பேப்பர் வெயிட் ஆக'

'பணம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக' (எடுத்துக்காட்டாக, 'ச்சாஃப்பர்' பேனா)

'நமக்குப் பிடிக்காதவர் மேல் எறியும் ஆயுதமாக'

'கல்லூரியின் இறுதி நாள் அன்று அதில் உள்ள மையை மற்றவரின் சட்டையில் கொட்டி விளையாட'

என்று தொடர்ந்தார் கேட்கப்பட்டவர்.

பொருளுக்குப் பயன் ஒன்று என்றல்ல. நிறையப் பயன்கள் உண்டு.

இன்றைய நற்செய்தியில் விளக்கு என்ற ஓர் உருவகத்தை எடுத்து, அந்த விளக்கு மரக்காலின் உள்ளும், கட்டிலுக்குக் கீழேயும் வைக்கக் கூடாது என எச்சரிக்கிறார் இயேசு. மேலும், எந்த அளவையால் நாம் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கிறார். பிந்தைய வரி முந்தைய வரியின் நீட்சிதான் என நினைக்கிறேன். அதாவது, நாம் விளக்கை மரக்காலுக்குள் வைத்தால் அதற்கேற்ற வெளிச்சம் கிடைக்கும். விளக்குத் தண்டின்மேல் வைத்தால் அதற்கேற்ற ஒளி கிடைக்கும்.

ஒரு வீட்டில் மூன்று இடங்கள் உள்ளன இந்த உருவகத்தின்படி: ஒன்று, மரக்கால். இரண்டு, கட்டில், மூன்று. விளக்கத்தண்டு.

பாலஸ்தீனத்தில் விளக்கு இந்த மூன்று இடங்களிலுமே வைக்கப்பட்டது. காற்றுக் காலத்தில் விளக்கு அணைந்துவிடாமலிருக்க, அல்லது தீப்பெட்டி இல்லாத நேரத்தில் எரிகின்ற விளக்கை அப்படியே மூடி வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் நிறைய எண்ணெய் வீணாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டிலின் கீழும் விளக்குகள் வைக்கப்பட்டன. உணவுத் தானியங்களை, குறிப்பாக, கோதுமையை அவர்கள் கட்டிலின் கீழ் உலர்த்துவது வழக்கம். கோதுமைக்கு வெப்பம் கொடுக்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் - ஆனால் விளக்குக்கென்று சில பூச்சிகள் வரும் - கட்டிலின் கீழ் விளக்கை ஏற்றி வைப்பர். மூன்றாவதாக, விருந்தினர்கள் வரும்போது, இறைவேண்டல் செய்யும்போது, வீட்டில் உள்ளவர்கள் பொதுவாக அமர்ந்து உரையாடியபோது விளக்கு மரக்காலின்மேல் வைக்கப்பட்டது.

மூன்று இடங்களில் விளக்கு வைக்கப்பட்டாலும், விளக்குக்கென்று நிறையப் பயன்பாடுகள் இருந்தாலும் அதன் முதன்மையான பயன்பாடு ஒருவர் மற்றவருக்கு ஒளியூட்டுவது. அதாவது, ஒருவர் மற்றவரின் முகத்தைக் காண உதவுவது. விளக்குத் தண்டின்மேல் விளக்கு இருக்கும்போதுதான் இப்பயன் சாத்தியம்.

ஆக, முதன்மையான பயன்பாட்டை நாம் மனத்திலிருத்தி வாழ வேண்டும்.

என் வாழ்வுக்கு அல்லது என் வாழ்வால் நிறையப் பயன்கள் ஏற்படலாம். ஆனால், என் முதற்பயனை நான் வாழ்கிறேனா? என் முதற்பயனை அல்லது என் தனிப்பயனை வாழ்வது அவசியம். ஏனெனில், அதுவே எனக்குத் திரும்ப வரும்.

எடுத்துக்காட்டாக, நான் யூட்யூபில் காணொளி பார்ப்பதை என் பயன் எனக் கொள்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதையொட்டியே நான் வளர்வேன். ஆனால், என் பயன் விவிலியம் வாசிப்பது என நான் நினைத்து அதற்கு நேரம் கொடுத்தால் அது எனக்குத் திரும்பப் பயன் கொடுக்கும். நான் எந்த அளவையை எடுத்தாலும் அது எனக்குத் திரும்பக் கொடுக்கும்.

இன்னொரு பக்கம், இயேசுவின் அறிவுரைப் பகுதியின் சூழலை நாம் கருத்தில் கொண்டால், விளக்கு என்பது இறையாட்சியையும், மரக்கால் என்பது நம் அன்றாட வாழ்வியல் பரபரப்புகளையும், கட்டில் என்பது நம் ஓய்வையும் குறிக்கிறது. பரபரப்பும் ஓய்வும் இறையாட்சிப் பணியின் எதிரிகள். இவ்விரண்டுக்கும் இடையே, பொறுமையாகவும், ஓய்ந்திராமலும் இறையாட்சியை அறிவித்தலே விளக்குத்தண்டின்மேல் விளக்கை ஏற்றுதல்.

என் வாழ்வின் முதற்பயனை உணர்தலும், உணர்ந்தவுடன் அதைச் செயல்படுத்த முயல்தலும் நலம்.

நான் என்னுடைய வாழ்க்கைக்குக் கொடுக்கும்போது, வாழ்க்கை எனக்குக் கூடுதலாகக் கொடுக்கும்.

பவுலின் உடனுழைப்பாளர்களும், எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் ஆயர்களாகவும் விளங்கிய திமொத்தேயு மற்றும் தீத்து என்னும் இளவல்களை  இன்று நாம் நினைவுகூருகின்றோம். இவர்கள் இருவரும் வியப்பின் ஆச்சரியக் குறிகள்!

தீத்துவைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'துரோவாவில் என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே, அம்மக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்' (காண். 2 கொரி 2:13) என்றும், 'தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார்' (காண். 2 கொரி 8:23) என்றும், 'நம்பிக்கை அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை' (காண். தீத் 1:1) என்றும் முன்மொழிகின்றார்.

ஆக, ஒரே நேரத்தில் பவுலின் தம்பியும், பங்காளியும், உடன் உழைப்பாளரும், மகனுமாக இருக்கின்றார் தீத்து.

திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற பவுல், 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும் குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்து வா!' (காண். 2 திமொ 4:13) என்று பணிக்கின்றார். இவரை, 'அன்பார்ந்த பிள்ளை' (காண். 2 திமொ 1:1) என்று அழைக்கின்ற பவுல், 'இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன். கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்' (காண். 2 திமொ 1:3-4) என உருகுகின்றார்.

புனித பவுல் தன் உடனுழைப்பாளர்கள் அனைவரோடும் இணைந்து, நாங்கள் 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்' (காண். 2 கொரி 6:6) என்று பெருமை பாராட்டுகின்றார்.

எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் இளம் ஆயர்களாகத் திகழ்ந்த திமொத்தேயும், தீத்துவும் மேற்காணும் பண்புகளைக் கொண்டே தங்கள் மந்தையைக் கண்காணித்தனர். இவர்கள் வயதில் மிகவும் சிறியவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு எழுதப்பட்ட மடலிலிருந்து புலப்படுகிறது: 'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்' (காண். 1 திமொ 5:12)ளூ 'யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே!' (காண். தீத் 2:15).

ஆக, இவர்களோடு சேர்ந்து இன்று புனித பவுலும் கொண்டாடப்பட வேண்டியவரே.

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகியோர் தங்கள் வாழ்வின் முதற்பயனாகக் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டனர்.


No comments:

Post a Comment