Thursday, January 12, 2023

உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்!

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 13 ஜனவரி 2023

எபி 4:1-5,11. மாற் 2:1-12.

உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மற்றொரு வல்ல செயல் பற்றி வாசிக்கின்றோம்: முடக்குவாதமுற்ற ஒருவருக்கு இயேசு நலம் தருகின்றார். இந்த நிகழ்வை, 'தந்தையின் இதயத்தோடு' என்னும் தன் திருத்தூது மடலில் பதிவு செய்கின்ற நம் திருத்தந்தை, இந்த நிகழ்வில் வரும் நண்பர்களின் செயலை படைப்புத் திறத் துணிவு என முன்மொழிகின்றார். 

முடக்குவாதமுற்ற நபரைப் பார்த்து இயேசு சொன்ன சொற்கள் கேட்பவர்களின், குறிப்பாக அங்கிருந்த மறைநூல் அறிஞர்களின் விவாதப் பொருளாக மாறுகின்றன. முடக்குவாதமுற்ற நபரைப் பார்த்து இயேசு, 'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். நோயைக் குணமாக்குவதைத் தாண்டி, நோயின் ஊற்றான பாவத்தைக் குணமாக்குகின்றார் இயேசு. அன்றைய காலத்தில் பாவத்தின் விளைவே நோய் எனக் கருதப்பட்டது.

மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்தில் எண்ணிக்கொள்கின்றனர்: 'இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'

இவர்கள் இவ்வாறு உள்ளத்தில் எண்ணுவதால் வரும் பிரச்சினைகள் எவை? ஒன்று, தங்கள் கண் முன்னால் நடக்கவிருக்கின்ற வல்ல செயலுக்குத் தங்கள் கண்களையும் இதயங்களையும் மூடிக்கொள்கின்றனர். இரண்டு, முடக்குவாதமுற்ற நபரைத் தூக்கிக் கொண்டு வந்த நண்பர்களைப் பாராட்ட இயலவில்லை. மூன்று, இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளவில்லை. 

இயேசு அவருடைய மனித வரையறையைக் கடப்பதாக அவர்கள் நினைத்தனர். இயேசுவை வெறும் மனிதன் என்று மட்டுமே பார்த்தனர்.

நேற்றைய பதிலுரைப் பாடலில் (திபா 95), ஆசிரியர், 'உங்கள் உள்ளங்களைக் கடினப்படுத்திக்கொள்ள வேண்டாம்' எனப் பாடுகின்றார். இரு வகை உள்ளங்களுக்குள் நம்பிக்கை நுழைய இயலாது: ஒன்று, கடின உள்ளம். இரண்டு, கேள்வி கேட்கும் உள்ளம். கடின உள்ளம் உறைந்து போகின்றது. கேள்வி கேட்கும் உள்ளம் எல்லாவற்றையும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறது.

வல்ல செயலின் இறுதி கவனத்திற்குரியது. இது நம்பிக்கைப் பாடமும் கூட. நண்பர்களால் தூக்கி வரப்பட்ட நபர் தன் கையால் கட்டிலைத் தூக்கிக் கொண்டு நடந்து போகின்றார். மற்றவர்களின் நம்பிக்கையால் எடுத்து வரப்பட்ட அவர், தான் கொண்ட நம்பிக்கையால் கடந்து போகின்றார்.

ஆனால், அங்கிருந்த மறைநூல் அறிஞர்கள் என்னவோ முடக்குவாதமுற்றவர்களாக மாறுகின்றனர். தங்களுடைய சட்டங்கள், உள்ளத்தின் எண்ணங்கள் என்னும் கட்டிலோடு அவர்கள் கட்டப்பட்டனர்.

தியானிப்போம்: வாழ்க்கை நம் முன் மலர்ந்து நிற்கும்போது, உள்ளத்தில் கேள்விகள் எழுப்புகின்றோமா? கடவுளும் மனிதர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறைகளை நிர்ணயிக்கின்றோமா?

இன்றைய முதல் வாசகம் கடவுள் தருகின்ற ஓய்வைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் உள்ள இடைவெளியே இரவு. ஒரு செயலுக்கும் இன்னொரு செயலுக்கும் இடையே உள்ள நேரம்தான் ஓய்வு. ஓய்வின் உயர்வே வாழ்வின் உயர்வு.

இறைவன் தருகின்ற ஓய்வைப் பெற்றுக்கொண்டார் முடக்குவாதமுற்ற நபர்.

மறைநூல் அறிஞர்கள் பாவம்! அவர்களுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன!


No comments:

Post a Comment