Friday, January 20, 2023

தனியாய் எவரும் சாதிப்பதில்லை

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 20 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 8:6-13. மாற் 3:13-19.

தனியாய் எவரும் சாதிப்பதில்லை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களை அழைத்து, அவர்களின் பன்னிருவரைத் திருத்தூதர்களாக நியமிக்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் வழக்கமாக மாணவர்கள்தாம் ஆசிரியர்களை அல்லது ரபிக்களைத் தேர்ந்துகொள்வர். மேலும், ஆசிரியர்கள் மாணவர்களை சில கால ஆய்வுக்குப் பின்தான் ஏற்றுக்கொள்வர். இயேசு அவருடைய சமகாலத்து ரபிக்களை விட மாறுபட்டவராக இருக்கிறார். தாமாகவே சீடர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இயேசு சீடர்களைத் தேர்ந்துகொள்ளும் நிகழ்வை மூன்று வினைச்சொற்களால் எழுதுகின்றார் மாற்கு: (அ) இயேசு மலைமேல் ஏறினார் – நேரிடையாக, மலைமேல் ஏறினார் என்றும், உருவகமாக இறைவேண்டலுக்குச் சென்றார் என்றும் புரிந்துகொள்ளலாம். (ஆ) தாம் விரும்பியவர்களை அழைத்தார் - இயேசு தம் சீடர்கள்மேல் விருப்பம் கொள்கின்றார். மற்றும் (இ) சீடர்கள் அவரிடம் வந்தார்கள் - இந்த நாளுக்காகவும் பொழுதுக்காகவும் காத்திருந்ததுபோல அவர்கள் பதிலிறுப்பு செய்கிறார்கள்.

இயேசு தம் சீடர்களை அழைத்ததன் நோக்கம் என்ன? (அ) தம்மோடு இருக்கவும் - இயேசுவோடு நெருங்கிய உறவுநிலையில் இருப்பதற்காக. (ஆ) நற்செய்தி அறிவிக்க அனுப்பப்படவும் - அழைக்கப்படுபவர் அனைவரும் அனுப்பப்படுபவர், நற்செய்தியை அறிவிப்பதற்காக. (இ) பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க – தீமை மற்றும் தீமையின் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கற்றுத் தருகின்றது: (அ) தனியாய் எவரும் சாதிப்பதில்லை. கடவுள் அவருடைய பணியை ஆற்றுவதற்கென மனிதர்களின் துணையை நாடுகின்றார். (ஆ) சீடர்கள் அவர்களுக்கென்று வாழ்க்கை இலக்குகளைக் கொண்டிருந்தனர். ஆனால், அழைக்கப்பட்டவுடன் அவற்றை விட்டுவிட்டு, அல்லது ஒதுக்கிவிட்டு, அல்லது அவற்றை இயேசுவின் நோக்கத்தோடு பொருத்திக்கொள்கின்றனர். என் வாழ்வின் இலக்கு என்ன? அதைக் கடவுளின் நோக்கத்தோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறேனா? (இ) அழைக்கப்பட்டவர்கள் புதிய பெயர்களைப் பெறுகின்றனர் – அவர்கள் என்னவாக மாறப் போகிறார்கள் என்பதை அவர்களுடைய பெயர்கள் அடையாளப்படுத்துகின்றன. நான் என்னவாக மாற வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்?

இன்று நாம் புனிதரும் மறைசாட்சியருமான ஃபபியான் மற்றும் செபஸ்தியார் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இவர்கள் இருவரும் தங்கள் மறைசாட்சியத்தின் வழியாகக் கடவுளின் அழைப்புக்குச் செவிமடுத்தனர்.


No comments:

Post a Comment