Wednesday, January 18, 2023

அனைவரும் வருக!

இன்றைய இறைமொழி 

வியாழன், 19 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 7:25-8:6. மாற் 3:7-12.

அனைவரும் வருக!

இயேசுவைக் காண பாலஸ்தீனத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இயேசுவின் காலத்தில், பாலஸ்தீன நாடு கலிலேயா, சமாரியா, மற்றும் யூதேயா என்னும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கலிலேயப் பகுதி வெகுசன, சாமானிய மக்கள் வாழும் பகுதியாக இருந்தது. அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலையில் மேம்பட்டவர்கள் யூதேயாவில் வாழ்ந்து வந்தனர். யோர்தான் அக்கரைப் பகுதி, தீர், சீதோன், மற்றும் தெக்கப்போலி போன்ற பகுதிகள் புறவினத்தார் வாழும் பகுதிகளாக இருந்தன. பாலஸ்தீனத்தின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து இயேசுவிடம் வந்த மக்கள் கூட்டம் அவரை நசுக்கப் பார்த்ததாக மாற்கு பதிவு செய்கின்றார்.

இயேசுவின் ஈர்ப்புத்திறன் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. இன்று நாம் எவ்வளவோ விளம்பரங்கள் செய்தாலும், புதிய மேய்ப்புப்பணி உத்திகளைப் பயன்படுத்தினாலும், புதிய முறைகளில் நற்செய்தியை அறிவிக்க முயற்சி செய்தாலும் நம்மை நோக்கி வருபவர்கள் மிகக் குறைவே. இயேசுவிடம் அப்படி என்ன வித்தியாசமாக இருந்தது? மக்கள் கூட்டம் அவரை நோக்கி வரக் காரணம் என்ன? மக்களுக்குத் தேவையானதை இயேசு அவர்களுக்கு அளித்தார். இன்று பல நேரங்களில் நாம், அவர்களுக்குத் தேவையானது எது என்பதை உணராமல், நம்மிடம் எது உள்ளதோ அதையே கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மேலும், மக்கள் கூட்டத்திடமிருந்து விலகிச் சென்ற இயேசு, மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் தன் பாதையை மாற்றிக்கொள்கின்றார். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நம் மேய்ப்புப் பணிப் பாதையை மாற்றிக்கொள்தல் நலம்.


No comments:

Post a Comment