Sunday, January 15, 2023

புதிய வகைப் பிணைப்பு

இன்றைய இறைமொழி 

திங்கள், 16 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 5:1-10. மாற் 2:18-22.

புதிய வகைப் பிணைப்பு

இயேசுவிடம் சிலர் ஒரு கேள்வியுடன் வருகின்றனர்: 'பரிசேயர்களின் சீடர்களும் திருமுழுக்கு யோவானின் சீடர்களும் நோன்பு இருக்க உம் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' தானாகவே விரும்பி உணவையும் தண்ணீரையும் தள்ளி வைப்பதே நோன்பு. நோன்பு என்பது முதன்மையாக ஆன்மிகச் செயல்பாடு அல்லது பயிற்சியாக இருந்தாலும், வாழ்வின் மற்ற பரிமாணங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, உடல் ஆய்வு அல்லது சிகிச்சைக்கு முன் மேற்கொள்ளும் மருத்துவ நோன்பு, மெல்லியதாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் அழகியல் நோன்பு, படிப்பு அல்லது தேர்வு நேரங்களில் தூக்கம் குறைப்பதற்காக மாணவர்கள் மேற்கொள்ளும் நோன்பு, பணத்தைச் சேகரித்து மற்றொரு செயல்பாட்டுக்குப் பயன்படுத்துவதற்கான பொருளாதார நோன்பு. இயேசுவிடம் கேட்கப்படும் கேள்வி ஆன்மிக நோன்பு சார்ந்ததாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை யோம் கிப்பூர் (ஒப்புரவு நாள்) நாளன்று வழக்கமாக யூதர்கள் நோன்பு இருந்தனர். பரிசேயர்கள் தங்களின் ஆன்மிக ஒழுக்கத்தைக் காட்டுவதற்காக வாரம் இருமுறை நோன்பு இருந்தனர். எஸ்ஸீனியர்கள் - திருமுழுக்கு யோவான் இக்குழுவைச் சார்ந்தவராக இருப்பார் – ஒவ்வொரு வாரமும் ஓய்வு நாளன்று (சனிக்கிழமை) நோன்பிருந்தனர். இயேசுவின் சீடர்கள் நோன்பு இருப்பதற்குப் பதிலாக உண்டு, குடிப்பவர்களாக இருந்திருக்கின்றனர். தம்மை நோக்கி எழுப்பபட்ட கேள்விக்கு விடை அளிப்பதற்குப் பதிலாக புதிய கருத்து ஒன்றை முன்மொழிகின்றார். 

இயேசுவின் சமகாலத்தவரைப் பொருத்தவரையில், ஒருவரை அவருடைய சமயத்தோடு இணைப்பவை வெளிப்புற அடையாளங்களும், சடங்குகளும், விதிமுறைகளும், சட்டதிட்டங்களும்தாம். இந்த வகை இணைப்பு கடந்தகாலம் சார்ந்தது. ஏனெனில், அடையாளங்கள், சடங்குகள், விதிமுறைகள், மற்றும் சட்ட திட்டங்கள் யாவையும் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை. இயேசுவைப் பொருத்தவரையில் பிணைப்பு என்பது தனிநபர் சார்ந்தது. அவரோடு ஒருவர் கொள்ளும் உறவு சார்ந்தது. இந்த வகைப் பிணைப்பு ஒருவரை நிகழ்காலத்தில் நிலைபெறச் செய்கிறது. இயேசு பயன்படுத்தும் உருவகங்களும் - பழைய துணி, பழைய திராட்சை ரசம் - இப்பொருளையே தருகின்றன. 

தியானிப்போம்: நமக்கும் கடவுளுக்கும் உள்ள இணைப்பு எதன் அடிப்படையில் அமைந்துள்ளது? விதிமுறைகள் அல்லது சடங்குகள் அடிப்படையிலா? அல்லது அவரோடு கொண்டுள்ள உறவு அடிப்படையிலா?

நான் நோன்பு இருக்கிறேனா? இறைவேண்டல் மற்றும் தன்னாய்வுக்கும் என்னைத் தூண்டி எழுப்புமாறு ஆன்மா நோன்பு இருக்கிறேனா?

என் வாழ்வின் பொருளை நான் எதில் காண்கிறேன்? ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கதையாடலிலா? அல்லது என் தெரிகள் மற்றும் உணர்வுகளிலா?


No comments:

Post a Comment