Wednesday, March 28, 2018

உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

நற்கருணை, பணிக்குருத்துவம், அன்புக் கட்டளை - இந்த மூன்றையும் இன்றைய நாளில் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வினைச்சொற்கள் இரண்டு முறை கையாளப்படுகின்றன: 'அறிதல்', 'புரிதல்.'

அ. தன் நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (13:1)
ஆ. அனைத்தையும் தந்தை தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் அறிந்திருக்கிறார் (13:3)

அ. நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரியும். (13:7)
ஆ. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? (13:12)

'அறிதல்' எப்போதும் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. புரிதல் எப்போதும் நமக்கு தாமதமாகவே நடக்கிறது.

நற்கருணை, குருத்துவம், அன்பு - இந்த மூன்றையும் அறிந்தவர் இயேசு. இது இறுதிவரை நமக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பதே வாழ்வியல் எதார்த்தம்.

இந்த மூன்றையும் இணைக்கின்ற மூன்று வாழ்க்கைப் பாடங்களை இன்றைய நாள் நமக்குக் கற்றுத்தருகிறது:

1. 'தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார்'

இந்த வரி உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யம் தருகிறது. அதாவது, இயேசுவைச் சுற்றி இன்னும் சில மணி நேரங்களில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரிடம் 'அனைத்தும் தம் கையில் உள்ளன' என்ற நிறைவு மனப்பான்மை இருக்கிறது.

ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தானாம். அவனுக்கு நிறைய தங்கக் காசுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அவனது ஆசையை நிறைவேற்ற நினைக்கின்ற தேவதை ஒரு பை நிறைய தங்கக்காசுகளை அவனது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு மறைந்துவிடுகிறது. காலையில் துயில் எழுந்து கதவு திறக்கும்போது இவனது கண்களில் அந்தப் பை படுகின்றது. வேகமாக பையை எடுத்து வீட்டிற்குள் ஓடி நாணயங்களைக் கொட்டி எண்ணுகின்றான். '99 நாணயங்கள்' இருக்கின்றன. அவனுக்குள் சின்ன நெருடல்: '100 நாணயங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே!' 'அந்த 100வது நாணயத்தை ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரன் எடுத்திருப்பானோ?' 'வீடு பெருக்க வந்த மனைவி எடுத்திருப்பாளோ?' அல்லது 'மகன் எடுத்திருப்பானோ' அவனுடைய மகிழ்ச்சி கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுகிறது. தன்னிடம் இருக்கின்ற ஒன்றை மறைந்து இல்லாத ஒன்றை கற்பனை செய்து வாழ்தல் நமக்குள் குறைவு மனப்பாங்கை உருவாக்கிவிடுகிறது.

தன்னிடம் உள்ளது அனைத்தும் எடுக்கப்படும் என்பதை இயேசு அறிந்திருந்தும் எப்படி அவரால் தன் கையில் தந்தை அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்று நினைக்க முடிந்தது. இதுதான் உண்மையான மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை. இயேசு ஒருபோதும் குறைவு மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான் யாரையும் அவரால் குறைத்துப் பார்க்க முடியவில்லை.

நற்கருணை - இங்கே அப்பத்திலும், இரசத்திலும் இறைமை நிறைகின்றது.
குருத்துவம் - 'எனக்கு எதுவுமே வேண்டாம்' என முன்வரும் அருள்பணியாளர் தன் நிறைவை இறைவனில் காண்கின்றார்.
அன்பு - அடுத்தவரிடம் நிறைவை பார்க்கிற அன்பு மட்டுமே நீண்ட பயணம் செய்கிறது.

2. தற்கையளிப்பு

தன்னிடம் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கின்ற இயேசு அப்படியே தன்னிடம் உள்ளது அனைத்தையும் இழக்கின்றார். தன்னிடம் உள்ளது அனைத்தையும் அவர் இழந்தாலும் தன்னிடம் நிறைவு இருக்கும் என்ற மனநிலையில் இருந்தார் இயேசு.

யோவான் நற்செய்தியாளர் மட்டும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வை பதிவு செய்யாமல் விடுகின்றார். அல்லது மற்ற நற்செய்தியாளர்கள் அப்பம், இரசம் கொண்டு நற்கருணையை ஏற்படுத்த யோவான் மட்டும் அதை தண்ணீர்-துண்டு என மாற்றிப் போடுகின்றார்.
பந்தியிலிருந்து எழுந்து - அப்பத்தை எடுத்து
தம் மேலுடையைக் கழற்றிவிட்டு - நன்றி செலுத்தி
துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு - வாழ்த்துரைத்து
தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார் - அதைப் பிட்டு அவர்களுக்கு வழங்கினார்.

'எழுதல்' என்பது புதிய செயலின் அடையாளம். அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கான தயார்நிலையை இது குறிக்கிறது.
'மேலுடை' என்பது பாதுகாப்பு. இயேசு தன் வெளிப்புற பாதுகாப்பை அகற்றுகின்றார்.
'துண்டு' என்பது 'குறைவு' - பட்ஜெட்டில் துண்டு விழுந்தது என்கிறோம். நீண்ட துணியில் குறைவான பகுதியே 'துண்டு' - குறைவை அணிந்துகொண்டு
'தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்கின்றார்.'

குருத்துவத்தில் ஓர் அருள்பணியாளர் செய்வதும் இதுவே.
தன் குடும்பத்திலிருந்து எழுகின்றார். தன் குடும்பம், தன் படிப்பு, தன் பின்புலம் என்னும் மேலுடையை அகற்றுகின்றார். தன்னிடம் உள்ள வலுவின்மை என்ற துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தான் செல்லும் இடங்களில் பணிசெய்யத் தொடங்குகின்றார்.

அன்பிலும் இதுவே நிகழ்கிறது.
ஒருவர் தன் உறவுநிலையிலிருந்து எழ வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்தை அகற்ற வேண்டும். தன்னிடம் உள்ள குறைவை அடுத்தவரின் நிறைவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

நற்கருணையிலும் இது நடந்தேறுகிறது.
அப்பமும், இரசமும் கோதுமை மற்றும் திராட்சைத் தோட்டத்திலிருந்து எழுகின்றன. தங்கள் இயல்பைக் களைகின்றன. ரொட்டியும், திராட்சை இரசமும் என புதிய உருப் பெறுகின்றன.

3. 'உன் காலடிகளைக் கழுவாவிட்டால்'

இயேசுவைப் போல பாதம் கழுவுவதைவிட அவரை நோக்கி பாதத்தை நீட்டுவது அடுத்த பாடம். சீமோன் பேதுரு தன் பாதத்தை நீட்ட மறுக்கின்றார்.

புதிதாக குருத்துவ அருள்பொழிவு செய்யப்படுபவர், அந்த அருள்பொழிவு நிகழ்வில், தன் பெயர்  வாசிக்கப்பட்டவுடன், 'இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் பாதத்தை ஒரு அடி முன்னால் நகட்டி வைக்கின்றார். அந்த ஒற்றை அடி முன்னால் வைத்ததில் அவரின் நீண்ட பயணம் தொடர்கின்றது. சீமோன் பேதுருவின் இந்த தயக்கத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

புதிதாக காலடியை எடுத்வைத்து நாம் செல்லும் பயணத்தில்தான் அன்பும் அடங்கியுள்ளது.
மேலும் நற்கருணையில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கும் நிகழ்விலும் அவரின் அந்த ஒற்றை அடியை நாம் பார்க்கிறோம்.

இந்த மூன்றிலும், 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு.

'நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு' - என தன்னைப் பற்றிய நினைவை நீங்காத ஒன்றாக ஆக்குகின்றார் இயேசு.


2 comments:

  1. SuperReflection Yesu.Happy Feast. May God bless you and your ministry.

    ReplyDelete
  2. இயேசு தன் இறுதி உணவின் போது செய்த அனைத்திற்கும் அர்த்தம் கொடுத்து அதை அருட்பணியாளரின் அழைத்தலோடு தந்தை சம்பந்தப்படுத்தியிருப்பது அருமை.அருட்பணியாளர் என்பவர் தன் குடும்பத்திலிருந்து எழுந்து,தன் பின்புலம் என்ற மேலுடையைக்களைந்து,தன் வலுவின்மை எனும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தான் செல்லும் இடங்களில் தன் பணியைத்தொடருகிறார்....அருமை. இதை அருட்பணியாளர்கள் மட்டுமின்றி,இல்லறத்தாரும் உணர்ந்திருந்தால் இந்தக் 'குருத்துவ அழைத்தலின் மகிமை' இன்னும் போற்றிப்பேணப்பட வேண்டியதொன்றாக இருக்கும்.இப்பேர்ப்பட்ட குருத்துவத்தை இன்று கொண்டாடும் தந்தைக்கும், அனைத்து அருட்பணியாளர்களுக்கும் வணக்கங்களும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete