Wednesday, March 7, 2018

பின்னோக்கி

நாளைய (8 மார்ச் 2018) வாசகம்

'முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்' (காண். எரே 7:23-28)

நாளைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக எரேமியா இறைவாக்கினர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது இதுதான்: 'பின்னோக்கிச் சென்றார்கள்'

திரைப்படங்களில் 'பின்னோக்கிய ஒளிப்பதிவு' (ரிவர்ஸ் ஷாட்)இருப்பதை நாம் பார்த்திருப்போம். தன் வீட்டின் தோட்டத்தின் நடுவில் நிற்கும் கதாநாயகியின்மேல் அங்கே மறைந்திருக்கும் கதாநாயகன் பக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றுவான். கதாநாயகி சொத சொத என்று நனைந்து போவாள். அதற்கு அடுத்த ஷாட்டில் அப்படியே அவள்மேல் ஊற்றப்பட்ட தண்ணீர் மீண்டும் பக்கெட்டுக்குள் சென்று சேரும். கதாநாயகி மீண்டும் தண்ணீர் மறைந்து காய்ந்துவிடும்.

ஆக, பின்னோக்கி நடக்கும் நிகழ்வில் நிகழ்வின் நோக்கம் நிறைவேறுவதில்லை. அதாவது, கதாநாயகி நனைவதில்லை.

அடுத்ததாக, பின்னோக்கி செல்லும்போது நாம் நம் இலக்கை அடைய முடிவதில்லை.

மாட்டுத்தாவணியில் இருந்து நான் ஆரப்பாளையம் நோக்கிச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கோரிப்பாளையம் சிக்னலில் இருக்கும் நான் அப்படியே திரும்பி வந்த வழியில் பயணம் செய்தால், நான் மாட்டுத்தாவணியைத்தான் அடைய முடியுமே தவிர, ஆரப்பாளையத்தை அடைய முடியாது.

ஆனாலும், பின்னோக்கி நடப்பது நமக்கு சில நேரங்களில் பிடிக்கிறது.

நாம் வயது வந்து வளர வளர வாழ்வில் நிறைய சவால்களை, பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில், 'ச்சே, குழந்தையாகவே இருந்திருக்கலாமே!' என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், பின்னோக்கி நடப்பதால் நம் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை.

இல்லையா?

ஓடாத கடிகாரம் கூட இரண்டு முறை சரியான நேரம் காட்டும்.

ஆனால், பின்னோக்கி ஓடும் அல்லது மெதுவாக ஓடும் கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தை காட்டுவதில்லை.

அதுதான் இஸ்ரயேல் மக்களிடமிருந்த பிரச்சினை.

தங்கள் வேர்களை மட்டும் நினைத்துக்கொண்டு அதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்க விரும்பினார்களே தவிர, விழுதுகளை நோக்கி நகர விரும்பவில்லை.

இயேசுவிடம் நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) வரும் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்கின்றனர். இயேசுவுக்கு முன் இருந்தவர்கள் அப்படித்தான் பேய்களை ஓட்டினர். ஆக, அந்த சிலரும் தங்கள் சிந்தனையில் பின்னோக்கி ஓடுகிறார்கள்.

வாழ்வில் நடந்து முன்னேறுவோம்.

முன்னேற கஷ்டமாக இருந்தால், நன்றாக காலை ஊன்றி ஒரே இடத்தில் நின்றுகொள்வோம். அப்படி நின்று கொள்ள கஷ்டமாக இருந்தால் ஒரு பெரிய கல்லை எடுத்து முட்டுக்கொடுப்போம். ஒருபோதும் பின்னோக்கி சென்றுவிட வேண்டாம்.


1 comment:

  1. நமது அன்றாட நிலையை எடுத்துரைக்கும் அழகானதொரு பதிவு.பல சமயங்களில் நாம் கடந்த கால மகிழ்வுகளில் மட்டுமே நம்மைக் கரைத்துக்கொள்ள விரும்புகிறோமே தவிர நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தந்தையின் வார்த்தைகள்..." அவர்கள் தங்கள் வேர்களை மட்டும் நம்பிக்கொண்டு அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க விரும்பினார்களே தவிர, விழுதுகளை நோக்கி நகர விரும்பவில்லை." இவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.இந்த எண்ணங்களைக்கடந்து முன்னேற அழைக்கின்றன தந்தையின் வரிகள்.... "வாழ்வில் நடந்து முன்னேறுவோம்; முன்னேறக்கஷ்டமாக இருந்தால்,நன்றாகக் காலை ஊன்றி ஒரே இடத்தில் நின்று கொள்வோம்;அதுவும் கஷ்டமாக இருந்தால் ஒரு கல்லை எடுத்து முட்டுக்கொடுப்போம். ஒரு போதும் பின்னோக்கிச் சென்றுவிட வேண்டாம்." எழுச்சியூட்டும் வார்த்தைகள்!தந்தைக்கு நன்றிகள்!!!!

    அந்த ஓடாத மற்றும் மெதுவாக ஓடும் கடிகாரம் பற்றிய தந்தையின் observation அருமை! இப்படி எங்கும்,எதிலும் பாடம் கற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் இந்த மனதுதான் தந்தையின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete