Friday, March 9, 2018

தொலைவில் இல்லை

நாளைய (9 மார்ச் 2018) நற்செய்தி (மாற் 12:28-34)

தொலைவில் இல்லை

'நீ இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' (மாற்கு 12:28-34)

இயேசு தான் சந்தித்த இரண்டு இளைஞர்களிடம் இறையாட்சி பற்றிப் பேசுகிறார்.

முதல் இளைஞரை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 12:28-34) சந்திக்கின்றோம். இவர் ஒரு திருச்சட்ட அறிஞர். எல்லாம் தெரிந்தவர். நல்லவர் யார், கெட்டவர் யார், நல்லது எது, கெட்டது எது, கடவுள் யார், கடவுள் அன்பு என்ன என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தவர் இவர்.

ஆகையால்தான் முதன்மையான கட்டளை எது? என்று இயேசு சொன்னதை அப்படியே பற்றிக்கொள்கின்றார்.

இவரிடம் இயேசு, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' என்கிறார்.

இன்னொரு இளைஞரை நாம் லூக்கா நற்செய்தியில் (23:32-43) சந்திக்கின்றோம்.

இவருக்கு எதுவுமே தெரியாது. கடவுள் என்ன, யார் என்பதும், நல்லது, கெட்டது பற்றியும் கண்டுகொள்ளாதவர்.

ஆனால், இவர் இயேசுவைப் பார்த்து சொன்னதெல்லாம், 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!' என்ற ஒற்றை வரிதான்.

இதுதான் முழுமையான நம்பிக்கை. முழுமையான சரணாகதி.

ஆகையால்தான், 'நீ இன்றே என்னோடு இறையாட்சியில் இருப்பாய்' என இயேசு அவரை அரவணைத்துக்கொள்கிறார்.

இறையரசு நோக்கிய பயணம் மூன்று நிலைகளில் நடக்கிறது:

அ. 'எல்லாம் நான். எதுவும் அவரல்ல'
ஆ. 'நான் பாதி. அவர் பாதி'
இ. 'எல்லாம் அவர். எதுவும் நானல்ல'

இந்த மூன்றையும் நாம் மகாபாரதத்திலும் பார்க்கின்றோம். பாஞ்சாலியின் சேலை துச்சாதனால் உரியப்படுகிறது. தன்னைக் காப்பாற்ற, 'கண்ணா!' என்று கிருஷ்ணபகவானை அழைக்கிறார்.

அ. முதலில் இரண்டு கைகளாலும் தன் சேலையை பற்றிக்கொள்கின்றார்.
ஆ. ஒரு கையைக் கொண்டு சேலையையும் மறு கையால் வானை நோக்கி கண்ணனையும் அழைக்கின்றார்.
இ. சேலையை விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி, 'கண்ணா' என்கிறார். சேலை உரிய உரிய வந்துகொண்டே இருக்கிறது.

'நானல்ல அவர்' என்ற நிலையே இறையாட்சியின் உன்னத நிலை.

இந்த நிலையை நோக்கி திரும்பி வந்தவர்களின் ஆசியைப் பட்டியல் இடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். ஓசேயா 14:1-9)

1 comment:

  1. நானும் கூட அடிக்கடி நினைத்ததுண்டு..இன்றைய அறிஞரைப்பார்த்து இயேசு " நீர் இறையாட்சியினின்று வெகு தொலைவில் இல்லை" எனக் கூறியது சரிதானா என்று. என் எண்ணம் சரியே! என்கின்றன தந்தையின் வரிகள்.இந்த அறிஞர், நல்ல கள்ளன் மற்றும் மகாபாரத்ததின் பின்னனியில் " எதுவும் நானல்ல; எல்லாம் அவரே!" என்ற சரணாகதி ஒன்றே நமது இறையரசு நோக்கிய பயணத்திற்கு அனுமதிச் சீட்டு என்றும் அச்சில் வார்க்கிறார். இறையாட்சியின் இந்த உன்னத நிலை, பல ஆசிப்பட்டியலோடு கைகோர்த்து வரும்போது அதைப் பற்றிக்கொள்வதுவே விவேகம் என்று மறைமுகமாக உணரவைக்கும் தந்தைக்கு என் நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete