Wednesday, December 28, 2016

கைகளில்

நாளைய நற்செய்தி வாசகத்தில் குழந்தை இயேசுவை கைகளில் ஏந்துகிறார் சிமியோன்.

குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் தூக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய நாளின் மையம் குழந்தையா? முதியவரா? இரண்டு பேரும் தாம். ஒரு முதியவர் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். ஒரு அஸ்தமனம் ஒரு உதயத்தைத் தாங்குகிறது. வாழ்வின் முடிவும் வாழ்வின் தொடக்கமும் ஒன்றையொன்று சந்திக்கிறது.

எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது? நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே நிற்கிறேன்.'

சிமியோனுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கம் இதுதான். அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை ஏந்தியவுடன் அவர் சொல்லும் சொற்களுக்கு மிகுந்த வாழ்வியல் அர்த்தம் உண்டு:

'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன'.

தன் வாழ்க்கை முடிவுற்றது. இனி தான் அமைதியாகச் செல்லலாம் என்று மொழிகின்றார் முதியவர். வாழ்வில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது 'விடைபெறுவது'. எதற்காக மரணம் அல்லது பிரிவு பயத்தைத் தருகின்றது? 'பிடிமானம்'. நாம் 'இதுதான் எல்லாம்' என எதையாவது பிடித்துக் கொள்கின்றோம். அதை விட மனம் வரவில்லை. அது கண்டிப்பாக நம்மிடமிருந்து எடுக்கப்படும் என்று தெரியும். இருந்தாலும் நாம் அதை எளிதாக விடுவதில்லை. இது வாழ்வில் மட்டுமல்ல. அனைத்துப் பணிநிலைகளிலும் இருக்கலாம். குறி;ப்பாக, அரசியலில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், ஏன் குடும்பத்தில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு கட்டத்தில் அதை விட்டுத்தாங்கள் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. 'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று பிடித்துக் கொண்டேயிருப்பது அவர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பையே கொண்டு வருகின்றது. 'முகமலர்ச்சியுடன் விடைபெற' இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் சிமியோன். சிமியோனின் மனநிலை நமக்கு இருந்தால் இறப்பைக் கண்டும், பிரிவைக் கண்டும் பயப்படவே தேவையில்லை.

என் குடும்பத்தில், என் பணியில், என் படிப்பில், என் பயணத்தில், என் நண்பரில் நான் மீட்பைக் கண்டுகொண்டேன். என்னால் அமைதியாகப் போகமுடியும் என்று நம்மால் சொல்ல முடிந்தால் நாமும் சிமியோன்களே.

பல நேரங்களில் இவர்களில் நாம் மீட்பiயும் மகிழ்வையும் காண்பதில்லை. ஆகையால் தான் நம்மால் மகிழ்ச்சியோடு விடைபெற முடிவதில்லை. நம் வாழ்வின் உதயம் எந்த அளவிற்கு எதார்த்தமானதோ அந்த அளவிற்கு அஸ்தமனமும் எதார்த்தமானது. அஸ்தமனம் கூட அழகுதான் என்பதற்கு அடையாளம் சிமியோன்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே ஒரு குழந்தை. ஒவ்வொரு பொழுதும் ஒரு உதயம். ஒவ்வொரு பொழுதும் ஒரு அஸ்தமனம். திறக்கின்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும். நாம் சந்திக்கும் உறவுகள் எல்லாம் பிரிய வேண்டும். சில நேரங்களில் பிரியம் வளர பிரிந்துதான் இருக்க வேண்டும். சந்திப்பிற்கும், பிரிவிற்கும் இடையே ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்?

1 comment:

  1. கவித்துவமானதொரு பதிவு."ஒரு அஸ்தமனம் உதயத்தைத் தாங்குகிறது;வாழ்வின் முடிவும் தொடக்கமும் ஒன்றையொன்று சந்திக்கிறது."இந்தப் பதிவிற்கு அழகூட்டும் வரிகள்.இறைமகனுக்காகக் காத்திருக்கும் சிமியோன் மட்டுமல்ல;சுரங்க வாயிலில் சந்தித்துக் கொள்ளும் தந்தையும், தன்யனும்கூடப் போற்றுதற்குரியவரே!ஏன்?!.விடை பெறுதலின் அழகைத் சொல்லும் தந்தையும் கூடப் போற்றுதற்குரியவர்தான்.ஆரம்பம் என்ற ஒன்று அஸ்தமனத்தில் முடிய வேண்டுமென்பது இயற்கையின் நியதி.பல சமயங்களில் பயமும்,கவலையும், கண்ணீரும் நம் அஸ்தமனத்தின் அழகைக் கரைத்து விடுகின்றன. ஒரு அஸ்தமனம் ஓராயிரம் உதயங்களைக் கொண்டு வருமெனில்,ஒரு பிரிவு பல உறவுகளுக்குப் பாதையிடுமெனில் அந்த அஸ்தமனமும்,பிரிவும் கூடப் போற்றப்பட வேண்டியவை தானே!பிரியம் வளர பிரிந்து தான் ஆகவேண்டுமெனில் அந்தப்பிரிவு ஏன் கண்ணீரில் மிதக்க வேண்டும்? நம் வாழ்வின் உதயத்தைப் போன்றே அஸ்தமனமும் அழகுதான் என்பதற்கு சிமியோன் மட்டுமல்ல; இந்த மாபெரும் உண்மையை அழகுற.. ஆனால் அழுத்தமாக எடுத்துரைக்கும் தந்தையின் வார்த்தைகளும் அழகுதான்....வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete