Monday, December 6, 2021

ஆயன் போல

நாளின் (7 டிசம்பர் 2021) நல்வாக்கு

ஆயன் போல

இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில், 'ஆயன்' என்ற உருவகம் கையாளப்படுகின்றது.

முதல் வாசகத்தில் (காண். எசா 40:1-11), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை நோக்கி இறைவாக்குரைக்கும் எசாயா, 'ஆறுதல் கூறுங்கள்! என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்!' என்று ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைக்கின்றார். மேலும், 'ஆண்டவரின் வார்த்தையின் ஆற்றல் என்ன' என்பதையும் இப்பகுதி நமக்குக் காட்டுகிறது: 'புல் உலர்ந்து போகும். பூ வதங்கி விழும். உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உதிர்ந்து போகும். பூ வதங்கி விழும். நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்!' தொடர்ந்து, ஆயன் செய்யக் கூடிய நான்கு பணிகளை ஆண்டவர் எடுத்துரைக்கின்றார்: (அ) ஆயனைப் போல மந்தையை மேய்ப்பார், (ஆ) ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார், (இ) குட்டிகளைத் தோளில் சுமப்பார், மற்றும் (ஈ) சினையாடுகளைக் கவனமுடன் நடத்திச் செல்வார். ஆக, அனைத்து ஆடுகள்மேலும் அக்கறை கொள்பவராகவும், வலுவற்ற ஆடுகளைப் பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார். எருசலேமை ஆட்சி செய்த அரசர்கள் இப்படி இருக்கத் தவறினர். தங்களுடைய சிலைவழிபாட்டால் மக்களையும் திசைதிருப்பினர். ஆண்டவர் இதற்கு முந்தைய அரசர்களின் ஆட்சியைக் களைகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:12-14), திருச்சபைப் பொழிவின் தொடக்கத்தில் வருகின்ற காணாமற்போன ஆடு உவமை வழியாக, ஒரு சபையில் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். நூறு ஆடுகளில் ஒன்று தொலைந்தால், தொலைந்த அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதிக மகிழ்ச்சி தருகிறது. ஆடுகளின் உரிமையாளர் ஆட்டைத் தேடிச் செல்கின்றார். அதைக் கண்டுபிடிக்கும் வரை அவர் ஓய்வதில்லை.

'ஆயர்' உருவகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

(அ) வலுவற்றவற்றின்மேல் அக்கறை.

உடல், உள்ளம், ஆன்மா என வலுவற்ற நிலையில் இருக்கும் அனைவர்மேலும் சிறப்பான அக்கறை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைமையைப் பொருத்தவரையில் மனிதம் என்பது வலுவின்மை. மனுவுருவாதல் நிகழ்வின் கடவுள் வலுவற்ற மனித இனத்தின்மேல் அக்கறை காட்டுவதை நாம் அறிகிறோம்.

(ஆ) சேர்த்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

99 ஆடுகளுடன் ஒப்பிட்டால் 1 ஆடு என்பது ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. ஆனால், அந்த ஓர் இழப்பும் சரி செய்யப்பட வேண்டும். இன்னொரு பக்கம், நம் வாழ்வில் நாம் பெற்றிருக்கின்ற 99 நிறைகளை மறந்துவிட்டு, நம்மிடம் உள்ள 1 குறையை மட்டும் நினைத்து வருந்திக்கொண்டிருப்பதும் தவறு.

(இ) அகத்தேடல்.

நம் வாழ்வில் தொலைந்து போன ஆடு என்று ஒரு பகுதி இருக்கும். தொலைந்து போன அந்தப் பகுதிக்கு நம் அக்கறை தேவைப்படும். வெறும் 99 ஆடுகளை வைத்துக்கொள்வது போதும் என்ற தேக்க மனநிலை நம்மிடம் இருக்கலாம். தேடுதல் தேவைப்படுகின்ற பகுதியின்மேல் அக்கறை செலுத்தினால் நலம். உடல்நலமாக, உள்ளநலமாக, ஆன்மநலமாக எதுவானாலும், தேடல் நலம்.

அருள்திரு யேசு கருணாநிதி

மதுரை உயர்மறைமாவட்டம்


1 comment:

  1. நமக்கு மிகவும் பரிச்சயமான ஆயன்- ஆடு குறித்த உவமை! நெஞ்சை நெகிழ்விப்பதும் கூட. ஆண்டவரின் வார்த்தையின் வலிமையை எடுத்துரைக்கும் ஒரு பதிவு!இயற்கையின் புல்லும்,பூவும் உதிர்ந்து போவதைப் பார்க்கும் நாம் ஆண்டவரின் வார்த்தை நிலைத்த கல்தூணாக நிற்பதையும் பார்க்கிறோம்.குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில் ஒருபிள்ளை கொஞ்சம் நோஞ்சானாகத் தெரிந்தால் பெற்ற தாயின் கவனம் அனைத்தும் அந்த வலுவற்ற பிள்ளையின் மீதே! தாயின் அன்பிற்கிணையான இறைவன்! 99 ஆடுகள் கையிலிருப்பது அவருக்குப் பெருமையல்ல….தொலைந்த அந்த 100 வது ஆடே அவரின் கவனத்தைக் கவர்ந்திழுப்பது.
    இறைவன் நம் நிறைகுறைகளை ஆடுகளுக்கிணையாகப் பார்க்கச் சொல்லும் நேரமிது.உள்ளத்தின் ஓசை அடங்கி, ஒரு வெற்றிடமாக நம் உடலையும்,உள்ளத்தையும் சோதித்தோமெனில் நம்மிடமுள்ளவலிமையும்,வலுவின்மையும் சேர்ந்தே நம் அகக் கண்களுக்குத் தெரியும். நம்மிடமுள்ள 99ஆடுகள் வலுவுடன் இருப்பின் மகிழும் அதே நேரத்தில் அந்த வலுவற்ற….நம் கவனத்தை ஈர்க்கும் அந்த 100 வது ஆட்டைத் தேடுவோம்.ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல…கிடைக்கும் வரை தேடுவோம்….கண்டுபிடித்து அதன் வலுவின்மை நீக்கி வலுவுள்ளதாக்குவோம். நம் கவனத்தை ஈர்க்கும் அந்த 100 வது ஆடு உடலா…உள்ளமா….எதுவாக இருப்பினும் தேடலைத் தொடர்வோம். தேடியதை நமதாக்குவோம்.
    ஏற்கனவே கேட்டுப் பழக்கப்பட்ட விஷயமெனினும்,ஒவ்வொரு முறையும் சொல்லும் கோணத்தை…விஷயத்தைப் புதிதான கருத்துக்குவியலோடு தரும் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete