Friday, May 28, 2021

எந்த அதிகாரத்தால்?

இன்றைய (29 மே 2021) நற்செய்தி (மாற் 11:27-33)

எந்த அதிகாரத்தால்?

'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?

ரா. பார்த்திபன் அவர்கள் எண்ணத்தில் அவர் மட்டுமே நடித்திருக்கும் 102 நிமிடத் திரைப்படம். இந்தப் படத்தின் டேக் லைன் இதுதான்: 'அதிகாரம்தான் சார் கடவுள். அதிகாரம் உள்ளவனை யாரும் எதுவும் செய்ய இயலாது!'

இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்திவிட்டார். அவர் ஆலயத்தின் அருகே இருப்பதைக் காண்கின்ற தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், 'எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்?' என்று அவரிடம் கேள்வி கேட்கின்றனர்.

அவர்களின் கேள்வி இயல்பானதுதான். ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மறைநூல் அறிஞர்களும், போதகர்களும், 'தலைமைச் சங்கத்தின் அதிகாரத்தால்,' 'சட்ட நூல்களின் அதிகாரத்தால்,' 'தான் சார்ந்திருக்கின்ற பள்ளியின் அதிகாரத்தால்' போதித்தனர். அதிகாரத்தை மீறி அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்த அதிகாரத்தையும் பெற்றவர் அல்லர் என்பதை அவர்கள் அறிவர். ஆகையால்தான் இந்தக் கேள்வியை அவர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர்.

கேள்வி கேட்டவர்களிடம் கேள்வி கேட்கிறார் இயேசு: 'திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? மண்ணகத்திலிருந்து வந்ததா?' இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன விடை தந்தாலும் மாட்டிக்கொள்வர். ஆகவே, 'எங்களுக்குத் தெரியாது' என்று சொல்லித் தப்புகின்றனர். இயேசுவும் தன் அதிகாரம் பற்றி அவர்களுக்கு விடை தர மறுக்கின்றார்.

நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புனித அகுஸ்தினார், 'நம்புகிறவர் விளக்கம் கேட்பதில்லை. விளக்கம் கேட்பவர் நம்புவதில்லை' என்பார்.

இயேசு, தன் அதிகாரம் விண்ணிலிருந்து வந்தது என்று சொன்னால் மறைநூல் அறிஞர்கள் நம்பப் போவதில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆக, தன்னை நம்பத் தயாராக இல்லாதவர்களுக்காக தன் ஆற்றலை வீணடிக்கவில்லை இயேசு.

இயேசு எந்தவொரு ஆற்றல் கசிவுகளையும் (ENERGY LEAKS) கொண்டிருக்கவில்லை.

ஆற்றல் கசிவு என்றால் என்ன?

ஒரு பானையில் இருக்கும் சிறிய கீறல் பானையில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிடுகிறது. எதிர்மறை உணர்வுகளால் - பயம், கோபம், கலக்கம், குற்றவுணர்வு, ஒப்பீடு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, முற்சார்பு எண்ணம் - நம்மில் விழும் கீறல்கள் நம் ஆற்றலை வீணடித்துவிடுகின்றன.

எந்த நிலையிலும் இயேசு தன்னை முழுவதும் அறிந்தவராக இருந்தார். தன்மேல் ஆளுகை செலுத்தினார். எந்தவொரு உணர்ச்சிப் பெருக்கிற்கும் அவர் இடம் தரவில்லை.

நாம் பல நேரங்களில் தேவையற்று மற்றவர்களுக்கு நம்மைப் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறோம். அல்லது, நாம் யார் என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றோம். அப்படிச் செய்யும்போதெல்லாம் நம் ஆற்றல் கசிந்துகொண்டிருக்கின்றது.

இயேசுவின் அதிகாரம் அவருக்கு உள்ளேயே இருந்தது.

தன் அதிகாரத்தைத் தனக்குள் கண்டுகொள்வதே ஞானம். ஏனெனில், தன் உள்ளத்தின் தூய்மையில் ஞானத்தைக் கண்டுகொண்டதாகப் பாடுகிறார் சீராக் (முதல் வாசகம்).


2 comments:

  1. “ஆற்றல் கசிவு”...... முதல்முறையாக என் கண்களில் படும், அர்த்தத்தைப் பொதிந்து வைத்துள்ள ஒரு வார்த்தை.எந்த நிலையிலும்,இயேசு தன்னை அறிந்தவராகவும், தன் மேல் ஆளுகை செலுத்துபவராகவும் இருந்த காரணத்தால் அவரின் எந்த உணர்ச்சிப் பிரவாகத்திற்கும் வடிகால் தேடவோ.....அவரின் செய்கைகளுக்கு விளக்கம் சொல்லவோ அவருக்குத் தேவையிருக்கவில்லை. தன் அதிகாரத்தைத் தன்னுள்ளும், தன் உள்ளத்தூய்மையில் ஞானத்தையும் கண்டு கொண்டவராக இருந்த காரணத்தாலேயே அவரைக் கண்டு கொள்ளாதவர்களையும் அவரால் கண்டு கொள்ள முடிந்தது..

    “ தான் இப்படித்தான்” என்ற தன் நிலை உணர்ந்ததாலேயே புனித அகுஸ்தினாரும் “நம்புகிறவர் விளக்கம் கேட்பதில்லை...விளக்கம் கேட்பவர் நம்புவதில்ல” என்கிறார்.

    அர்த்தம் செறிந்த “ஆற்றல் கசிவு” ...என்ற புது வார்த்தையையும் அதன் சரியான விளக்கத்தையும் தந்த தந்தையை ஒரு “ அகராதி” என்றே அழைக்கலாம். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete