Thursday, May 20, 2021

அன்பு செய்கிறாயா?

இன்றைய (21 மே 2021) நற்செய்தி (யோவா 21:15-19)

அன்பு செய்கிறாயா?

பாஸ்கா காலம் நிறைவுற இன்னும் ஓரிரு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியின் இறுதிப் பிரிவுகளிலிருந்து நாம் இன்றும் நாளையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல்.

ஆ. பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு

இ. பேதுருவின் இரண்டாம் அழைப்பு

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?'

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், மற்றவர்கள் சற்று தூக்கக் கலக்கமாக அங்கே தூங்கிப் போக, பேதுருவை தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். இங்கே, 'அன்பு' என்ற வார்த்தை, கிரேக்கத்தில் இரண்டு வார்த்தைகளாக உள்ளது: முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, 'அகாப்பாவோ' (தன்னலமற்ற அன்பு) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், 'ஃபிலயோ' (நட்பு அல்லது உறவுசார் அன்பு) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு.

ஆ. நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: 'உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.' இது பேதுருவின் இறுதிநாள்கள் மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். 'என்னால் இது இயலாது' என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

இந்த முதிர்ச்சியின் அடையாளங்கள் எவை? அண்மையில் நான் கண்ட ஒரு போஸ்டரில் அவை குறிக்கப்பட்டிருந்தன:

முதிர்ச்சியின் அடையாளங்கள்: சின்ன சின்ன விவாதங்கள் உன்னை காயப்படுத்துவதில்லை. வெளியில் உலாவச் செல்வதைவிட தூங்குவது சிறந்தது எனத் தோன்றும். நீ அதிகமாக மன்னிப்பாய். நீ திறந்த உள்ளத்துடன் இருப்பாய். வேற்றுமைகளை மதிப்பாய். அன்பை வலுக்கட்டாயமாக வரவைக்க மாட்டாய். மனம் வலித்தாலும் பொறுத்துக்கொள்வாய். யாரையும் எளிதாகத் தீர்ப்பிட மாட்டாய். மடத்தனமான வாய்ச்சண்டையை விட மௌனம் சிறந்ததென்பாய். உன் மகிழ்ச்சி மற்றவர்களிடமல்ல, உன்னிடம் தான் இருக்கிறது எனக் கண்டுகொள்வாய். நீதான் சரி என்று உன்னை நிரூபிக்க முயற்சிக்க மாட்டாய். உன்னை மற்றவர்களோடு ஒப்பீடு செய்ய மாட்டாய். தேவைக்கும் ஆசைக்குமான வித்தியாசம் அறிவாய். ஒவ்வொருவரும் அவரவருடைய பார்வையில் சரி என ஏற்றுக்கொள்வாய்.

இவை எல்லாவற்றையும் ஒற்றை வாக்கியத்தில், 'கைகளை விரித்துக் கொடுத்தல்' என்று சொல்லிவிடலாம்.

இ. 'என்னைப் பின்தொடர்'

இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். பின்தொடர்தல் என்பது பேதுரு இனி தன் வேலைகளை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல. இறக்கும் வரையிலும்!

முதல் வாசகத்தில், ஒரு வேடிக்கையான பகுதியை நாம் வாசிக்கின்றோம்.

பவுல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்நேரத்தில் பெஸ்துவைக் காண அகிரிப்பா அரசன் வருகின்றார். மாலை நேரத்தில் சாப்பிட்டு விட்டு அமரும் நேரம் அவர்களுக்கு 'போர் அடிக்கிறது.' அந்த நேரத்தில், பவுலைக் கூப்பிட்டு உரையாடச் சொல்கிறார்கள். பவுலின் உரையைப் பற்றிச் சொல்கின்ற பெஸ்து, 'இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்' என்கிறார்.

பவுல் என்னதான் இயேசுவே இறைமகன் என அறிக்கையிட்டாலும், உரோமையருக்கு, அவர் 'வெறும் ஒருவராகத்தான்' தெரிகிறார்.

நாமும் வாழ்வில் பல சாதனைகள் செய்திருக்கலாம். அல்லது செய்தது போல நினைத்திருக்கலாம். ஆனால், நம்மைப் பற்றி அறியாதவர்களுக்கு நாம் வெறும் எண்ணிக்கையே.

இந்த எண்ணம் இருந்தால் போதும்! நாம் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருப்போம்.


1 comment:

  1. “ என்னை அன்பு செய்கிறாயா? “ என்று தன்னைப்பார்த்துக் கேட்ட இயேசுவுக்கு “ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!” எனப் பேதுரு அளித்த பதிலில் “ நான் உம்மை மறுதலித்தேனே” எனும் வார்த்தைகளில் தெரிவது அவருடைய வலுவின்மை மட்டும் இல்லை நம்முடையதும் சேர்ந்தேதான் தெரிகிறது.

    முதிர்ச்சியின் அடையாளங்களாக நான் பார்க்கும் அத்தனையும் அருமை! வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவரின் அனுபவம் தெரிகிறது. எல்லாமாகச் சேர்த்து “ கைகளை விரித்துக்கொடுப்பது எனும் வார்த்தைகளில் அடங்கினாலும் “ என்னால் இயலாது” எனத்தன்லவலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவரால் தான் கைகளை விரித்துக்கொடுக்க முடியும்.

    சிலருடைய அருமை அவர்களுடன் வாழ்ந்து பார்த்தவர்களுக்கே புரியும். மற்றவருக்கு அவர் பத்தோடு பதினொன்றே! அதுபோலத்தான் பவுல் என்னதான் “இயேசுவே இறைமகன்” என அறிக்கையிட்டாலும் உரோமையருக்கு அவர் “ வெறும் ஒருவராகத தான்” தெரிகிறார்.

    தந்தையின் இறுதி வரி ஓங்கிய ஒரு குட்டாக ஒலிக்கிறது. “ நம்மைப்பற்றி நாம் என்னதான் “யானை...பூனை” என நினைத்துக்கொண்டிருந்தாலும் நம்மைப்பற்றித் தெரியாதவர்களுக்கு நாம் வெறும் எண்ணிக்கையே!

    இதுதான் வாழ்க்கை! எனக் கைகளை விரித்துக்காட்டுபவர்களின் இமைகளை உயர்த்த
    வைக்கும் ஒரு பதிவு. வாழ்க்கையின் பாதி கட்டம் மட்டுமே தாண்டியிருக்கும் இவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? என வியக்க வைக்கும் ஒரு பதிவு. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete