Wednesday, May 19, 2021

விவேகமும் தொடர்பணியும்

இன்றைய (20 மே 2021) முதல் வாசகம் (திப 22:30, 23:6-11)

விவேகமும் தொடர்பணியும்

பவுல் எருசலேமின் தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. 

சங்கத்திற்குள் நுழைகின்ற பவுல், அங்கே இருக்கின்ற சூழலைச் சட்டென்று புரிந்துகொள்கிறார். அங்கிருப்பவர்கள் இரு குழுவினராக இருக்கின்றனர். ஒரு குழுவினர் பரிசேயர், இன்னொரு குழுவினர் சதுசேயர். இவர்கள் இருவரும் யூதர்கள் என்றாலும், நம்பிக்கை அடிப்படையில் இரு குழுவினருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார் பவுல். 

பரிசேயர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். சதுசேயர்கள் அரசியல் பலத்தில் சிறந்தவர்கள்.

பரிசேயர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் நோக்கில், 'நான் ஒரு பரிசேயன்...' என்று தன்னுடைய வாதத்தைத் தொடங்குகிறார். உடனே அங்கே மோதல் உருவாகிறது. ஆக, பவுல் விசாரிப்பதற்காக அழைத்துவரப்பட்ட காரணம் ஒன்று, ஆனால், இங்கே நடப்பது வேறு. 

இதை பவுலின் விவேகம் என்று சொல்வதா? அல்லது அவருடைய சந்தர்ப்பவாதம் என்று சொல்வதா?

ஒருவரின் விவேகம் இன்னொருவரின் சந்தர்ப்பவாதம்.

பவுலின் இச்செயல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'ஒருவருக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.'

எடுத்துக்காட்டாக, நாம் ரின் சோப் வாங்க கடைக்குப் போறோம். 'ரின் சோப் இருக்கா?' எனக் கேட்கின்றோம். ஆனால், கடைக்காரர், 'ஸர்ஃப் எக்ஸெ;தான் நல்லா இருக்கும்' அல்லது 'இந்தாங்க ஏரியல்' என்று கொடுத்தால், நாம் அந்தக் கடைக்கு மீண்டும் செல்ல மாட்டோம். ஏனெனில், 'அவர் நான் விரும்புவதை அல்ல, தான் வைத்திருப்பதையே கொடுக்கிறார்.' 

பவுலிடம் கொடுப்பதற்கு நிறைய இருந்தது. இயேசுவைப் பற்றி, தன் பயணம் பற்றி, தன் நம்பிக்கை பற்றி என அவர் நிறைய பேசியிருக்க முடியும். ஆனால், அது தலைமைச் சங்கத்தின் தேவை இல்லை என்பதை உடனடியாக உணர்கின்றார். அவர்களுக்குத் தேவையானது எல்லாம், 'நீ யார்? அல்லது நீ யார் பக்கம்?' என்ற கேள்விக்கான விடைதான். பவுல் அதை அளிக்கின்றார்.

இதுதான் வெற்றியின் இரகசியம்.

இரண்டு விடயங்கள்,

ஒன்று, அடுத்தவர் நம்மிடம் எதையும் கேட்காமல் அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

இரண்டு, அடுத்தவர் கேட்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

பவுலின் விவேகம் அவரைக் காப்பாற்றினாலும், தலைமைச் சங்கம் அவரைச் சிறையில் அடைக்கின்றது. சிறை அனுபவம் அவருக்கு இறையனுபவமாக மாறுகின்றது. 'நீ உரோமையிலும் எனக்குச் சான்று பகர வேண்டும்' என அவரை உறுதிப்படுத்துகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார். 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!' என்பதே அவருடைய இறைவேண்டலாக இருக்கிறது. 'ஒன்றாக இருத்தல்' என்பது இணைந்திருத்தலைக் குறிக்கிறது. யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், 'இணைந்திருத்தல்' மட்டுமே 'கனி தருதலுக்கான வழி.'

பவுல் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் இறைவனோடு இணைந்திருந்தார். அதன் வழியாகக் கனி தந்தார்.

நாம் பெறுகின்ற அழைப்பும் இதுவே.


2 comments:

  1. வெற்றியின் இரகசியம்.... புனித பவுல் நமக்குக் கற்றுத்தருகிறார்.
    “அடுத்தவர் கேட்காத எதையும் அவருக்குக் கொடுக்க வேண்டாம்;
    அடுத்தவர் கேட்பதைத் தவிர வேறு எதையும் அவருக்குக் கொடுக்க வேண்டாம்”

    “சிறை அனுபவத்திலும்” கூட பவுலின் விவேகம் கூடவே வந்து அதை “இறையனுபவமாக” மாற்றுகிறது.

    “ இணைந்திருத்தலும்” அதன் வழியாகக் “கனி தருதலுமே” இறைவனால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கொடை. அதை சிலர் பொன்போலப் பாதுகாக்கின்றனர்... வேறு சிலர் மண்போல வாரி இறைக்கின்றனர். நாம் என்ன செய்கிறோம்? சுய சோதனையைத் தூண்டிவிட்டு அதற்கான விடையையும் தேடத் தந்தை விடுக்கும் ஒரு அழைப்பு. நன்றிகள் !!!

    ReplyDelete