Friday, May 14, 2021

முன்வருதல்

இன்றைய (15 மே 2021) முதல் வாசகம் (திப 18:23-28)

முன்வருதல்

இன்றைய முதல் வாசகத்தில் அப்பொல்லோ என்ற கதைமாந்தரைப் பார்க்கிறோம். இவர் எபேசில் கற்பித்து வருகின்றார்.

இவரிடம் அப்படி என்ன சிறப்பு?

பவுலைப் போல தமஸ்கு நகரிக்குச் செல்லும் வழியில் ஆண்டவரை எதிர்கொள்ளவில்லை என்றாலும், பேதுரு மற்றும் யோவான் போல ஆண்டவரின் திருத்தூதர்களாக இவர் இல்லாவிடினும், தானாக முன்வந்து நற்செய்திப் பணி செய்கின்றார். தன்னுடைய திறமைகள் அனைத்தையும் நற்செய்திப் பணிக்காகச் செலவிடுகின்றார். என்ன ஆச்சர்யம்!

ஆக, நம் வாழ்வில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால், பெரிய அளவில், பெரிய நபராக, பெரிய அழைத்தலைப் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக, சிறிய அளவில், சிறிய நபராக, சிறிய அழைத்தலோடு செய்யலாம்.

முன்வருதல் எப்படி வரும்?

ஒன்று, எனக்கு என்மேல் தன்நம்பிக்கை இருக்கும்போது வரும். தன்நம்பிக்கை இல்லாமல் முன்வருதல் சாத்தியமில்லை. நான் நிறைய கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, ஏதாவது விளையாட்டு நடத்த, 'யாராவது முன்வருகிறீர்களா?' என்ற கேட்கும்போது, பலர் தயக்கம் காட்டுவதுண்டு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தன்நம்பிக்கை குறைவு. ஒரே ஒரு இடத்தில்தான் அமர்வில் இருந்த 20 பேரும் கைகளை உயர்த்தினர்.

இரண்டு, அடுத்தவர் தேவையில் இருக்கும்போது. என்னுடைய தன்நம்பிக்கை மட்டுமல்ல. அடுத்தவரின் தேவையும் சில நேரங்களில் நம்மை முன்வரத் தூண்டும். நாம் நடந்து சென்றுகொண்டிருக்கிறோம். திடீரென நமக்கு முன்னால் செல்லும் நபர் ஒருவர் மயங்கி விழுகிறார். உடனே நாம் ஓடிச் சென்று அவரைத் தூக்குகிறோம். இங்கே, நம் தன்னம்பிக்கையைவிட அவருடைய தேவை நம்மை ஓட வைக்கிறது.
மூன்று, பணி நிமித்தமாக. பணியின் நிமித்தமாக சில நேரங்களில் நாம் முன்வருவோம். மருத்துவமனைக்குச் செல்கிறோம். அங்கே காயம் பட்டு ஒருவர் கட்டிலில் அழைத்துவரப்படுகின்றார். நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கலாம், அடுத்தவர் தேவையில் இருக்கலாம். ஆனால், பணிசார் அறிவு இல்லாமல், அல்லது பணியின் கடப்பாடு இல்லாமல் நான் அவருக்கு உதவி செய்ய முன்வர முடியாது.

அப்பொல்லோ இந்த மூன்று காரணங்களுக்காக நற்செய்தி அறிவிக்க முன்வந்தாலும், இதையும் தாண்டி ஒரு காரணம் இருந்தது.

அவர், 'இயேசுவே மெசியா' என எடுத்துக்காட்டினார்.

தன் வாழ்வாலும், வார்த்தையாலும்.

பெருந்தொற்று போன்ற பேரிடர் காலத்தில் நம் நடுவிலும் நிறைய தன்னார்வத் தொண்டவர்கள் எழுந்து முன்வருகின்றனர். பொருளுதவி, பண உதவி, மருத்துவ உதவி, இருத்தல் உதவி எனப் பல நிலைகளில் அடுத்தவர்களோடு கைகளை இணைக்கின்றனர்.

 

1 comment:

  1. “நம் வாழ்வில் ஒரு செயலைச்செய்ய வேண்டுமென்றால் பெரிய அளவில்...பெரிய நபராக... பெரிய அழைத்தலைப்பெற்றிருக்க வேண்டும் என்றில்லை....சிறிய நபராக...சிறிய அளவிலும்...சிறிய அழைத்தலோடும் செய்யலாம்...இன்றைய வாசகத்தில் வரும் “ அப்போல்லோ” போல” என்கிறது இன்றையப்பதிவு.

    இச்செயலை சாத்தியமாக்க நம்மிடம் இருக்கவேண்டியது தன்னம்பிக்கை,பிறர்சேவை, பணிமனப்பான்மை எனும் விஷயங்களைத்தாண்டி “ இயேசுவே மெசியா” என்று உரக்கச்சொல்லும் செய்கை மனப்பான்மையுமே!

    இன்றையப் பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் நம் தன்னார்வத தொண்டர்களின் பொருளுதவி,பண உதவி,மருத்துவ உதவி இவற்றைச் சாத்தியமாக்குவது....அவர்களைத் தங்கள் பணியின் மூலம் ஒருவர் மற்றவரோடு கைகோர்க்க வைப்பது இந்த சேவை மனப்பான்மையே என்கிறார் தந்தை. இதை வாசித்தபிறகு “நீ என்ன செய்யப் போகிறாய்? இதில் உன் பங்கு என்ன?” என்ற என் உள்மனத்தின் ஓசை கேட்கிறது. உந்துதலைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete