Friday, April 16, 2021

முதன்மையானது

இன்றைய (17 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 6:1-7)

முதன்மையானது

இன்றைய முதல் வாசகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். திருச்சபையில் முதன் முதலாக திருத்தொண்டர்களாக எழுவரைத் தொடக்கத் திருச்சபை ஏற்படுத்தும் செய்யும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.

நாம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய சில வாழ்வியல் பாடங்களை இந்நிகழ்வு நமக்குச் சொல்கிறது.

அ. 'கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் கவனிக்கப்படவில்லை'

இங்கே 'பந்தி' என்பது திருமண விருந்து அல்ல. மாறாக, தொடக்கத் திருஅவை கூடி வருகின்ற அன்பு விருந்து. ஏறக்குறைய நம் அன்பியக் குழுமம் போன்றது. இறைவார்த்தை வாசிப்பு, இறைவேண்டல், அப்பம் பிட்குதல், உணவு பகிர்தல் என்ற நான்கு நிகழ்வுகள் ஒவ்வொரு குழுமத்திலும் நடைபெறும். இப்படி இவர்கள் கூடி வரும் இடத்தில் மொழிப் பிரச்சினை வருகிறது. எபிரேய மொழி பேசுவோர் கிரேக்க மொழி பேசுவோரை விருந்திலிருந்து ஒதுக்குகின்றனர். குறிப்பாக கிரேக்க மொழி பேசுவோரின் கைம்பெண்கள் கண்டுகொள்ளப்பட மறுக்கிறார்கள். கைம்பெண்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் சமூகத்திலும் ஆன்மீகத் தளத்திலும் பாவிகள் எனக் கருதப்பட்டனர். இவர்களில் பலர் ஏழைகளாக இருந்தனர். இப்படி முழுக்க முழுக்க இறைவனையும் மற்றவர்களையும் சார்ந்திருக்கும் கைம்பெண்கள் விருந்தில் கவனிக்கப்படாமல் இருப்பது தவறே. இது திருத்தூதர்களின் பார்வைக்கு உடனடியாகக் கொண்டுபோகப்படுகிறது. 

ஆக, ஒரு தனிநபருக்கு, குடும்பத்திற்கு, குழுமத்திற்கு இந்நிகழ்வு கற்பிப்பது என்ன? யாருக்கு என்ன தேவை என்பதை உடனடியாகக் கண்டுகொள்வது ஒரு நல்ல வாழ்வியல் பாடம்.

ஆ. 'திருத்தூதர்களின் நடவடிக்கை'

திருத்தூதர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும், அனைவரையும் ஒன்றாகக் கூட்டுகின்றனர். முடிவைத் தாங்கள் மட்டும் எடுக்காமல் இணைந்து செயலாற்றுகின்றனர்.

ஆக, ஒரு பிரச்சினை வரும்போது அதற்கான நேரத்தை உடடினயாகச் செலவிட்டு, அனைவரையும் ஒன்றிணைத்து முடிவுக்கு வருவது.

இ. 'இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும்'

'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால், அன்பர்களே, உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்.'

திருத்தூதர்கள் முதன்மையை முதன்மையாக வைத்திருந்தார்கள். பந்தியில் பரிமாறும் பணியும் முக்கியம்தான். அதற்காக, அதைவிட பெரிய இறைவேண்டல் மற்றும் இறைவார்த்தைப் பணியை சமரசம் செய்ய முடியுமா? படிக்கத் தெரியாத திருத்தூதர்களின் மேலாண்மைக் கொள்கை ஆச்சர்யமாக இருக்கிறது. இன்றைய திருச்சபை ஒட்டுமொத்தமாக இறைவேண்டலையும், இறைவார்த்தையையும் விட்டுவிட்டு, 'பந்தி பரிமாறும் வேலையை' இன்று செய்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதே. நானும் சில நேரங்களில் 'பந்தி தான் பரிமாறிக்கொண்டு இருக்கிறேன்.' 

பந்தி பரிமாறுவது எளிது. பத்து நிமிடத்தில் வயிறு நிறைந்தவர்கள் நம்மை வாழ்த்துவார்கள். நமக்கு நிறைய முகங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களை வைத்து நம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம். அல்லது அவர்கள் நம்மை வைத்துச் சாதித்துக்கொள்வார்கள். ஆனால், இறைவேண்டலும் இறைவார்த்தையும் அப்படி அல்ல. தனிமையாக அமர்ந்து வாசிக்க வேண்டும், செபிக்க வேண்டும். ஆனால், இதன் பயன் நீடித்தது.

ஆக, நீடித்த ஒன்றுக்காக தற்காலிகமான ஒன்றை இழக்கத் துணிகின்றனர் திருத்தூதர்கள். முதன்மையானதை முதன்மையானதாக வைத்துக்கொள்தல் அவசியம். நம் வாழ்வின் பெரியவற்றுக்காக சிறியவை ஒருபோதும் துன்புறல் கூடாது.

ஈ. 'கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்'

மிக எளிய சடங்குமுறை. திருப்பலி உடைகள் இல்லை. பெரிய குழுமம் இல்லை. வருகைப் பாடல் இல்லை. வண்ண விளக்குகள் இல்லை. புகைப்படக் கருவிகள் இல்லை. நீண்ட பாடல்கள் இல்லை. ரொம்ப எளிய சடங்கு. கைகளை வைத்து வேண்டினர். அவ்வளவுதான், சடங்கு முடிந்துவிட்டது.

ஆக, தேவையற்ற வாழ்வியல் சடங்குமுறைகளை விடுத்து தேவையானதை மட்டும் பற்றிக்கொள்வது.

இப்படியாக,

திருத்தூதர்கள் முதன்மையானதை முதன்மையானதாக வைத்திருந்ததால் சீடர்களின் எண்ணிக்கை மிகுதியாகப் பெருகியது. 

இன்றைய நம் வாழ்விற்கும் மறைத்தூதுப்பணிக்கும் திருத்தூதர்களின் 'முதன்மைப்படுத்துதல்' ஒரு நல்ல பாடம்.

2 comments:

  1. ஆதித் திருச்சபையின் திருத்தொண்டர்களிடம் இருந்த நற்பண்புகளும்...திருச்சபையின் வளர்ச்சியும் எடுத்துரைக்கப்படும் ஒரு பதிவு. திருத்தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும்....பிரச்சனைகள் வருகையில் அவற்றை சுமுகமாகத் தீர்த்த விதமாகட்டும்...கைம்பெண்கள் மீது காட்டிய கரிசனமாகட்டும்... இறைவேண்டலில் உறுதியாய் நிற்க வேறு எழுவரைத் தேர்ந்தெடுத்த விதமாகட்டும்.. அனைத்திலும் முதன்மையானதற்கு முன்னுரிமை!

    இல்லறத்தாருக்கும் விஷயங்கள் இருக்கிறது.தேவையானதை வைத்துக்கொண்டு தேவையற்றதை விடுவதும்....முதன்மையானதை முதன்மையாக வைத்துக்கொள்வதும்.. சிறியதைப் பெரியவற்றிற்காகப் பலிகொடுக்கக்கூடாதென்பதும்.

    இல்லறத்தாரும்..துறவறத்தாரும் இணைந்தே திருஅவையை நடத்துகையில் திருத் தூதர்கள் கொண்டாடிய “ முதன்மைப்படுத்துதல்” இன்றும் நடக்க வாய்ப்புண்டு.

    தந்தைக்கு ஒரு கேள்வி.! கைம்பெண்கள் பரிதாபத்திற்குரியவர்கள்..சரிதான்! அதென்ன பாவிகள்? கொஞ்சம் இடிக்கிறதே? இருப்பினும் “ முதன்மையானது முதன்மையானது தான் எனும் உண்மையை அடித்துச்சொன்ன தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும்....... எழுவரைத் தேர்ந்தெடுத்தது பந்தி மறிமாற...... இறைவேண்டலுக்கு அல்ல.....

    ReplyDelete