Wednesday, July 20, 2016

அந்தக் காலணிகள்

இன்று எங்களின் அலுவலகங்களைச் சுத்தம் செய்தோம்.

தேவையற்றதைக் கழித்து ஒதுக்கவும், அறையின் ஒட்டடை மற்றும் குப்பைகளை அகற்றவும் வெளியிலிருந்து ஆட்களை அழைத்திருந்தோம்.

'ஆட்கள் வேலை செய்கிறார்கள். சென்று பார்ப்போம்!' என நான் புறப்பட்டேன்.

செல்லும் வழியில் ஒரு அம்மா தன் தலையில் சும்மாடு இட்டு பெரிய ஃபோட்டோக்கள் இரண்டை சுமந்து கொண்டு வந்தார்கள். அந்த அம்மாவிற்கு வயது 60ஐ ஒட்டி இருக்கும். அவரைப் பார்த்தவுடன் என் நினைவு சட்டென்று உறைந்துவிட்டது.

இந்த 60 வயதிலும் தன் தேவைக்காக, தன் குடும்பத்தின் தேவைக்காக இவர் உழைப்பதைப் பார்க்கும்போது எனக்கு குற்ற உணர்வாக இருந்தது.

'நான் வேலை பார்ப்பதில்லை. அவர்கள் வேலை பார்க்கிறார்கள்!' என்று நான் சொல்ல வரவில்லை.

இருந்தாலும், நான் வேலை பார்ப்பது என்னவோ குறைவுதான் என்று தோன்றிற்று.

அவர்கள் தூரத்தில் இருந்து வருவதாகச் சொன்னார்கள். ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை. காலையில் என்ன சாப்பிட்டிருப்பார்கள்? மதியம் என்ன சாப்பிட்டார்கள்? என எதுவும் எனக்குத் தெரியாது. மதியம் தூங்கவும் இல்லை. மதிய உணவு முடிந்த அடுத்த நிமிடம் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.

ஒடுங்கிய தேகம். ஒடுங்காத உற்சாகம். மிக எளிமையான தோற்றம்.

நான் கொஞ்ச நேரம் வேலை செய்தாலும் நிறைய வேலை செய்ததாக நினைத்துக் கொள்கிறேன். சில நேரங்களில் நான் செய்யும் வேலை தான் சிறந்தது என்ற எண்ணமும் வந்து போகிறது. கொஞ்ச நேர வேலைக்கு மதிய ஓய்வு வேறு சில நேரங்களில்.

அவர்கள் காலையிலிருந்து மாலை வரை செய்த வேலையில் அலுவலகம் தூய்மையாகிவிட்டது. அவர்களின் உழைப்பின் பலன் உடனடியாகத் தெரிந்துவிடுகிறது.

ஆனால் என் உழைப்பின் பயன் எதிலும் தெரிவதில்லை.

என் உழைப்போடு நான் சமரசம் செய்கிறேனோ?

அல்லது என் உழைப்பை விட அதிக சௌகரியங்களை நான் அனுபவிக்கின்றேனோ?

கைக்குக் கவசம் இல்லை.

மூக்குக்கு முகமூடி இல்லை.

அவரின் பாதங்களை விட கொஞ்சம் நீளமாகவே இருந்த தேய்ந்த காலணிகளை அணிந்து கொண்டு அவர் இன்னும் என் வராண்டாவில் நடந்து செல்வதுபோலவே எனக்குத் தெரிகின்றது.

அந்த அம்மாவின் பெயரைக் கேட்கவும் துணிச்சல் பிறக்கவில்லை எனக்கு.

வாழ்வில் அத்தியாவசியங்களே இல்லாமல் அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது?

சின்னச் சின்ன அசௌகரியங்களை என்னால் ஏன் சகித்துக் கொள்ள முடியவில்லை?

அவர்கள் நிம்மதியாக இரவில் உறங்கச் செல்வார்கள். ஆனால், ஓய்வு, நிறைவு, சௌகரியங்கள் இருக்கும் எனக்கு இரவில் மனச்சோர்வு வருவது ஏன்?

எனக்கு ஓர் ஆசை.

அந்த அம்மாவின் காலணிகளைக் கேட்டு வாங்க வேண்டும் என்று.

60 வயது நிரம்பிய ஒரு பாட்டி தன் வயிற்றுத் தேவைக்கு உழைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என் மண்ணில், என் தேவைகள் பெரிதல்ல என்று அந்தக் காலணிகள் எனக்கு உணர்த்தும்!

4 comments:

  1. எத்துணை நிதர்சனமான உணர்வுகளின் பிரதிபலிப்பு இன்றைய பதிவில்! தந்தை தன் மனசாட்சியை நோக்கி நீட்டும் அவரின் விரல்கள் நம் குற்றமுள்ள நெஞ்சங்களையும் கூறு போட வைக்கின்றன.எத்தனை எத்தனை கேள்விகள்!அவை எவற்றுக்குமே நிறைவான பதில் நம்மிடமில்லை என்பதே நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை." வாழ்வில் அத்தியாவசியங்களே இல்லாமல் ஒரு அறுபது வயதுப் பெண்மணியால் வாழ முடியுமானால் ஓய்வு, நிறைவு,சௌகரியங்கள் என வாழும் நம்மில் பலருக்கு மனச்சோர்வு மட்டுமே மிச்சமிருப்பது எதனால்?" மனசாட்சியின் திரியைத் தூண்டிவிட்ட தந்தையிடம் ஒரு வேண்டுகோள்...அந்த அம்மாவின் காலணிகள் கிடைத்தால் சொல்லுங்கள்..நம்மில் பலருக்கு அவை பல வாழ்க்கைப் பாடங்களைப் புகட்டும். மனசை உசுப்பி விட்டதொரு பதிவிற்காகத் தந்தையை எத்துணை பாராட்டினாலும் தகும்!!!

    ReplyDelete
  2. Anonymous7/21/2016

    Dear Yesu,
    Good Morning.
    Have a blessed day.

    ReplyDelete
  3. அந்தம்மாவுக்கு இருந்த ஒற்றை செருப்பையும் ஆட்டைய போட ப்ளான் போட்டுட்டீங்களா ??

    ReplyDelete