Thursday, July 7, 2016

நீதிமொழிகள் - 20

'எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை.
பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.'
(நீமொழி 19:2)

முதல் ஏற்பாட்டு மக்களை இறைவாக்கினர் வழியாக கடவுள் சாடுவதற்கு அதிகக் காரணமாக இருந்தது அவர்களின் பிளவுபட்ட மனம்.

ஒருவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மனம் அடுத்தவருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டாலோ, அல்லது அடுத்தவருக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டாலோ அதை பிளவுபட்ட மனம் என அழைக்கிறது எபிரேய விவிலியம்.

அதாவது, யாவே இறைவனைத் தங்கள் கடவுளாகக் கொண்டு தங்களையே அவரிடம் அர்ப்பணம் செய்த இஸ்ரயேல் மக்கள், பாகால் இறைவனுக்கும், அஸ்தரோத்துக்கும் தங்கள் அர்ப்பணத்தைப் பகிர்ந்து கொடுத்தாலோ, முழுமையாகக் கொடுத்தாலோ அது பிளவுபட்ட மனம்.

பிளவுபட்ட மனம் வருவதற்குக் காரணம் முழுமையாக எண்ணி முடிவெடுக்காததுதான்.

முழுமையாக எண்ணி முடிவெடுத்த ஒருவர் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும்.

கலப்பை பிடித்து உழ வேண்டும் என்ற களத்தில் இறங்கியவர் முழுமையாக நிலத்தை உழ வேண்டும். பாதி உழுதுவிட்டு, 'நாளை பார்க்கலாம்!' என்றோ, 'அங்கே நிழலாக இருக்கிறது! அங்கே போகலாம்!' என்றோ, 'என் நண்பர்கள் பம்ப் செட்டில் குளிக்கிறார்கள். நான் அங்கே போகிறேன்!' என்று சொல்லிக் கொண்டோ பாதிவழி திரும்ப முடியாது. உழுவதற்கு இறங்குமுன் அவர் எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆனால், ஏர்பிடித்து உழுவது போல் வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல. சில நேரங்களில் நம் எண்ணங்கள், திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியமும் வந்துவிடுகிறது.

இருந்தாலும்,

'எண்ணிப் பார்த்து இறங்குவதே சிறந்தது'

இதையே வள்ளுவப் பெருந்தகையும்,

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு' (குறள் 467)

'நன்கு திட்டமிட்ட பிறகே வேலையைத் தொடங்க வேண்டும். தொடங்கிவிட்டு பின் திட்டமிடுவது துன்பம் அல்லது தவறு அல்லது பிறழ்வு!'

1 comment:

  1. 'பிளவு பட்ட மனம்'.... இதைத்தான் ஊர்ப்பக்கம் ' ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்' என்று சொல்வார்கள்.இதுவும் வேண்டும்; அதுவும் வேண்டும்...இதுதான் மனித மனம்.ஒருவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மனம் அடுத்தவருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டாலோ இல்லை முழுமையாகக் கொடுக்கப்பட்டாலோ.....இதைத்தான் பிளவுபட்ட மனம் என்று எபிரேய விவிலியம் சொல்வதாகத் தெரிவிக்கிறார் தந்தை. மனித மனத்தின் நோய்,நொடிகளை இறைவனிடம் துகிலுரித்துக் காட்ட விழைகிறது மனம். ஆனால் இரத்தமும்,சதையுமாக இருக்கும் இந்த மனித மனம் விரும்புவது 'இன்ஸ்டன்ட் தீர்வு'. இதை நாடி மனிதரிடம் போவதால் தான் அத்தனை துயரங்களும்.நாம் தேடிச், செல்பவர்களும் பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. பின் எதற்காகப் பிளவுபட வேண்டும் இந்த மனம்? இங்கே வள்ளுவரின் வாய்மொழி கொஞ்சம் ஆறுதல் தருகிறது." எண்ணுவோம்; எண்ணியபிறகே செயலாக்குவோம்".. நல்லதொரு கருத்துப் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete