Tuesday, July 5, 2016

நீதிமொழிகள் - 18

'வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்.
வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு!' (நீமொ 17:14)

புனேயில் ஒரு வாரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

இப்படியே பெய்து கொண்டிருந்தால் வெள்ளம் வந்துவிடும் என என் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் வசிக்குமிடத்தில் திடீரென மதகு திறக்கப்பட்ட ஆற்றில் பெருகிவந்த வெள்ளம் பற்றிக் குறிப்பிட்டார். எதிர்பாராத நேரத்தில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஏரிகள் திறந்துவிடப்பட்டதால் சென்னை அனுபவித்த துயரம் இன்னும் காயவில்லை.

'வாக்குவாதத்தை தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்' என்கிறார் ஆசிரியர்.

'வாக்குவாதம்' என்பது தத்துவயியல் தர்க்கம் அல்ல. மாறாக, சண்டை. அதாவது, ஒருவர் மற்றவர் மேல் அடுத்தடுத்த சொல் அம்புகளை எய்வது.

வாக்குவாதங்கள் இரயில் பெட்டிகள் போல, ஒன்று மற்றொன்றை என நிறைய பழைய சரக்குகளை வெளியே இழுத்துவந்துவிடுகின்றன.

மதகு வழியே வெளியேறும் நீரும் அப்படித்தான் எல்லா அழுக்குகளையும் வெளியே கொண்டு வந்துவிடுகிறது. மேலும், மதகில் வெளியேறும் நீரை திரும்பவும் நம்மால் அணைக்குள் அனுப்ப முடிவதில்லை.

ஆக,

'வாக்குவாதம் வளருமுன் அதை நிறுத்திவிடுதல் சால்பு!'

1 comment:

  1. முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்படும் மதகுகளால் விளையக்கூடிய நாசத்தை தேவையற்ற வாக்குவாதத்தால்,அர்த்தமற்ற வார்த்தைகளால் ஒருவரை சாடுவதால் வரும் விளைவுடன் ஒப்பிடுகிறார் தந்தை. ஒருவர் மற்றவரிடம் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்று தெரியாமலேயே வார்த்தை அம்புகளை எறிவதுதான் வாக்குவாதம்.வெளியே வந்த அழுக்கு எவ்விதத்திலும் சுத்தமடைய வழியில்லை என்பதை அறியாத நிலையில் இந்த வார்த்தை விளையாட்டால் ஏற்படுவது ஆறாத மனக்காயங்களே! நம் வார்த்தைகள் ' ஆம்! , இல்லை' என இருப்பது மட்டுமே இதைத்தவிர்க்க வழி.அர்த்தமுள்ள ,நல்ல,சில வரிகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்.

    ReplyDelete