Monday, July 4, 2016

நீதிமொழிகள் - 17

'ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கியவரையே இகழுகிறார்.
பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.'
(நீமொ 17:5)

'Dear and Glorious Physician. A Novel about Luke' என்ற நாவலை எழுதுகின்ற டேய்லர் கால்ட்வெல், கதாநாயகன் லூக்கானுஸ் பற்றி ஒரு குறிப்பை பதிவு செய்கின்றார்.

தன்னுடன் பணி செய்யும், அல்லது தனக்காக பணி செய்யும் அடிமைகள், தன் சுமையைச் சுமப்போர், தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் நோயுற்றோர், ஏழையர் அனைவரையும் பார்க்கும் லூக்கானுஸ், கடவுளைப் பார்த்து, 'இவர்களை எல்லாம் ஏன் இப்படி வைத்திருக்கிறாய்? உனக்கு கருணை இல்லையா?' என்று புலம்புவதாக எழுதுகிறார்.

அதாவது, இவர்களை எல்லாம் பார்த்து, லூக்கானுஸ் தன்மையம் கொண்டவராக, 'இவர்களை விட நான் நன்றாக இருக்கிறேன். இறைவா, உனக்கு நன்றி' என்று சொல்லாமல், இவர்களுக்காக வருந்துபவராக இருந்தார் எனக் குறிப்பிடுகிறார் கால்ட்வெல்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பேத்கார் அவர்கள் 1936ஆம் ஆண்டு எழுதிய 'Annihilation of Caste' என்ற நூலை வாசித்தேன். தொடர்ந்து சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய 'தமிழ்க் கிறித்தவம்' என்ற நூலையும் வாசித்தேன். கிறிஸ்தவர்களாக மதம் மாறியபோது தன் மத அடையாளத்தைத் துறந்த கிறிஸ்தவர்கள், தங்கள் சாதிய அடையாளத்தைத் துறக்கவில்லை இன்றுவரை என எழுதிகிறார் சிவசுப்பிரமணியன். மேலும், கிறிஸ்தவ மதத்தில் சாதியம் இருந்ததால்தான் தான் புத்தமதத்தை தழுவியதாக எழுதுகிறார் அம்பேத்கார்.

ஒருவர் பொருளாதார அடிப்படையில் இன்று உயர்ந்து நின்றாலும் அவரின் சாதியை வைத்து தாழ்வானவராக காட்டுகிறது நம் மண்ணில் இருக்கிறது.

ஒருவரின் பொருளாதார நிலையை, ஏழ்மையை வைத்து ஒருவரை இகழ்தல், அவரைப் படைத்தவரையே இகழ்தலுக்குச் சமம் என்கிறார் நீமொ ஆசிரியர்.

அப்படியிருக்க, நாம் ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், பணக்காரர்-ஏழை, படித்தவர்-படிக்காதவர் என்று மற்றவரை அளக்கும்போதெல்லாம் நம்மைப் படைத்தவரையே அளக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோமோ?

2 comments:

  1. ' லுக்கானூஸ்' ...எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம். செழிப்பு மிக்க தன் வாழ்க்கை தரும் திருப்தியோடு நின்றுவிடாமல், தன் சகோதரர் கண்ணில் வடியும் கண்ணீருக்கு கடவுளைப் பார்த்துக் காரணம் கேட்க பெரிய மனது வேண்டும். தான் எழுதிய ' படைப்புப் புத்தகத்தின்' ஒவ்வொரு பக்கத்தையும் இறைவன் வித்தியாசமாக எழுதியிருப்பதன் விளைவுதான் நாம் அன்றாடம் பார்க்கும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமென நினைக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை நமக்குக் கிடைத்த அத்தனையையும் அதன் இயல்பு மாறாமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அதை மாற்றுவது, அதைத் தவிர்ப்பது சரி எனத்தோன்றவில்லை.நம்மைப் பெற்றவள் சரி இல்லையெனில் அடுத்த வீட்டுப் பெண்ணை ' அம்மா' என ஏற்றுக்கொள்பவன் வாழத்தகுதியற்றவன் என்பது என் எண்ணம். ஆண்டவன் படைப்பில் எதுவுமே சோடையில்லை.அந்தப் படைப்பில் குற்றம் காண்பவர்....அதை நம் போக்குக்கு அளக்கும்போது நம்மைப் படைத்தவரையே அளக்கிறோம்..... நெற்றிப்பொட்டில் 'சுருக்'என்று தைக்கிறது தந்தையின் வார்த்தைகள்.எனக்கு ஒரு சந்தேகம்...தந்தையின் அறிவுத் தாகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அவர் தன் தேடலை " திருத்தூதர் பணிகள்", " நீதிமொழிநூல்கள்" என நிறுத்திக் கொள்ளாமல் இப்படி டேய்லர் கால்ட்வலையும்,அம்பேத்கரையும்,சிவசுப்ரமணியத்தையும் தேடிச் செல்ல எங்கே, எப்படிக் கிடைக்கிறது நேரம்? புரியவில்லை.தேடலில் கிடைக்கும் புதையல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் நேர்த்திக்காகத் தந்தைக்கு என் நன்றிகள் கலந்த பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தொடரட்டும் எங்கள் தேடல்!! கிடைக்கட்டும் புதையல் எமக்கு!!!
    தந்தைக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்ககள்

    ReplyDelete