Saturday, September 9, 2023

கட்டின்மை போற்றி!

இன்றைய இறைமொழி

சனி, 9 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 22-ஆம் வாரத்தின் சனி

கொலோ 1:21-23. லூக் 6:1-5.

கட்டின்மை போற்றி!

இன்றைய நற்செய்தி வாசக நிகழ்வு ஓய்வுநாளன்று நடந்தேறுகிறது. யூத மரபில் ஓய்வுநாள் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனித நிகழ்வு. இந்த நாளன்று எந்தவகை வேலையும் தடைசெய்யப்பட்டது. இன்றும்கூட இஸ்ரயேல் நாட்டில் சனிக்கிழமை அன்று யூதர் ஒருவர் நம்முடன் லிஃப்டில் ஏறினால், அவர் இறங்க வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்துமாறு நம்மிடம் கேட்பார். சில இடங்களில் சனிக்கிழமை அன்று எல்லா மின்தூக்கிகளும் தாமாகவே அனைத்துத் தளங்களிலும் நின்று செல்லும். இவ்வாறாக, தம் கையைச் சற்றே உயர்த்தி எண்ணை அழுத்துவதும் ஓய்வுநாளில் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பரிசேயர் ஓய்வுநாளை மிகவும் கண்ணும் கருத்துமாகக் கடைபிடித்தனர். ஆகையால்தான், ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்கள் கொய்து உண்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சீடர்களை இயேசு கடிந்துகொள்ளாமல் இருந்தது அவர்களுக்கு இன்னும் நெருடலாக இருந்தது. 

பரிசேயர்களின் நெருடலுக்குப் பதிலிறுப்பு செய்கிற இயேசு, பழைய ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். தாவீதும் அவருடன் இருந்தவர்களும் அர்ப்பணம் செய்யப்பட்ட அப்பங்களை உண்ட நிகழ்வை (காண். 1 சாமு 21:26) சுட்டிக்காட்டுகிறார் இயேசு. மனிதர்களின் தேவை சடங்குமுறைகளைவிட முதன்மையானது என்பதைத் தம் சமகாலத்துப் பரிசேயர்களுக்குப் புரிய வைக்கிறார் இயேசு. மேலும், தாவீது பற்றிய நிகழ்வை எடுத்துக்கூறியதன் வழியாக, தாம் தாவீதின் மகன் என்பதையும், கடவுள் என்ற நிலையில் ஓய்வுநாளும் (அனைத்து நேரமும்) தமக்குக் கட்டுப்பட்டதே என்றும் சொல்கிறார் இயேசு. 

இந்த நிகழ்வின் வழியாக இயேசு இரு பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறார். ஒன்று, நீதியும் இரக்கமும் சமநிலையில் நம் வாழ்வில் இருக்க வேண்டும். சடங்கு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்கு ஒருவர் காட்டுகிற அக்கறையை, மற்றவர்கள்மேல் இரக்கம் மற்றும் கனிவாகவும் காட்ட வேண்டும். ஓய்வுநாளின் முக்கியத்துவத்தைப் போற்றுகிற இயேசு மனிதத் தேவையையும் இரக்கத்தையும் முதன்மைப்படுத்துகிறார். இரண்டு, ஓய்வுநாள் என்பது மனிதர்களைக் கட்டி வைக்கிற சுமையாக அல்ல, மாறாக, கட்டின்மையின் வெளிப்படையாக அமைய வேண்டும். கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள கொடையே ஓய்வுநாள். இந்த நாளின் வழியாக மனிதர்கள் புத்துணர்வு பெற வேண்டுமே அன்றி, குற்றவுணர்வு பெறக் கூடாது. கடவுளை நோக்கித் திரும்ப வேண்டுமே தவிர, தங்களை நோக்கியே திரும்பக் கூடாது, தங்கள்மேலும் மற்றவர்கள்மேலும் கனிவும் இரக்கமும் காட்டவேண்டுமே தவிர, தங்களையும் மற்றவர்களையும் தீர்ப்பிடுதல் கூடாது.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் தம்மையே 'நற்செய்தியின் திருத்தொண்டர்' என அழைக்கிறார். திருத்தொண்டர் நிலையில் அவர் நற்செய்திக்கும் இறைமக்களுக்கும் பணி ஆற்றினார்.


No comments:

Post a Comment