Thursday, September 7, 2023

அன்னை கன்னி மரியாவின் பிறப்பு

இன்றைய இறைமொழி

வெள்ளி, 8 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 22-ஆம் வாரத்தின் வெள்ளி

உரோ 8:28-30. மத் 1:1-16, 18-23.

அன்னை கன்னி மரியாவின் பிறப்பு

நம் தாய்த் திருஅவை மூன்று பேரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் (டிசம்பர் 25). அவருடைய முன்னோடி திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் (ஜூன் 24). அவருடைய தாய் கன்னி மரியாவின் பிறந்தநாள் (செப் 8). நம் மண்ணில் இன்றைய நாளை ஆரோக்கிய அன்னையின் திருநாள் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் மகிழ்ச்சி தருகிறது. கன்னி மரியாவின் பிறப்பு நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ஏனெனில், இவர் வழியாகவே நம் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசு பிறக்குமாறு தந்தையாகிய கடவுள் திருவுளம் கொள்கிறார். 

இன்றைய முதல் வாசகம் (உரோ 8:28-30) கடவுளின் திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களுக்கு நிகழும் நன்மை பற்றிப் பவுல் எழுதுவதை நம் முன் கொண்டுவருகிறது. மரியா கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவராக இருக்கிறார். அவருடைய நன்மைக்காகவே தூய ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். முன்குறித்து வைத்த அவரை கடவுள் அழைத்தார். அழைத்த அவரைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருக்குத் தம் மாட்சியில் பங்குதந்தார்.

கன்னி மரியாவின் பிறப்பு அமல உற்பவத்துடன் தொடர்புடையது. அவர் பாவம் இல்லாதவராகப் பிறக்கிறார். இதுதான் கடவுளிடமிருந்து அவர் பெற்ற நன்மை. தூய ஆவியாரின் துணையால் கடவுளின் திருமகனை வயிற்றில் தாங்குகிறார். திருஅவையின் தாயாக பெந்தகோஸ்தே நிகழ்வில் நிற்கிறார். இறுதியில், விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையை மத்தேயு பதிவு செய்கிறார். இரண்டாவது பிரிவில், இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைத் தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனும் என அழைக்கிறார் மத்தேயு. 'மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு' என்று எழுதுவதன் வழியாக மரியாவுக்கும் தலைமுறை அட்டவணையில் இடம் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வில், 'அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்' என மரியா பெற்றிருக்கிற சிறப்பைப் பதிவு செய்கிறார். 

அன்னை கன்னி மரியாவின் பிறந்தநாள் நமக்குத் தருகிற செய்தி என்ன?

(அ) ஒவ்வொருவருடைய பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மரியாவுடைய பிறப்பின் நோக்கம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால், நம் வாழ்வின் நோக்கத்தை நாமே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. 

(ஆ) நம் வாழ்வின் இலக்கை கடவுளின் நோக்கத்தோடு இணைத்து வழிநடக்கும்போது தூய ஆவியார் நம் நன்மைக்காகச் செயலாற்றுகிறார். கடவுளின் திருவுளமே நம்மை ஆண்டு நடத்துகிறது. நாம் தனி நபர் அல்லர். நமக்கு முன்னால் பெரிய தலைமுறை இருக்கிறது. நாம் வாழும் நேரம் மற்றும் இடத்திலும் நம்மைப் போன்ற மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களுடைய வாழ்வில் நோக்கம் மற்றும் இலக்கு இருக்கிறது. அவர்களை நாம் உள்ளடக்கி நம் வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.

(இ) மேலானவற்றுக்கான அழைப்பைத் தெரிவுகொள்ள கீழானவற்றை விட்டுவிட வேண்டும். இல்லை என்றால் நாம் கீழானவற்றிலேயே சிக்கிக்கொள்வோம்.


No comments:

Post a Comment