Wednesday, September 13, 2023

பேறுபெற்றோர்

இன்றைய இறைமொழி

புதன், 13 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் செவ்வாய்

கொலோ 3:1-11. லூக் 6:20-26.

பேறுபெற்றோர்

புதிதாகத் தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுடன் சமவெளியில் நிற்கிற இயேசு, அவர்களை நோக்கியும் தம்மைச் சுற்றி நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கியும் உரையாற்றுகிறார். இந்த உரை சமவெளிப் பொழிவு என அழைக்கப்படுகிறது. நான்கு பேறுபெற்ற நிலைகள், நான்கு கேடுற்ற நிலைகள் என எடுத்துரைக்கிறார் இயேசு. ஞானநூல் இலக்கியக் கூற்றின் பின்புலத்தில் நோக்கினால், இரு நிலைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொள்ள அழைக்கிறார் இயேசு. 

1. உண்மையான பேறுபெற்றநிலை

'ஏழையரே நீங்கள் பேறுபெற்றவர்கள்' என்று தம் முன் நிற்கிற மக்கள் கூட்டத்தை அழைக்கிறார் இயேசு. பொருளாதார ஏழ்மை மட்டுமல்ல, ஆன்மிக ஏழ்மையும், இறைச்சார்புநிலையும் இங்கே குறிக்கப்படுகிறது. தன்னிறைவில் அல்ல, மாறாக, இறைச்சார்புநிலையே நமக்கு நிறைவான மகிழ்ச்சி தருகிறது. கடவுளே அனைத்து வளங்களின் ஊற்று என்பதை ஏற்றுக்கொள்ளவும் தாழ்ச்சி கொள்ளவும் அழைக்கிறது இந்நிலை.

2. பசி என்னும் கொடை

பசித்திருப்போர் அனைவரும் நிறைவுபெறுவர் என்கிறார் இயேசு. நீதிக்காகவும், நேர்மைக்காகவும் பசித்திருக்கிறவர் நிறைவு பெறுகிறார்.

3. துன்பம் தழுவுதல்

வாழ்வின் துன்பங்கள் மறுதலிக்க இயலாதவை. நாம் அவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்தல் அவசியம். மற்றவர்களின் துன்பம் கண்டு அழுபவர், அத்துன்பத்திற்கு ஆறுதல் தர நினைப்பதோடு, அத்துன்பம் களையவும் பணி செய்கிறார். 

4. துயரத்தில் துணிவு

நாம் மற்றவர்களால் துன்பத்துக்கு உள்ளாகும்போது, நிராகரிக்கப்படும்போது துணிவு கொள்தல் அவசியம்.

5. உலகப் போக்கிலான தேடல்கள் பற்றிய எச்சரிக்கை

'ஐயோ! கேடு!' என்னும் பகுதியில், செல்வத்தின்மேல் பற்றுறுதி, தன்இன்பத் தேடல், பொழுதுபோக்கு நாடுதல், புகழ்ச்சியை விரும்புதல் போன்றவை பற்றி எச்சரிக்கிறார் இயேசு. உலகமைய வெற்றி நம் ஆன்மிகப் பயணத்திற்குத் தடையாக இருக்கிறது.

நம் முன்பாக இருநிலை வாழ்க்கை முறைகளை வைக்கிற இயேசு, அவற்றில் ஒன்றைத் தெரிவுகொள்ள நம்மை அழைக்கிறார். 

இன்றைய முதல் வாசகத்தில், 'மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள்' என அறிவுறுத்துகிறார் பவுல். மேன்மையானவற்றை நாம் நாடும்போது தாழ்வானவை மறைந்துபோகின்றன.


No comments:

Post a Comment