Sunday, September 17, 2023

நம்பிக்கை நெருக்கம்

இன்றைய இறைமொழி 

திங்கள், 18 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் திங்கள்

1 திமொ 2:1-8. லூக் 7:1-10.

நம்பிக்கை நெருக்கம்

நூற்றுவர் தலைவரின் பணியாளர் ஒருவருக்கு இயேசு நலம் தரும் நிகழ்வை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவு செய்கிறார்கள். 'தூரத்திலிருந்தே நலம் தருதல்' என்னும் வல்ல செயலாக இது வகைப்படுத்தப்படுகிறது. நூற்றுவர் தலைவர் இயேசுவிடம் நேரடியாக வருவதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். ஆனால், லூக்கா நற்செய்தியாளர், சற்றே மாறுபட்டு, நூற்றுவர் தலைவர் முதலில் யூதரின் மூப்பர்களையும், தொடர்ந்து நண்பர்களையும் அனுப்பி வைப்பதாகப் பதிவு செய்கிறார். நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை கண்டு இயேசு வியப்படைகிறார்.

இயேசுவுக்கும் நூற்றுவர் தலைவருக்கும் இடையே தூரம் இருக்கிறது. ஆனால், அந்தத் தூரத்தை நம்பிக்கை குறைக்கிறது. 

(அ) நூற்றுவர் தலைவர் தம் பணியாளர்மேல் அக்கறைகொண்டவராக இருக்கிறார். ஆக, தமக்குக் கீழ் இருக்கும் பணியாளரை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்காமல், மாண்புக்கும் மதிப்புக்கும் உரிய நபராகக் காண்கிறார் நூற்றுவர் தலைவர். அவருக்கு நலம் வேண்டி இயேசுவிடம் ஆட்களை அனுப்புகிறார்.

(ஆ) யூத மூப்பர்களின் வருகை. யூத மூப்பர்கள் நூற்றுவர் தலைவரின் நற்குணங்களையும், நன்மைச் செயல்களையும் இயேசுவிடம் எடுத்துரைத்து அவருக்காகப் பணிந்துரை செய்கிறாhகள். நூற்றுவர் தலைவர் உரோமையராக இருந்தாலும் யூதர்களோடு நெருக்கம் கொண்டவராக இருக்கிறார். இயேசுவிடம் வருகிற யூத மூப்பர்களும் எந்தவித முற்சார்பு எண்ணமும் பயமும் இன்றி இயேசுவிடம் பரிந்து பேசுகிறார்கள்.

(இ) நண்பர்களின் வருகை. இயேசு தம் இல்லம் நெருங்குவதை அறிகிற நூற்றுவர் தலைவர் தம் நண்பர்களை அனுப்புகிறார். நண்பர்களின் சொற்களில் தம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தாம் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்பதையும், அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும் எவரும் அதிகாரம் பெறுகிறார் என்பதையும் அறிந்தவராக இருக்கிறார்.

(ஈ) நம்பிக்கை. 'ஒரு சொல் போதும்! வருகை தேவையில்லை' என்பது நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கையாக இருக்கிறது. இயேசுவின் சொற்களுக்கு உரிய அதிகாரத்தை நூற்றுவர் தலைவர் அறிந்தவராக இருக்கிறார். முதலில் தம் செயல்களை எடுத்துச் சொல்லி நலம் பெற விரும்பியவர், பின் தம் நம்பிக்கையால் நலம் பெற்றுக்கொள்கிறார் தம் பணியாளருக்கு!

(உ) தொடர்புகளும் உதவிகளும். இந்நிகழ்வில் வரும் இயேசு, யூத மூப்பர்கள், நண்பர்கள் ஆகியோர் நூற்றவர் தலைவருக்கு உதவி செய்கிறார்கள். நாம் மேற்கொள்ளும் மனிதத் தொடர்புகள் நமக்குத் தகுந்த வேளையில் நமக்குத் துணைநிற்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள இணைப்பாளர் கிறிஸ்துவே என மொழிகிற பவுல், மற்றவர்களுக்காகப் பரிந்துபேச வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.


No comments:

Post a Comment