Tuesday, July 4, 2023

எம்மை விட்டு அகலும்!

இன்றைய இறைமொழி

புதன், 5 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

தொநூ 21:5, 8-20. மத் 8:28-34.

எம்மை விட்டு அகலும்!

1. 'உனக்கொரு மகன் பிறப்பான்' என்னும் கடவுளின் செய்தி கேட்டு சாரா சிரித்தார். அவருக்கு ஈசாக்கு பிறந்தார். 'ஈசாக்கு' என்றால் 'அவன் சிரித்தான்' என்பது பொருள். ஈசாக்கு பிறப்பதற்கு முன்னரே ஆகார் வழியாக இஸ்மயேலைப் பெற்றெடுக்கிறார் ஆபிரகாம். 'இஸ்மயேலும் சிரிக்கிறான்' என்பதைக் காண்கிற சாரா கோபம் கொள்கிறாள். அடிமையின் மகன் தன் மகனுக்குப் பங்காளியா என நினைக்கிற அவள், அவனையும் அவனுடைய தாயையும் வீட்டை விட்டு விரட்டுமாறு வேண்டுகிறாள். பெண் அரசியல் பொல்லாதது! ஆபிரகாம் இதனால் வேதனை அடைந்தாலும் இருவரையும் அனுப்புகிறார். பாலைநிலத்தில் இஸ்மயேல் அழுகிறான். தாய் ஆகாரும் அழுகிறாள். இருவருடைய கண்ணீரையும் கடவுள் காண்கிறார். தண்ணீர் கிணற்றைக் காட்டுகிறார். அழுகை மீண்டும் சிரிப்பாக மாறுகிறது. கண்ணீர் மல்க நாம் கடவுள்முன் நிற்கும்போதெல்லாம் அவர் தண்ணீர் என்னும் நிறைவைக் காட்டுகிறார். சிறிய குடிசை என வாழ்ந்த ஆகாரும் இஸ்மயேலும் ஒட்டுமொத்தப் பாலைநிலத்தையே உரிமையாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் கடவுளின் செயல்.

2. பேய் பிடித்த இருவர் இயேசுவை எதிர்கொள்கிறார்கள். 'இறைமகனே' என அவரை அழைக்கிறார்கள். பன்றிகளின் கூட்டத்திற்குள் பேய்களை அனுப்பிவிடுகிறார் இயேசு. பன்றிக்கூட்டம் கடலில் வீழ்ந்து மடிகிறது. நிகழ்வைக் கண்ட மக்கள் தங்கள் ஊரை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டுகிறார்கள். அந்த ஊராருக்கு இயேசுவோ, அவரால் நலம்பெற்றவர்களோ பெரிதாகத் தெரியவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ரொம்ப ப்ராக்டிகலான மக்கள்! 

3. 'எம்மை விட்டு அகலும்!' என முதல் வாசகத்தில், சாரா ஆகாரிடம் சொல்கிறார். 'எவ்வழி செல்வது?' என அறியாமல் சென்ற ஆகார் மற்றும் இஸ்மயேல் ஆண்டவரைக் கண்டுகொள்கிறார்கள். 'எம்மை விட்டு அகலும்!' என நற்செய்தி வாசகத்தில், ஊரார் இயேசுவிடம் சொல்கிறார்கள். அவர்களால் இயேசுவில் இறைமகனைக் கண்டுகொள்ளவில்லை. ஆகாரின் நம்பிக்கை அவருடைய கண்களைத் திறந்து கிணற்றைக் கண்டது. பன்றிகள் விழுந்த கடலைக் கண்டவுடன் ஊராரின் நம்பிக்கைக் கண்கள் மூடிக்கொண்டன. ஆகாரும், இஸ்மயேலும், இயேசுவும் தங்கள் வழியே நடக்கிறார்கள்! நம் நம்பிக்கைக் கண்கள் திறந்தால் பாலைநிலத்திலும் தண்ணீர் காண முடியும். கண்கள் மூடினால் இறைமகனும் சாதாரண மனிதராகவே நமக்குத் தெரிவார்.


No comments:

Post a Comment