Thursday, July 13, 2023

நீ அஞ்சவேண்டாம்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 14 ஜூலை 2023

பொதுக்காலம் 14-ஆம் வாரம்

தொநூ 46:1-7, 28-30. மத் 10:16-23.

நீ அஞ்சவேண்டாம்!

1. யோசேப்பு யார் என்பதை அவருடைய சகோதரர்கள் மட்டுமல்லாமல், பாரவோனும் அவருடைய அரசவையினரும்கூட அறிந்துகொள்கிறார்கள். யோசேப்பின் சகோதரர்களும் தந்தையும் தங்குமாறு கோசேன் என்னும் பகுதியை அவர்களுக்கென ஒதுக்கித்தருகிறார் பாரவோன். கோசேனுக்கு வருகிற யாக்கோபுக்குக் கடவுள் காட்சியளிக்கிறார். 'நீ அஞ்சாதே!' என ஆறுதல் தருகிறார். மேலும், 'யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்' என்னும் சொற்கள் வழியாக அவருடைய இறப்பையும் முன்னறிவிக்கிறார். தன் தந்தையை எதிர்கொள்ளச் செல்கிறார் யோசேப்பு. தன் தந்தையின் தோளில் சாய்ந்து வெகுநேரம் அழுகிறார். 'உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்' என அகமகிழ்கிறார் யாக்கோபு. யோசேப்பு இளவலாக இருந்தபோது கண்ட கனவுகள் இப்போது நிறைவேறிவிட்டதை நினைத்து வியந்திருப்பார்.

2. தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முன்னுரைக்கிறார். ஒன்று, அவர்கள் ஓநாய்களிடையே ஆடுகள் போலச் செல்கிறார்கள். அதாவது, வலுவானவர்கள்முன் வலுவற்றவர்களாகச் செல்கிறார்கள். இரண்டு, அவர்களுடைய பணிகள் எதிர்க்கப்படுவதோடல்லாமல், அவர்களும் இன்னலுக்கு ஆளாவார்கள். மூன்று, அவர்கள் தங்களுடைய இருப்பிடத்திலிருந்து விரட்டப்படுவார்கள். ஆனாலும், துன்பத்தின் நடுவிலும் இறைவனின் அருள்கரம் அவர்களை வழிநடத்தும் என்பதால் அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

3. யாக்கோபுவின் அச்சம் கடவுளின் சொற்களாலும், யோசேப்பின் உடனிருப்பாலும் களையப்படுகிறது. கடவுளின் உடனிருப்பு சீடர்களின் அச்சம் களைகிறது. யாக்கோபின் வேர்கள் அவருடைய மண்ணிலிருந்து அகற்றப்படுகின்றன. பணிக்குச் செல்லும் சீடர்களின் வேர்கள் அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து அகற்றப்படுகின்றன. நம் வேர்கள் அகற்றப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது. காய்ந்துபோய்விடுவோமோ என்ற அச்சம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. கடவுளின் உடனிருப்பு நம் அச்சம் போக்குகிறது. அவருடைய தோள்களில் சாய்ந்துகொள்வது நலம்.


No comments:

Post a Comment