Thursday, July 20, 2023

நான் கடந்து செல்வேன்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 21 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 11:10-12:14. மத் 12:1-8.

நான் கடந்து செல்வேன்!

1. இன்றைய முதல் வாசகம் மூன்று நிகழ்வுகளை ஒன்றாக இணைக்கிறது: ஒன்று, எகிப்து நாட்டில் உள்ள தலைப்பேறுகளை அழிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். இரண்டு, இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து செல்லத் தயராகிறார்கள். மூன்று, பாஸ்கா விழாவும் புளியாத அப்ப விழாவும் தோற்றுவிக்கப்படுகின்றன. இம்மூன்று விடயங்களும் நடக்கக் காரணம் ஆண்டவராகிய கடவுள் (தூதர்) இரத்தம் பூசியிருந்த இஸ்ரயேல் மக்கள் வீடுகளைக் கடந்துசெல்கிறார். கடந்து செல்தல் என்பதைக் காப்பாற்றுதல் என்று இங்கே புரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் நகர்வலம் காவலர் நம் வீட்டைக் கடந்து செல்கிறார் என்றால், நம் வீட்டின்மேல் கவனமாக இருக்கிறார் அல்லது நம் வீட்டின்மேல் பொறுப்பாய் இருக்கிறார் என்று புரிந்துகொள்கிறோம். கடந்து செல்தல் என்பது மறத்தல் அல்ல, மாறாக, பொறுப்பேற்றல். 

2. இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாளில் வயல்வெளியைக் கடந்து செல்கிறார்கள். கடந்து செல்கிற சீடர்களின் கைகள் கதிர்களைத் தழுவிக்கொள்கிறது. மனிதர்கள் பசியாறினார்கள் என மகிழ்ந்திருப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் ஓய்வுநாளை மீறினார்கள் என்று குறை சொல்கிறார்கள் பரிசேயர்கள். பசியா அல்லது ஓய்வுநாளா? இவற்றில் எது முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, மானிட மகனாகிய தமக்கு ஓய்வுநாளும் கட்டுப்பட்டதே என்கிறார்.

3. எகிப்தில் பார்வோன் தனக்குக் கீழ் அனைத்தும் இருப்பதாக எண்ணி, இறுமாந்து, இஸ்ரயேல் மக்களை அனுப்ப மறுக்கிறார். ஆனால், ஆண்டவராகிய கடவுள் தம்மை மேன்மையானவர் என அவருக்குக் காட்டுகிறார். உயிர் என்பது தமக்குக் கட்டுப்பட்டது என்றும், தம்மால் உயிரைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று உணர்த்துகிறார். நம்மைக் கடந்துசெல்லும் ஆண்டவராகிய கடவுள் நம்மேல் கவனமாக இருக்கிறார் என்னும் செய்தி நமக்கு ஆறுதல் தருகிறது. நம்மைக் கடந்துசெல்லும் அவர் நம் முதன்மைகளைச் சரி செய்யுமாறு நம்மை அழைக்கிறார்.



No comments:

Post a Comment