Saturday, April 1, 2017

கல்லறைகளைத் திறந்து

ஆப்பிரிக்காவின் வடக்கு நாடுகளிலிருந்து படகுகளிலும், கப்பல்களிலும் ஏறி இத்தாலி நாடு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் புகும் கனவோடு புறப்பட்டவர்கள் பலருக்கு கடலே கல்லறை ஆகிவிட்டது என்பது கடந்த 4 மாதங்களுக்கு முன் நாம் அறிந்த செய்தி. இந்த செய்தியை வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவர்களின் இந்தப் பயணத்தை நாடுகடத்துதலுக்கு ஒப்பிட்டு, அப்படி நாடுகடத்தப்பட்டவர்கள் இறந்தபோது எசேக்கியேல் இறைவாக்கினர் வாயிலாக கடவுள் வழங்கிய செய்தியைச் சுட்டிக்காட்டி நம்பிக்கை ஊட்டினார். அந்த இறைவாக்குப் பகுதியைத்தான் நாம் இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 37:12-14) வாசிக்கின்றோம்.

'என் மக்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன்.'

இந்த இறைவாக்குப் பகுதி இஸ்ரயேல் மக்கள் இறப்பைப் பற்றி கொண்டிருந்த புரிதலையும் தெரிவிக்கிறது: அதாவது, இறப்பின் போது, உடல் இந்த உலகில் தங்கிவிடுகிறது. ஆவி அல்லது உயிர் கடவுளிடம் திரும்பிவிடுகிறது (காண். சபை உரையாளர் 12:5). கடவுள் ஆவியை மீண்டும் அந்த உடலுக்குத் தரும்போது உடல் மீண்டும் உயிர்பெறுகிறது.

கல்லறைகளை பொதுவாக யாரும் திறப்பதில்லை. ஏனெனில் கல்லறைக்குள் வைக்கப்பட்டவர் திரும்ப வருவார் என்று நாம் அவரை எதிர்பார்ப்பதில்லை. மேல், இதைப் பற்றி நாம் வருத்தப்படுவதும் இல்லை. ஏனெனில் இறப்பு என்பதும், இறந்தவர் உயிர்ப்பதில்லை என்பதும் எதார்த்தம் என நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம்.

இந்த எதார்த்த ஏற்றுக்கொள்ளுதலை கேள்விக்கு உட்படுத்துகின்றன இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள். கடவுளின் பிரசன்னத்தின் முன் கல்லறைகள் திறப்பதும் சாத்தியமே.

ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) இயேசு இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதை பதிவு செய்திருந்தாலும், லாசர் உயிர் பெறுதலை அவர்கள் பதிவு செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாக, யோவான் லாசர் உயிர்ப்பை மட்டும் பதிவு செய்கிறார். மேலும், யோவான் மற்ற அற்புத நிகழ்வுகளைப் பதியும்போதெல்லாம், 'பிரச்சினை-தீர்வு-போதனை' என பதிவு செய்கிறார். எ.கா. பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறுதல். ஆனால், இங்கே, 'போதனை-பிரச்சினை-தீர்வு' என தலைகீழாக இருக்கின்றது. இறந்தவர் உயிர்பெற்றவுடன் நிகழ்வை முடித்துவிடுகிறார் யோவான். 

உயிர்ப்பு, நம்பிக்கை, இறப்பு, யூதர்கள், இயேசுவின் கருணை என நிறைய இறையியல் கருத்துக்கள் ஒன்றோடொன்று பிண்ணிக்கிடக்கின்றன. 

கடவுளின் வலி கல்லறையைத் திறக்கிறது - இதை மட்டும் மையமாக வைத்து சிந்திப்போம்.

நோய், முதுமை, இறப்பு என்ற இன்றியமையாத கல்லறைகள் நம்மை அனுதினம் சூழ்ந்தாலும், தன்னம்பிக்கை இன்மை, சோம்பல், தாழ்வு மனப்பான்மை, ஒப்பீடு, பொறாமை, ஏற்றத்தாழ்வு, பொருளாதார சிக்கல்கள், அரசின் கண்டுகொள்ளாத்தன்மை, வன்முறை, எங்கும் மேலோங்கி நிற்கும் பிரச்சினைகள் என அன்றாடம் நாம் கல்லறைக்குள்ளேயே இருக்கின்றோம். இந்தக் கல்லறைகளிலிருந்து நாம் விடுவிக்கப்படும் நாளை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம்.

லாசரின் இறப்பு நிகழ்வில் லாசர் மட்டுமல்ல, இயேசுவைத் தவிர எல்லாக் கதைமாந்தர்களுமே கல்லறைக்குள்தான் இருக்கின்றனர்:

1. சீடர்கள் இயேசுவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளும்போதெல்லாம் அதில் ஓர் அரைகுறைத்தனமும், அவசரமும் தெரிகிறது. அரைகுறைத்தனம் அவர்களின் கல்லறை.

2. யூதர்கள் இயேசுவை நம்பவே இல்லை. நம்பிக்கையின்மை அவர்களின் கல்லறை.

3. மார்த்தா இயேசுவை பாதி நம்புகிறார். 'ஆண்டவரே, நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்கிறார். ஆனால், கல்லறைக்கு அருகில் இயேசு சென்றபோது, 'ஐயோ, நாற்றம் அடிக்குமே' என அவரைத் தடுக்கின்றார். பாதி நம்பிக்கை அவரின் கல்லறை.

4. மரியா இயேசுவை நம்பினாலும், அவர் இன்னும் அழுது முடித்தபாடில்லை. தன் சகோதரனின் இழப்பு தந்த வெற்றிடத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வெற்றிடத்தைக் கண்ணீர் வடித்து மூடிவிட நினைக்கின்றார். அழுகை அவரின் கல்லறை.

5. லாசர் இறந்துவிட்டார். இறப்பு அவரின் கல்லறை.

6. இயேசு யார்? இந்த அறியாமைதான் வாசகர் ஒவ்வொருவரின் கல்லறை.

இந்தக் கல்லறைகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்களா?
முதலில், இந்த நிகழ்வின் ஒரு சில சொல்லாடல்களைப் புரிந்துகொள்வோம்:

1. பெத்தானியா

நாசரேத்துக்குப் பின் இயேசு தனது இரண்டாம் இல்லமாக நினைத்தது பெத்தானியாவைத்தான். நான் புனித நாடுகளுக்குச் சென்ற போது, உண்மையாகவே இயேசு இங்கு இருந்த இடம் என நான் என் உள்ளுணர்வில் உணர்ந்தது பெத்தானியா மட்டும்தான். 10க்கு 10 பழமையான வீடு. அந்த இல்லத்திற்குள் சென்றவுடன், 'நானும் இங்கு இருந்திருக்கிறேன்' என்ற உணர்வை அந்த வீடு தருகிறது. இயேசுவும், லாசர், மார்த்தா, மரியாவும் பேசியதை, சிரித்ததை இந்தச் சுவர்கள் கண்டிப்பாக உள்வாங்கி இருக்கும். இந்தச் சுவர்களின்மேல் காதுகளை வைத்துக் கேட்டால் நாமும் அதை உணரலாம். 'நீங்க எப்படி பிறந்தீங்க? இடையர்கள், ஞானியர் எத்தனை பேர்? எகிப்துக்கு ஏன் ஓடிப்போனீங்க? அங்க இருந்த எப்ப வந்தீங்க? கோவிலில் ஏன் காணாமல் போனீர்கள்? அது என்ன? இது என்ன?' என இரண்டு சகோதரிகளும் இயேசுவை கேள்விகள் கேட்டு துளைத்திருப்பார்கள். லாசர் அப்போது மொளனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஒருவேளை இவர்கள் பிறந்த சில ஆண்டுகளில் இறந்திருக்க, இவர்கள் மூவரும் துணைக்குத் துணையாக வளர்ந்திருக்கலாம். 

இப்படி இயேசு அன்பு கொண்டிருந்த ஓர் இடத்தில் இழப்பு வந்துவிடுகிறது. லாசர் இறந்துவிடுகிறார். இனி இயேசு இந்த இல்லத்திற்குள் வந்தால் அவரை வரவேற்கும் மூன்று உயிர்களில், ஒரு உயிர் மறைந்துவிடுகிறது.

'உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்' என்று இயேசுவுக்கு தூதர்களை அனுப்புகின்றனர் மார்த்தாவும் மரியாவும். தூது அனுப்பும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றால், ஓரளவு பணக்காரர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது ஏழைகளாக இருந்து எப்பாடுபட்டாவது இயேசுவுக்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும். செய்தி கேட்டவுடன் இயேசு புறப்படவில்லை. 'இந்த நோய் இறப்பில் போய் முடியாது' என்று சொல்லிவிட்டு லாசர் இறக்கும்வரை காத்திருக்கின்றார். கானாவில் இரசம் தீர்ந்தபோதும் இயேசு இப்படித்தான் தள்ளிப்போடுகின்றார். 

2. தூக்கம்

'லாசர் இறந்துவிட்டதை,' 'லாசர் தூங்குகிறார்' எனச் சொல்கிறார் இயேசு (காண். மத் 27:52, 1 கொரி 7:39, 11:30, 15:6, 1 தெச 4:13-15). 'இறப்பை' தூக்கத்திற்கு உருவகிப்பது மற்ற இலக்கியங்களிலும் காண்கிறோம். 'உறங்கி விழிப்பது போல சாக்காடு' என்கிறார் வள்ளுவர். 'தூக்கம் என்பது குறுகிய சாவு, சாவு என்பது நீண்ட தூக்கம்' என்கிறார் ஷேக்ஸ்பியர். இயேசு சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்கின்றனர் சீடர்கள். ஆகையால்தான், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்' என்று பதில் சொல்கின்றனர்.

3. என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பு

பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறும் நிகழ்விலும், 'இவர் இப்படி பிறந்தது கடவுளின் மாட்சி வெளிப்படவே' (யோவா 9:3) என்கிறார் இயேசு. தான் கையாளவேண்டிய இழப்பு என்னும் எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் இயேசு. இலாசர் உயிர்பெறும் நிகழ்வின் இறுதியில், 'மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்' எனப் பதிவு செய்கிறார் யோவான். ஆக, கடவுளின் மாட்சி வெளிப்படுகிறது. அந்த வெளிப்படுத்துதலுக்கு மனிதர்கள் தரும் பதில்தான் நம்பிக்கை.

4. கல்லறையில் வைத்து நான்கு நாள்

இலாசர் இறந்து கல்லறையில் வைத்து நான்கு நாள்கள் ஆயிற்று என்பது இரண்டு இடங்களில் (11:17, 39) பதிவு செய்யப்படுகிறது. யூதர்களின் நம்பிக்கை என்னவென்றால், ஒருவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மூன்று நாள்கள் கல்லறையைச் சுற்றி வரும். நான்காம் நாளில் இறந்தவரின் முகம் மாற ஆரம்பிக்கும்போது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் வேறு எங்காவது சென்றுவிடும். ஆக, 'நான்காம் நாள்' என்பது இலாசரின் ஆன்மா அங்கு இல்லை என்பதை உருவகப்படுத்துகிறது. மேலும், ஒன்றுமில்லாமையில் தான் இயேசுவின் அற்புதம் நிகழ்கிறது என்பதையும் இங்கே யோவான் உள்ளிடுகிறார். மார்த்தா இயேசுவிடம், 'நான்கு நாள் ஆயிற்றே. நாற்றம் அடிக்குமே' என்கிறார். இயேசுவின் சமகாலத்தில் எகிப்தியர்கள் மட்டுமே இறந்த உடலை அதிக நாள்கள் பத்திரப்படுத்தும் வகை அறிந்திருந்தனர். யூதர்கள் வெறும் நறுமணத்தைலத்தை மட்டுமே பயன்படுத்தக் கற்றிருந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடலில் பயன்படுத்தும் வாசனை திரவியங்களின் நறுமணம் மூன்று நாள்கள் மட்டுமே தாங்கக்கூடியவை. நான்காம் நாளிலிருந்து உடல் வெளிப்படுத்தும் கெட்ட வாசத்திற்கு அவைகளால் ஈடுகொடுக்க முடியாது. 
5. இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்

தானியேல் 12:2 காலத்திலிருந்தே 'இறந்தவர் உயிர்ப்பு,' 'இறுதிநாள்' போன்ற புரிதல்கள் யூதர்கள் நடுவில் இருந்தன (காண். திப 23:6-8, மாற் 12:18-27). மார்த்தாவும் இதே புரிதலைக் கொண்டிருக்கிறார். அந்த நாளில் எல்லாரும் உயிர்ப்பதுபோல இலாசரும் உயிர்ப்பார் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார். 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்' என்று மார்த்தா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும், 'இறந்தவரை இயேசு என்ன செய்ய முடியும்?' என்ற சந்தேகமும் கொண்டிருக்கின்றார்.

6. மரியா அவர் காலில் விழுந்து

மார்த்தா இயேசுவைத் தேடி ஓடியதுபோல மரியா ஓடவில்லை. பாவம் குழந்தை! இன்னும் அழுது முடிக்கவில்லை. மார்த்தா இதற்கிடையில், 'ஆம் ஆண்டவரே, நீரே மெசியா, நீரே இறைமகன், நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். ஆனால், மரியாவோ எதுவும் பேசாமல் அதே நம்பிக்கை அறிக்கையை ஒரே ஒரு செயலால் செய்துவிடுகின்றார்: 'இயேசுவின் காலில் அவர் விழுகின்றார்.' 

7. வந்து பாரும்

'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்ற கேள்விக்கு, 'வந்து பாரும்' என்கின்றனர் மார்த்தாவும், மரியாவும். தன் முதற்சீடர்களிடம், 'வந்து பாரும்' என்று இயேசு சொன்னது இங்கே இயேசுவுக்கே சொல்லப்படுகிறது. 'வந்து பாரும்' என்பதை நாம் பல அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளலாம்: 'வந்து பாரும் உன் நண்பனை,' 'வந்து பாரும் எம் சகோதரனை,' 'வந்து பாரும் கல்லறையை,' 'வந்து பாரும் மனுக்குலத்தின் காயத்தை,' 'வந்து பாரும் எங்கள் கண்ணீரை.' வானத்திலிருந்து இறங்கி நம்மை 'வந்து பார்த்தவருக்கு,' கல்லறைக்கு 'வந்து பார்ப்பது' ஒன்றும் பெரிதல்லவே. ஆகையால், வேகமாக உடன் செல்கின்றார்.

8. இயேசு கண்ணீர்விட்டு அழுதார்

கிரேக்க பதம் உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட்டால், 'இயேசு கோபப்பட்டார் அல்லது நொந்துகொண்டார்' என்றுதான் இருக்க வேண்டும். 'கண்ணீர்விட்டு அழுதார்' என்பது அவரின் உணர்வை ரொமான்டிசைஸ் பண்ணுவதுபோல இருக்கிறது. இறப்பு வரும்போது கண்ணீர் வருவது இயல்பு. ஆனால் சில நேரங்களில் நமக்கு கோபம் வரும். வழக்கமாக நமக்கு கடவுளின்மேல் தான் கோபம் வரும். இங்கே இயேசுவுக்கு இறப்பின் மேலும், பாவத்தின் மேலும், தன்னை நம்பாத மனிதர்கள்மேலும் கோபம் வருகிறது. 

9. அது ஒரு குகை

பெத்தானியாவிற்கு திருப்பயணம் செல்பவர்களை லாசர் கல்லறைக்கும் அழைத்துச் செல்வார்கள். பெரிய கிணறு போல இருக்கும் இந்த இடம். இதனுள்ளே இறங்கிச் செல்லலாம். இவ்வளவு ஆழத்தில் வைத்துவிட்டு மேலே ஒரு கல்லைப் புரட்டி வைத்திருப்பார்கள். இவ்வளவு ஆழத்திலிருந்து லாசர் எப்படி மேலே வந்தார் என்பதும், அவருடைய கால்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தாலும் அவர் எப்படி மேலே வந்தார் என்பதும் இயற்பியல் விதிக்கு மாறாக இருக்கின்றன. ஆனால், இதுவே அற்புதம். 'கல்லை அகற்றியது' மனிதர்கள்தாம் என்றாலும், லாசரை வெளியே கொண்டுவந்தவர் கடவுளே.

கல்லறைகளைத் திறந்து என்பதை இன்று நாம் எப்படி நம் வாழ்வோடு பொருத்திப்பார்ப்பது?

1. இறப்பு என்னும் எதார்த்தம்

அழுகை, கண்ணீர், சோகம், இறப்பு இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்பது மனித இயல்புக்கே முரணானது. மனித இயல்பு தன்னிலேயே குறைகளைக் கொண்டது. இங்கே அழுகை, அழுகல், கண்ணீர், கசப்பு, கருணை எல்லாம் சேர்ந்து இருக்கும். இவற்றில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்துப் பார்ப்பது தவறு. உயிர்ப்பு மட்டும்தான் மேன்மை என நினைக்கக்கூடாது. ஏனெனில் இலாசரின் உயிர்ப்பு அவரின் கொலைக்கு வித்திடுகிறது. ஏனெனில், 'தலைமைக் குருக்கள் இலாசரையும் (இயேசுவோடு சேர்த்துக்) கொன்றுவிட திட்டமிடுகிறார்கள்' (12:10). ஆக, இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத்தரவில்லை. யாயிரின் மகள், லாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. மேலும், இன்று இறப்பே இல்லாத மனிதர்களை உருவாக்க அறிவியல் முயற்சி செய்தாலும், விபத்து, வன்முறை போன்றவற்றால் மனிதர்களின் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்பதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. ஆக, நாம் நம் அன்றாட இறப்பை - ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டே இருக்கிறோம். நம் உடலின் செல்கள் இறந்து கொண்டே இருக்கின்றன - சாதாரண எதார்த்தமாக எடுத்துக்கொள்வதே சால்பு. 'எனக்கு கல்லறையே கிடையாது' என மறுப்பதை விட, அல்லது மறுதலிப்பதை விட, 'என் வாழ்வின் கல்லறை இதுதான்' என நம் அன்றாட இறப்புக்களையும், இறுதி இறப்பையும் ஏற்றுக்கொள்வதே ஞானம்.

2. உடனிருப்பு

இயேசு பெத்தானியாவிலிருந்து தூரத்தில் இருக்கிறார். பெத்தானியாவுக்கு வருகிறார். பின் ஊரின் நடுவில் நிற்கின்றார். பின் கல்லறைக்கு அருகில் வருகின்றார். ஆக, இவ்வாறாக இயேசுவின் நெருக்கம் கூடிக்கொண்டே வருகின்றது. ஆக, நம் வாழ்வின் கல்லறைக்கு வெகுதூரத்தில் அவர் நிற்பது போல தோன்றலாம். அல்லது சில நேரங்களில் நம் அருகில் வருவதற்கு அவரே காலம் தாழ்த்தலாம். ஆனால், கண்டிப்பாக அவர் வருவார். நம் கல்லறைகள் நாற்றம் அடித்தாலும் அவர் துணிந்து அங்கே நிற்பார்.

3. கல்லறைகளைத் திறந்து

இயேசு நிகழ்த்தும் புதுமை மூன்று நிலைகளில் நடக்கின்றது:

அ. யாராவது ஒருவர் கல்லை அப்புறப்படுத்த வேண்டும்
ஆ. இறந்தவர் உயிர்பெற்று வெளியே வர வேண்டும்
இ. யாராவது ஒருவர் கட்டுக்களை அவிழ்க்க வேண்டும்

ஆக, கடவுள் கல்லறைகளைத் திறந்தாலும் நமக்கு மனிதர்களின் துணை தேவைப்படுகிறது. இன்று கடவுள் மற்றவர்களை கல்லறையிலிருந்து விடுவிக்கும்போது நாமும் அங்கே உடனிருந்து அந்த அற்புதம் நிகழ உதவி செய்ய வேண்டும்.

இன்று என் வாழ்வில் நான் திறந்து வெளியேற வேண்டும் என நினைக்கும் கல்லறை எது?

வாழ்வு என்ற வெளிச்சம் என்னுள் புகாதவாறு என் குறுக்கே நிற்கும் கல் எது?

கல்லறைக்கு உள்ளே நாம் உச்சகட்ட வலுவின்மையில் இருப்போம். அங்கே வெளிச்சம் இருக்காது. காற்று இருக்காது. மண் நம் உடலை அரிக்க ஆரம்பிக்கும். புழுக்கள் நெளியும். நாமே கையை நீட்டி அவற்றை விரட்ட முடியாது. ஆனாலும், அந்த இடத்தில் உள்ள ஒரே நம்பிக்கை கல்லுக்கு வெளியே நம் கடவுள் காத்திருக்கிறார் என்பதும், அவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதும்தான்.

இறுதியாக,

இன்றைய இரண்டாம் வாசகத்துடன் (உரோ 8:8-11) நிறைவு செய்வோம். 'இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.' இறந்தவர்கள் உயிர்பெற்று வருவர் என்பதும், நம் உடல்களும் உயிர்பெறும் என்பதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை.

நம்பிக்கை என்பது நம் உடல் உயிர்க்கும் என்பதில் அல்ல. மாறாக, கடவுள் அத்தகைய வல்லமை கொண்டிருக்கிறார் என்பதில்தான் இருக்க வேண்டும். 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்னும் இயேசுவைக் குறித்த நம் நம்பிக்கை இறப்பின்போது மட்டுமல்ல. மாறாக, நம் வாழ்வின் எல்லா தளங்களிலும், சூழலிலும் இருக்க வேண்டும்.

நாம் பாவத்தால் இறக்கின்ற பொழுதும்,

நம் வலுவின்மையில் தவறும்போதும்,

நம் கைகளைமீறி நிகழ்வுகள் நடக்கும்போதும்,

நம் உள்ளத்தில் இது ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்: 

'அவர் என் உயிர்த்தெழுதல். அவர் என் வாழ்வு.'

என் கல்லறைகளைத் திறந்து எனக்கு உயிர்கொடுக்க அவர் வல்லவர்.


2 comments:

  1. இன்றையப்பதிவின் அத்தனை வரிகளும் மனத்தில் சட்டம் போட்டுத்தொங்கவிடப்பட வேண்டியவை.லாசரின் இறப்பு பற்றிய நிகழ்வு...எத்தனை முறை கேட்டாலும்,வாசித்தாலும் நம்மை நெகிழவைக்கும் ஒன்று.சுற்றிநின்ற அத்தனை பேரின் சந்தேகங்களும் தவிடுபொடியாகும்படிக் கல்லறையிலிருந்த தன் உயிர் நண்பன் லாசரை வெளிக்கொணருகிறார் இயேசு கண்ணீருடன்.இந்த நிகழ்வு ஏன் நடந்திருக்க வேண்டும் எனும் கேள்விக்கு "இறைவனின் மாட்சி வெளிப்பட" என்பது இயேசுவின் பதிலாக வர,இறந்த தன் சகோதரனை இரத்தமும்,சதையுமாகப் பார்த்த மார்த்தா " நீரே இறைமகன்" என அறிக்கையிடுவதும்,மரியா அவர் கால்களில் விழுந்து வணங்குவதும் நாமும் அவர்களோடு இணைந்திருக்கிறோம் எனும் உணர்வைத்தருகிறது.
    இறுதியாக சொல்லப்படும் அந்த வரிகள்..." பாவத்தால் நாம் இறக்கின்ற பொழுதும்,நம் வலுவின்மையில் நாம் தவறுகின்ற பொழுதும்,நம் கைகளை மீறி நிகழ்வுகள் நடக்கும் பொழுதும் நம் உள்ளத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருக்க வேண்டியவை.." அவர் என் உயிர்த்தெழுதல்; அவர் என் வாழ்வு; என் கல்லறைகளைத் திறந்து எனக்கு உயிர் கொடுக்க வல்லவர்"... என் கண்களைப்பனிக்க வைக்கும் வார்த்தைகள்.இன்றையப்பதிவின் அத்தனை விஷயங்களையும் இல்லாவிட்டாலும்,ஒருசில வரிகளையாவது மனத்திலிருத்தி நாம் வாழ ஆரம்பித்தால் கண்டிப்பாக 'பெரிய வெள்ளிக்கு' முதலே என் வாழ்வில் 'உயிர்த்த ஞாயிறு' வரும் என நம்புகிறேன். அனைவருக்கும் 'ஞாயிறு' வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Wonderful reflection fr...

    ReplyDelete