Sunday, April 9, 2017

ஆறு பேர்

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு' - இப்படித்தான் தொடங்குகிறது இன்றைய நாளின் நற்செய்தி வாசகப் பகுதி (யோவான் 12:1-11). ஏறக்குறைய நாற்பது நாட்களாக, செபம், நோன்பு, பிறரன்புச் செயல்கள் என நம் உடலை ஒறுத்து, பக்குவப்படுத்தி, நம் மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு என்னும் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாரித்தோம். நாம் மேற்கொண்ட இந்தத் தயாரிப்பு இன்று நாம் தொடங்கி கொண்டாடும் ஏழாம் நாள் கொண்டாடும் திருநாளிற்காகத்தான்.

இன்னும் அந்த நாளுக்கு ஆறு நாட்கள் இருக்க, இன்றைய நற்செய்தி வாசகம் ஆறு பேரை நம் முன் வைக்கிறது. இந்த ஆறு பேர் யார்? இந்த ஆறு பேர் நமக்கு வைக்கும் சவால்கள் எவை? என்று பார்ப்போம்.

1. இலாசர். இவர் மார்த்தா மற்றும் மரியாளின் சகோதரர். இயேசுவின் நண்பர்களாக இருந்த இந்தக் குடும்பம் வசித்தது பெத்தானியாவில். நோயுற்றிருந்து இறந்துபோன இலாசரை இயேசு உயிரோடு மீண்டும் எழுப்புகின்றார். இந்த உயிர்ப்பு நிகழ்வால் இயேசுவின்மேல் பலர் நம்பிக்கை கொள்கின்றனர். இயேசுவின் எதிரிகளுக்கு இவரின் உயிர்ப்பு கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்துகிறது. இயேசுவோடு இணைந்து இவரையும் கொன்றுவிட நினைக்கின்றனர். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இலாசர். நம் வாழ்க்கையை நாம் ஒரேமுறைதான் வாழ்கிறோம். இந்த ஒற்றை வாழ்வை நாம் வாழும் விதம் எப்படி?

2. மார்த்தா. மூத்த சகோதரி. விருந்தோம்பலில் இவரை யாராலும் மிஞ்ச முடியாது. முன்னொரு நாள் இயேசு இவர்கள் வீட்டிற்கு வந்தபோது, இயேசுவைக்குப் பணிவிடை செய்வதில் இவர் மும்முரமாய் இருக்கிறார். 'மார்த்தா, நீ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்!' எனக் கடிந்து கொள்கின்றார். நம் வாழ்வில் நாம் எதை முதன்மைப்படுத்த வேண்டும்? என்பதை நாம் இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

3. மரியா. இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தமது கூந்தலால் துடைக்கின்றார். மிக உயர்ந்த நறுமணத் தைலம் அது. அந்த தைலத்தால் அந்த வீடே கமகமக்கிறது. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த ஒன்றை இயேசுவுக்காக இழக்கின்றார் மரியா. மதிப்பு மிக்க ஒன்றை நாம் கண்டுகொள்ளும்போது, அதனிலும் மதிப்பு குறைந்த ஒன்றை இழந்தால் தவறில்லையே என்பது இவரின் வாதம். இயேசுவே இவர் கண்ட புதிய புதையல்.

4. யூதாசு இஸ்காரியோத்து. இவர்தான் இயேசுவை எதிரிகளிடம் முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தவர். இவர் கணக்கில் புத்திசாலி. இவரிடம்தான் சீடர்குழுவின் பணப்பை இருந்தது. 'இது என்ன விலை?' 'அது என்ன விலை?' என்று இவரின் மூளை எல்லாவற்றிற்கும் விலை குறிக்கும். ஆகையால்தான் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலை பேசுகின்றார். இங்கே, 'நறுமணத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்' என்று போலி அக்கறை காட்டுகின்றார். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றிற்கும் விலைபேசிவிட முடியுமா?

5. யூதர்களும் அவர்களின் குருக்களும். இவர்கள் வந்திருந்தது இயேசுவைக் கொன்றுவிடும் திட்டத்தோடு. இயேசுவின்மேல் மக்கள் நம்பிக்கை கொண்டது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களின் மதம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான இயேசுவின் குரலும் இவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. நாமும் பல நேரங்களில் நம் மனச்சான்றின், நம் கடவுளின் குரலை அழித்துவிடத் துடிக்கிறோம். இல்லையா?

6. இயேசு. இவர்தான் இந்த நிகழ்வின் கதாநாயகன். நடக்கும் அனைத்தும் தன் இறுதிநாளை ஒட்டியே நடக்கிறது என்று எப்போதும் தன் இறப்பையும், அதன் வழியாக நடந்தேறவிருக்கும் மனிதகுல மீட்பையும் மனத்தில் நிறுத்தியவர். இவரைத் தான் வானகத் தந்தை, தான் பூரிப்படையும் மகன் (காண். முதல் வாசகம், எசாயா 42:1-7) என உச்சி முகர்கின்றார். இவரே மக்களின் புதிய உடன்படிக்கை. இவரே உலகின் ஒளி. இவரே ஆண்டவர். அதுவே இவரின் பெயர்.

7. நாம். இந்த ஆறு நபர்களுக்குப் பின் நிழலாடுவது நீங்களும், நானும். இந்த கதாபாத்திரங்களில் நம் எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றனர். மற்றெல்லாம் மறைந்து இயேசு மட்டும் வளர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளுமே நமக்கு உயிர்ப்பு நாளே.


4 comments:

  1. Anonymous4/09/2017

    Good reflection Yesu

    ReplyDelete
  2. இன்றைய நற்செய்தி வாசகம் முன்னிறுத்தும் ஆறு பேரை அழகாக நம் கண்முன் கொணருகிறார் தந்தை. வாழ்வை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்ற லாசரை விட, இயேசுவுக்குப் பணிவிடை செய்வதில் மும்முரமாய் இருந்த மார்த்தாவைவிட,தன்னிடமிருந்த மதிப்பான பொருளை இயேசுவுக்காக இழக்கத்துணிந்த மரியாவை விட,ஏழைகளின் மீது போலி அக்கறை காட்டிய யூதாஸைவிட,இயேசுவின் குரலை அச்சுறுத்தலாகப் பார்த்த யூத குருக்களை விட,நம் நினைவில் நிற்பது " விண்ணகத்தந்தையின் பூரிப்புக்குகந்த மகன்,மக்களின் புதிய உடன்படிக்கை,உலகின் ஒளி.....இத்தனை பெயர்களுக்கும் சொந்தக்காரர் நம் இயேசு எனும் "ஆண்டவரே!".ஆனாலும் நம்மில் உறைந்து போன இத்தனை கதாபாத்திரங்களுமே நம்முள் தேய்பிறையாகி இயேசு மட்டும் வளர்பிறையானால் எல்லா நாளும் நமக்கு உயிர்ப்பு நாளே!"..... தந்தையின் வார்த்தைகளுக்கு அப்பீல் இருக்கிறதா என்ன? வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. 6 நாட்கள் - 6 நபர் இவ்வாறு கருத்துக்களை சாதாரணமாக, வாழ்க்கையோடு இணைத்து எடுத்துக் கூறிய விதம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. 6 நாட்கள் - 6 நபர் இவ்வாறு கருத்துக்களை சாதாரணமாக, வாழ்க்கையோடு இணைத்து எடுத்துக் கூறிய விதம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete