Friday, April 21, 2017

துணிச்சல்

மற்ற நற்செய்தியாளர்களை விட எனக்கு மாற்கு நற்செய்தியை ஒரு காரணத்திற்காக அதிகம் பிடிக்கும்:

அதாவது, இயேசுவையும் அவருடைய சீடர்களையும் அவர்களுக்கு இடையே இருந்த உறவையும் ரொம்ப goodie goodie-யாக எழுதாமல், அவர்களின் நம்பிக்கையின்மை, நம்பிக்கையை நோக்கிய அவர்களது போராட்டம், பிளவு, ஏற்றத்தாழ்வு, கோபம், பொறாமை, ஒப்பீடு, தாழ்வு மனப்பான்மை ஆகிய அனைத்தையும் மிக அழகாக பதிவு செய்பவர் மாற்கு.

அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 16:9-15) நாம் வாசிக்கவிருக்கின்றோம்.

'வெற்றுக்கல்லறைக்குள் சென்றார். கண்டார். நம்பினார்' என கண்டவுடன் நம்புதலை பதிவு செய்கிறார் யோவான்.

ஆனால், மாற்கு நற்செய்தியாளரின் சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் மிகவும் போராடுகின்றனர்:
'அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை'

'வயல்வெளிக்கு நடந்து சென்ற இருவர் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.'

இயேசு வந்து அவர்களின் கடின உள்ளத்தைக் கடிந்தவுடன் அப்படியே உருகிப்போய்விடுகின்றனர் சீடர்கள்.

அந்த உருக்கம் துணிச்சலாக வெளிப்படுவதை நாளைய முதல் வாசகத்தில் (காண். திப 4:13-21) வாசிக்கின்றோம்: 'அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதை தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்.'

இவர்களின் கருத்துப்படி ஒருவருக்கு துணிச்சல் எப்போது வரும்?

அவருடைய கல்வி அறிவினால்.

ஒரு மாணவனுக்கு எப்போது துணிச்சல் வரும்? தன் பாடங்களை கற்றுத் தெரிந்திருந்தால்.

ஒரு ஆசிரியருக்கு? தன் பாடங்களில் தெளிவு இருந்தால்.

ஒரு நட்பில்? நம்பகத்தன்மை இருந்தால்.

இயேசுவின் சீடர்களுக்கு வரும் துணிச்சலின் ஊற்றுக்கண் இயேசுவே.

அதாவது, 'என் ஆண்டவர் உடனிருக்கிறார். அவர் இறக்கவில்லை' என நம்புகின்றனர். துணிச்சல் பெறுகின்றனர்.

நாம் எதைக் கண்டு பயப்படுகிறோமோ அதுதான் நம் பேய்.

நாம் எதைக் கண்டு நம்புகிறோமோ அதுதான் நம் கடவுள்.

பயம் துணிச்சலை நிலைகுலையச் செய்கிறது.

நம்பிக்கை துணிச்சலுக்கு boost கொடுக்கிறது.


1 comment:

  1. இயேசுவுக்கும்,அவரது சீடருக்குமிடையே இருந்த உறவு குறித்து நற்செய்தியாளர்கள் யோவானுக்கும்,, மார்க்குக்கும் இடையே இருந்த கருத்துக்களின் ஒப்புமை தெரிவித்திருக்கிறார் தந்தை. இறுதியில் ஒரு மாணவனுக்குத் துணிச்சல் எப்போது வரும் எனும் கேள்வியையும் கேட்டு அக்கேள்விக்குப்பல பதில்களைத் தந்திருப்பினும் " இயேசுவின் சீடர்களுக்கு வரும் துணிச்சலில் ஊற்றுக்கண் இயேசுவே" ...நம் சிந்தனையைத் தூண்டிவிடுவதாக உள்ளது . " என் ஆண்டவர் உடனிருக்கையில் எனக்கென்ன குறை?".... நமக்கும் கூட துணிச்சல் தரும் வார்த்தைகள்தான். நம் கடவுளையும்,பேயையும் நாமே உருவாக்கிக்கொள்கிறோம் என்பதும், துணிச்சலை நிலைகுலையச் செய்யும் பயத்தை நீக்கி துணிச்சலுக்கு boost தரும் நம்பிக்கையை வளர்ப்போம் என்பதும் தந்தையின் அறிவுரை.அதை ஏற்பதில் என்ன தயக்கம்? இந்நாளுக்கான விவிலியப்பகுதியோடு இணைந்து வந்த பதிவுக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete