Friday, March 31, 2017

அவரவர் வீட்டுக்கு

இன்று மாதத்தின் முதல் நாள். இந்த மாதம் இனிய மாதமாகட்டும்.

'அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்' (காண். 7:40-53)

இயேசுதான் மெசியாவா என்ற கேள்வி யூதர்களிடம் எழுகின்றது. சிலர் ஆம் என்றும், சிலர் இல்லை என்றும் சொல்ல அவர்களிடையே பிரிவினை தோன்றுகிறது.

இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு விடயங்கள் தடைகளாக இருக்கின்றன:

அ.அவர் பிறந்த ஊர் அனைவருக்கும் தெரியும்.
ஆ. அவர் கலிலேயாவைச் சார்ந்தவர்.

ஆக, கடவுள் செயலாற்றினாலும், 'இல்லை. இது இப்படியல்ல. அப்படித்தான்' என்று சொல்லி மனித மனம் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இதே போன்ற ஒரு நிகழ்வு 1 சாமுவேல் 8ல் நடக்கிறது.

'எங்களுக்கு ஓர் அரசன் வேண்டும்' எனக் கேட்கிறது இஸ்ரயேல் கூட்டமைப்பு.

'இல்லை. தர முடியாது. ஆண்டவர்தாம் உங்கள் அரசன்' என வாதிடுகிறார் சாமுவேல்.

இறுதியில், ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குக் களைந்து செல்கின்றனர்.

இதே வார்த்தைகளைத்தான் இன்றைய நற்செய்தியிலும் பார்க்கின்றோம்.

அதாவது, வாழ்வில் சண்டை சச்சரவுகள் வெளியில் நடக்கும்போது நாம் நம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். எதற்காக?

அ. விடை தெரியாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பதால் நேரமும், ஆற்றலும்தான் விரயமாகிறதே ஒழிய, யாருக்கும் எந்த உபயமும் இல்லை.

ஆ. நம் வீட்டுக்குச் செல்லும்போது நம் வீட்டில் உள்ள பிரச்சினையை சரி செய்யத் துவங்கிவிடுகிறோம். வீட்டில் உள்ள பிரச்சினையை சரி செய்யாமல் ஊர் பிரச்சினையை ஏன் சரி செய்ய துடிக்க வேண்டும்?

இ. வீடு நமக்கு ஒரு பாதுகாப்பு வளையம். அங்கே வாக்குவாதங்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் இடமில்லை. ஆக, வீட்டுக்குப் போனால் விவாதங்கள் மறைந்துவிடும்.

இதைத்தான் இன்றைய முதல்வாசகத்தில் பார்க்கிறோம்.

மக்கள் தன்னை விவாதப் பொருள் ஆக்கிவிட்டபோது, யாவே இறைவன் என்னும் தன் வீட்டிடம் அடைக்கலம் புகுகின்றார் எரேமியா.


1 comment:

  1. அழகான,அர்த்தமுள்ள பதிவு. ' Familiarity brings contempt' எனக்கேள்விப்பட்டிருப்போம்..ஒருவரின் பின்புலம் நமக்குத் தெரிந்திருப்பதினாலேயே அவரின் அருமை பெருமைகளை நாம் அங்கீகரிப்பதில்லை.இயேசுவுக்கு நடந்த அதே புறக்கணிப்பு எரேமியாவையும் துரத்துகிறது.வெளியிலிருந்து பிரச்சனைகள் நம்மை நோக்கிப் படையெடுக்கையில் நாம் திரும்பிப் பார்த்து நடக்க வேண்டியது நமக்குப் பாதுகாப்பு வளையமாயிருக்கும் நம் வீட்டை நோக்கியே என்கிறார் தந்தை.இது கல்லும்,சிமென்டும் வைத்துக்கட்டிய வீடாக மட்டுமின்றி, இறைவன் உறையும் நம் 'அகம்' எனும் வீட்டையும் குறிக்குமெனத் தோன்றுகிறது.சரிதானா தந்தையே? தந்தைக்கும்,அனைவருக்கும் இம்மாதம் இனிய மாதமாக...புனித மாதமாக அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete