Friday, May 27, 2022

முன்வருதல்

இன்றைய (28 மே 2022) முதல் வாசகம் (திப 18:23-28)

முன்வருதல்

இன்றைய முதல் வாசகத்தில் அப்பொல்லோ என்ற கதைமாந்தரைப் பார்க்கிறோம். இவர் எபேசில் கற்பித்து வருகின்றார். 

இவரிடம் அப்படி என்ன சிறப்பு?

பவுலைப் போல தமஸ்கு நகரிக்குச் செல்லும் வழியில் ஆண்டவரை எதிர்கொள்ளவில்லை என்றாலும், பேதுரு மற்றும் யோவான் போல ஆண்டவரின் திருத்தூதர்களாக இவர் இல்லாவிடினும், தானாக முன்வந்து நற்செய்திப் பணி செய்கின்றார். தன்னுடைய திறமைகள் அனைத்தையும் நற்செய்திப் பணிக்காகச் செலவிடுகின்றார். என்ன ஆச்சர்யம்!

ஆக, நம் வாழ்வில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால், பெரிய அளவில், பெரிய நபராக, பெரிய அழைத்தலைப் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக, சிறிய அளவில், சிறிய நபராக, சிறிய அழைத்தலோடு செய்யலாம்.

முன்வருதல் எப்படி வரும்?

ஒன்று, எனக்கு என்மேல் தன்நம்பிக்கை இருக்கும்போது வரும். தன்நம்பிக்கை இல்லாமல் முன்வருதல் சாத்தியமில்லை. நான் நிறைய கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, ஏதாவது விளையாட்டு நடத்த, 'யாராவது முன்வருகிறீர்களா?' என்ற கேட்கும்போது, பலர் தயக்கம் காட்டுவதுண்டு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தன்நம்பிக்கை குறைவு. ஒரே ஒரு இடத்தில்தான் அமர்வில் இருந்த 20 பேரும் கைகளை உயர்த்தினர். 

இரண்டு, அடுத்தவர் தேவையில் இருக்கும்போது. என்னுடைய தன்நம்பிக்கை மட்டுமல்ல. அடுத்தவரின் தேவையும் சில நேரங்களில் நம்மை முன்வரத் தூண்டும். நாம் நடந்து சென்றுகொண்டிருக்கிறோம். திடீரென நமக்கு முன்னால் செல்லும் நபர் ஒருவர் மயங்கி விழுகிறார். உடனே நாம் ஓடிச் சென்று அவரைத் தூக்குகிறோம். இங்கே, நம் தன்னம்பிக்கையைவிட அவருடைய தேவை நம்மை ஓட வைக்கிறது.

மூன்று, பணி நிமித்தமாக. பணியின் நிமித்தமாக சில நேரங்களில் நாம் முன்வருவோம். மருத்துவமனைக்குச் செல்கிறோம். அங்கே காயம் பட்டு ஒருவர் கட்டிலில் அழைத்துவரப்படுகின்றார். நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கலாம், அடுத்தவர் தேவையில் இருக்கலாம். ஆனால், பணிசார் அறிவு இல்லாமல், அல்லது பணியின் கடப்பாடு இல்லாமல் நான் அவருக்கு உதவி செய்ய முன்வர முடியாது.

அப்பொல்லோ இந்த மூன்று காரணங்களுக்காக நற்செய்தி அறிவிக்க முன்வந்தாலும், இதையும் தாண்டி ஒரு காரணம் இருந்தது.

அவர், 'இயேசுவே மெசியா' என எடுத்துக்காட்டினார்.

தன் வாழ்வாலும், வார்த்தையாலும்.

நற்செயல்: சின்ன சின்ன விடயங்களில் நாம் முன்வருதலோடு இயங்குகிறோமா? என்று ஆராய்தல்.

1 comment:

  1. Anonymous5/27/2022

    பல சமயங்களில் நம்முள் பலபேர் ‘அடுத்தவர் மெச்சும் அளவிற்கு எதையும் சாதிக்கமுடியவில்லையே!’ என நம்மையே நொந்து கொள்கிறோம். நம் எதிர்பார்ப்பு நோபிள் பரிசு ரேஞ்சுக்கு இருக்கிறதேயன்றி நாம் வீட்டில்…அலுவலகங்களில்…பள்ளிகளில் ஏன் தெருக்களில் கூட செய்யக்கூடிய சிறிய காரியங்களுக்கு மதிப்போ..முன்னுரிமையோ தருவதில்லை.இந்த நேரத்தில் எனக்கு நினைவிற்கு வருவது…இயேசு ஐந்து அப்பங்களைப் பலுகச்செய்த நிகழ்வில் மக்களின் பசிபோக்கத் தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும்,இரண்டு மீன் துண்டுகளையும் தர முன் வந்த சிறுவன்…இயேசு தன் சிலுவையைச் சுமக்க உதவ முன்வந்த சீரேன் ஊரைச் சேர்ந்த சிமியோன் …..இவர்கள் அன்று அவர்களிருந்த சூழ்நிலைக்கேற்ப உதவ முன்வந்தது தான் விவிலியத்தில் பேசப்படும் அளவிற்கு அவர்களை உயர்த்தியிருக்கிறது.’சிறு குச்சியும்’ பல் குத்த உதவும் எனும் பழமொழியை மனத்திலிருத்திப் பார்த்தால் நாம் முன்வந்து செய்யும் எந்த சிறு செயலும் இன்னொருவருக்குப் பெரிய உதவியே! ‘இயேசுவே மெசியா’ வென நம் வாழ்வும்,வார்த்தையும் இவ்வுலகிற்கு நம்மை எடுத்துக்காட்டட்டும். என்னால் முடிந்த ஒரு செயல் அடுத்தவரின் முகத்தில் புன்முறுவலைக் கொண்டுவருமெனில் நான் ஏன் அதைச் செய்யத் தயங்க வேண்டும்? என்னையே நான் கேள்விகேட்கத் தூண்டிய ஒரு பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete