Monday, May 2, 2022

புனித பிலிப்பு மற்றும் சிறிய யாக்கோபு

இன்றைய (3 மே 2022) திருநாள்

புனித பிலிப்பு மற்றும் சிறிய யாக்கோபு

இன்று நம் தாய்த் திருஅவை புனித பிலிப்பு மற்றும் புனித சிறிய யாக்கோபு என்னும் இரு திருத்தூதர்களின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறது.

புனித பிலிப்பு கிரேக்க, சிரியா, மற்றும் ஃபிர்கியா நாடுகளில் மறைபரப்பு பணி செய்ததாக பாரம்பரியம் குறிப்பிடுகின்றது. யோவான் நற்செய்தியில் பிலிப்பு அழைக்கப்படும் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடைய சொந்த ஊர் பெத்சாய்தா. அந்திரேயா மற்றும் பேதுருவும் இதே ஊரைச் சார்ந்தவர்கள் என யோவான் தொடர்பை ஏற்படுத்துகின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி!' என்று சொல்லும் நிகழ்வில் பிலிப்பு திருமுழுக்கு யோவானின் சீடராக இருக்கின்றார். நத்தனியேல் என அழைக்கப்படும் பார்த்தலோமேயுவை இயேசுவிடம் அழைத்து வந்தவர் பிலிப்பு. ஐயாயிரம் பேருக்கு எப்படி உணவு அளிப்பது என்ற கேள்வியை இயேசுவிடம் கேட்பவரும், நம்மிடம் இரண்டு அப்பங்கள் மட்டுமே உள்ளன என்று சொன்னவரும் பிலிப்பே. மேலும், இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் சென்றவர் இவரே (காண். யோவா 12:21). மேலும், இறுதி இராவுணவில், 'தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்!' என்று இயேசுவிடம் சொன்னவர் பிலிப்பு. ஆக, யோவான் நற்செய்தியில் பிலிப்பு ஒரு முதன்மையான கதைமாந்தராக விளங்குகின்றார். 

'பிலிப்புவின் நற்செய்தி' என்ற ஒரு நூல் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், 'பிலிப்புவுக்கு பேதுரு எழுதிய கடிதம்' என்னும் ஏற்றுக்கொள்ளப்படாத நூலில், திருத்தூதர்கள் அனைவருடனும் வந்து இணைந்துகொள்ளுமாறு ஒலிவ மலைக்கு வாரும் என்று பேதுரு பிலிப்புவுக்கு எழுதுகிறார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் பிலிப்பு தானாக மறைபரப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் பேதுரு அவரைத் திரும்ப அழைப்பது போல இருக்கிறது இக்கடிதம். 'பிலிப்புவின் பணிகள்' என்னும் இன்னொரு நூலில் பிலிப்பு ஆற்றிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிலிப்பு சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என ஒரு மரபும், அவர் தலை வெட்டுண்டு இறந்தார் என இன்னொரு மரபும் சொல்கின்றன.

நாம் இலத்தீன் திருஅவையில் பயன்படுத்தும் சிலுவையை வடிவமைத்தவர் பிலிப்பு. பிலிப்பு கையில் ஏந்தியிருக்கும் சிலுவையில், இரண்டு அப்பங்களையும் உருவங்களாக சில இடங்களில் வரையப்பட்டுள்ளன.

புனித சின்ன யாக்கோபு என்பவர் பெரிய யாக்கோபிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்காக அவ்வாறு அழைக்கப்படுகின்றார். பெரிய யாக்கோபுவை செபதேயுவின் மகன் என்றும், சின்ன யாக்கோபுவை அல்பேயுவின் மகன் என்றும் நற்செய்தி நூல்கள் அழைக்கின்றனர். அல்பேயுவின் மகன் யாக்கோபு என்னும் சின்ன யாக்கோபை, 'இயேசுவின் சகோதரர்' என அடையாளப்படுத்துகின்றார் புனித ஜெரோம். இவரை மத்தேயுவின் சகோதரர் என்றும் சிலர் அழைப்பதுண்டு. ஏனெனில், மத்தேயுவின் தந்தை பெயரும் அல்பேயு என வழங்கப்பட்டுள்ளது (காண். மாற் 2:14, 3:18)

இன்று நாம் கொண்டாடும் புனிதர்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) திருத்தூதர்கள் இயேசுவையும் நம்மையும் இணைக்கும் பாலங்கள். இயேசுவை நாம் இவர்கள் கண்கள் வழியாகவே பார்க்கின்றோம், இவர்களின் கரங்கள் வழியாகவே தொடுகின்றோம். நமக்குப் பின் வரும் நம் தலைமுறைகளுக்கு நம் வழியாக பாலங்கள் நீள்கின்றன. நாமும் திருத்தூதர்களின் நம்பிக்கையின் நீட்சிகளே.

(ஆ) உரையாடும் பிலிப்பு. பிலிப்பு எதார்த்தமாகப் பேசுபவராகவும், தன் பேச்சுக்கலையால் பலரின் நல்லெண்ணத்தை வென்றவராகவும் நமக்குத் தெரிகிறார். உரையாடல் என்பது ஒரு கலை. குறைவாகப் பேசி, நிறைவாகக் கேட்பவரே உரையாடலில் சிறக்க முடியும். இன்று நாம் ஒருவர் மற்றவருடன் உரையாட பிலிப்பு நம்மைத் தூண்டுகிறார்.

(இ) திரும்பாத திடம். திருத்தூதர்கள் தங்களின் நம்பிக்கைக்காக, தாங்கள் பெற்ற இயேசு அனுபவத்திற்காக உயிர் துறக்கவும் துணிகின்றனர். ஒருபோதும் தங்களின் முந்தைய வாழ்க்கை நோக்கித் திரும்பவில்லை அவர்கள். நம்பிக்கைப் பயணத்திலும், இறையழைத்தல் பயணத்திலும் திரும்பாத திடம் நல்லது.


1 comment:

  1. Philomena Arockiasamy5/03/2022

    பிலிப்பு மற்றும் சின்ன யாக்கோபு….இவர்களின் நினைவைக் கொண்டாடும் நாள். பிலிப்பு…. இயேசுவுடன் இணைந்த வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்குச் சொந்தக்காரர்.நாம் இலத்தீன் திருஅவையில் பயன்படுத்தும் சிலுவையை வடிவமைத்தவர் என்பதை அவருடைய கூடுதல் சிறப்பாகப் பார்க்கிறேன்.
    இயேசுவின் சகோதரர் என அறியப்பட்ட அல்பேயுவின் மகன் சின்ன யாக்கோபு.
    இயேசுவை நாம் இத்திருத்தூதர்களின் வழியாகப் பார்ப்பதால்…இவர்களின் கரங்கள் வழியாகவே தொடுவதால்..பின் அதை நம் தலைமுறையினருக்கு வழங்குவதால் நாமும் திருத்தூதர்களின் நம்பிக்கையின் நீட்சிகளே!…. சிறியவர் நம்மையும் பெரியவராகத் தலை தூக்கச்செய்யும் விஷயம்! நம் பேச்சைமட்டுமே பிறர் கேட்கவேண்டுமென விழையும் நம் தலைமுறையினர் மத்தியில் குறைவான…எதார்த்தமான பேச்சுக்கு மட்டுமின்றி, நிறைவாகக் கேட்பதற்கும் நமக்கொரு தூண்டுகோலாகத்தெரிகிறார் பிலிப்பு.
    ஒருமுறை இயேசுவிற்காகத் தங்கள் சொந்த வாழ்க்கையைத் துறந்து வந்த இவர்கள் பழைய வாழ்க்கைப்பக்கம் திரும்பவில்லை என்பது
    என் போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கைப் பயணித்திலும்,இறைவன் குரல்கேட்டு அவரைப்பற்றிக்கொண்டவர்களின் துறவறப் பயணத்திலும் எடுத்துக்காட்டாக நிற்க வேண்டிய விஷயம்!
    திருத்தூதர்கள் என்ற பொதுவான விஷயத்தைத் தாண்டி, அவர்களின்
    எளிமைமிகு வாழ்வின் பெருமைமிகு விஷயங்களைத் தேடித்தரும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete