Friday, November 27, 2015

நான்கு நண்பர்கள்

நேற்று எங்கள் பங்கில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

நேற்று நடத்தவேண்டியது என் பொறுப்பு. பதின்பருவத்திற்கான சிறப்பு ஆராதனையாக இருந்தது இது.

ஆகையால், நான் நட்பு என்ற தலைப்பை எடுத்தேன்.

சீராக் 6:5-17 ஐ மையமாக வைத்து சிந்தித்தோம்.

சீராக் நான்கு வகையான நண்பர்களைப் பற்றிப் பேசுகின்றார்:

அ. தன்னலம் தேடும் நண்பர்கள்
ஆ. பகைவர்களாய் மாறும் நண்பர்கள்
இ. சேர்ந்து விருந்துண்ணும் நண்பர்கள்
ஈ. நம்பிக்கைக்குரிய நண்பர்கள்

இவற்றில் நான்காம் நண்பர் குழுவினரே சிறந்தவர் என்கிறார். இவர்கள் 'இதைப்போன்றவர்கள்' என்று நான்கு அடைமொழிகளைச் சொல்கின்றார்:

பாதுகாப்பான புகலிடம்
புதையல்
பெருஞ்செல்வம்
நலமளிக்கும் மருந்து

இத்தகைய நண்பரைப் பெறுபவர் யார் என்று தொடர்ந்து சொல்கின்றார்:

'ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பு பேணுவர்!'

ஆக, நம் அன்றாட வாழ்வின் நட்பிற்குக் கூட ஆண்டவரைப் பற்றிய அச்சம் தேவைப்படுகிறது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் மனதில் இருக்கும் போது நாம் தன்னலத்தோடு இருப்பதில்லை. பகைமை பாரட்டுவதில்லை. இன்பத்தில் உடனிருந்துவிட்டு, துன்பத்தில் தூரமாகிவிடுவதில்லை. நாம் நண்பர்களைப் பொருட்களாகப் பயன்படுத்துவதில்லை.

மேலும், இந்த இடத்தில் அகுஸ்தினாரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டலாம்:

தன் உயிர் நண்பனின் இறப்பால் வருந்தி அழுது கொண்டிருக்கும் அவர் இப்படி எழுதுகிறார்:

'உன்னில் தங்கள் நண்பர்களையும்,
உனக்காக தங்கள் பகைவர்களையும்
அன்பு செய்வோர் பேறுபெற்றோர்!
உன்னில் அவர்கள் தங்கள் நண்பர்களைக் காண்பதால்
நண்பர்களின் இறப்பும் அவர்களைக் காயப்படுத்துவதில்லை.
ஏனெனில் இறந்த நண்பர்கள் இறவாத உன்னில் என்றும் இருக்கின்றார்களே!'

இன்று தமிழ் ஈழக் கனவான தாயகக் கனவிற்காக மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர் தினத்தைக் கொண்டாடுகிறோம். இவர்களைப் பிரிந்த நண்பர்கள் எப்படி இவர்களின் இழப்பைத் தாங்குகிறார்கள்? தாயகக் கனவில்தானே. இந்தக் கனவுதான் இறந்தவர்களையும், இருப்பவர்களையும் ஒன்றே பிணைக்கிறது.

கௌதம புத்தரும் நான்கு வகையான நல்ல நண்பர்களைப் பற்றிச் சொல்கின்றார் (in Sigalovada Sutta):

அ. உதவும் நண்பர்கள் (Helping)
ஆ. தொடரும் நண்பர்கள் (Enduring)
இ. உருவாக்கும் நண்பர்கள் (Mentoring)
ஈ. பரிவுகாட்டும் நண்பர்கள் (Compassionate)

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா' (திரைப்படம்: அவன்தான் மனிதன், 1975) பாடல் கேட்டிருக்கிறீர்களா?

இரண்டு வரிகள் இங்கே சிந்திக்கத்தக்கவை:

'பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே'

'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா'



2 comments:

  1. Dear Father,Greetings to you.
    'பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
    ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே'
    very excellent and Golden words.Thank you so much.

    ReplyDelete
  2. தமிழில் " உன் நண்பன் யாரென்று சொல்; நீ யாரென்று சொல்கிறேன்" என்ற சொல்லாடலிலிருந்து ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பது எத்துணை தேவை என்பதை நம்மால் உணரமுடிகிறது.எத்தனை விதமான நட்பு இருப்பினும்,நண்பர் இருப்பினும் இறுதியில் " ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பு பேணுவர்" என்ற வரிதான் நட்புக்கு சிகரம் என்று தோன்றுகிறது." உன்னில் தங்கள் நண்பர்களையும்,உனக்காகத் தங்கள் பகைவர்களையும் அன்பு செய்வோர் பேறுபெற்றோர்! உன்னில் அவர்கள் தங்கள் நண்பர்களைக் காண்பதால் நண்பர்களின் இறப்பும் அவர்களைக் காயப்படுத்துவதில்லை.ஏனெனில் இறந்த நண்பர்கள் இறவாத உன்னில் என்றும் இருக்கிறார்களே!" புனித அகுஸ்தினாரின் இவ்வரிகள் சமீபத்தில் தன் கணவனை இழந்த என் சிநேகிதியை சந்தித்து விட்டு வந்த எனக்கு மயிலிறகால் வருடுவது போல் இருக்கிறது.திரும்பவும் கண்ணதாசனின் அழகான வரிகள்..." பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே; ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே" நல்ல நட்பின் இலக்கணத்தைக் கூறும் வரிகள்.அழகு மேற்கோள்களுக்காக தந்தைக்கு ஒரு 'சல்யூட்'.

    ReplyDelete