Monday, November 23, 2015

இரும்பு களிமண்

'ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள். ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.' (காண். தானி 2:31-45)

'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது' (திரைப்படம்: சூரியகாந்தி, 1973) என்று தொடங்கும் கண்ணதாசன் பாடலில் பின் வரும் வரிகள் வரும்:

'வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உன்னை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது'

To listen to the song please click here: பரமசிவன் கழுத்தில்

நாளைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கும் நெபுகத்னேசர் அரசனின் கனவில், நாம் இரும்பும், களிமண்ணும் கலப்பதாகப் பார்க்கின்றோம்.

அதாவது, சிறிய சக்கரமும், பெரிய சக்கரமும் இணைந்து இருப்பது போல.

(இந்த இடத்தில் ஒரு டவுட்டு. டிராக்டரில் ஒரு சக்கரம் பெரியதாகவும், மற்ற சக்கரம் சிறியதாகவும் இருக்கிறது. அப்புறம் எப்படி பாஸ் அது ஓடுது! யோசிக்க வேண்டிய விஷயம்)

நம்ம கண்ணதாசன் சொன்னது போலவே எடுத்துக்கொள்வோம்.

இரும்பு இரும்போடுதான் கலக்கும்.
களிமண் களிமண்ணோடுதான் கலக்கும்.
பெரிய சக்கரம் பெரிய சக்கரத்தோடுதான் பொருந்தும்.
சிறிய சக்கரம் சிறிய சக்கரத்தோடுதான் பொருந்தும்.

இந்த நேரத்தில் நாம் யார் யாரோடு உறவில் இருக்கிறோம் என்றும், எந்த உறவு பொருந்தும், எந்த உறவு பொருந்தாது என்றும், யார் உயர்ந்தோர், யார் தாழ்ந்தோர் என்றும் எண்ணிப் பார்க்கக் கூடாது.

இறைவனின் படைப்பில் எல்லாரும் உயர்ந்தோரே. நம் குணநலன்களால் நம்மையே நாம் தாழ்வானவர்கள் ஆக்கிக்கொள்கிறோம் சில நேரங்களில்.

இரும்போடு கலக்கும் களிமண், தானும் இரும்பு போல உறுதியாக வேண்டும் என நினைத்தால் அது தவறில்லையே. அதைவிடுத்து, தன்னைப்போல இரும்பையும் உருக்கிவிட்டால்தான் ஆபத்து.

என் நட்பு வட்டத்தில் எப்போதும் என்னைவிட உயர்ந்தவர்களையே நான் வைத்துக்கொள்வது உண்டு. ஏனெனில் அப்போதுதான் அவர்களைப்போல உயர முடியும்.

மனிதரில் இருக்கும் இறையியல்பு கூட களிமண்ணோடு கலக்கும் இரும்பு போலத்தானே.

ஒவ்வொரு பொழுதும் நாம் இறையியல்பில் வளரும்போது களிமண் தானாகவே கரைந்துவிடுகிறது.


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.அர்த்தமுள்ள பதிவிற்கு நன்றி. நம் நட்பு நல்லவர்கள் கூட இருந்தால் நாம் நல்லவர்கள். நம் நட்பு தீயவர்களோடு இருந்தால் தீயதே. என்னை தொட்ட வரிகள் ஒவ்வொரு பொழுதும் நாம் இறையியல்பில் வளரும்போது களிமண் தானாகவே கரைந்துவிடுகிறது. ஆம், பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெரும். அது போல நல்ல மனிதர்களுடன் எத்தகைய மனிதர்கள் இணைந்தாலும் கண்டிப்பாக மணம் பரப்புவது உறுதி.இந்த வாழ்க்கை ஒரு சிலருக்கு வெகு விரைவில் கிடைக்கும் ,ஒரு சிலருக்கு தாமதமாக கிடைக்கும்.ஆனால் எல்லாவற்றிக்கும் காத்திருக்க வேண்டும். பொறுமையுடன் காத்திருப்பதில் கிடைக்கும் இன்பமே தனி.இது தொடர்ந்து ஜெபிப்பதில் தான் கிடைக்கும்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. தானியேல் ஆகமத்தின் வரிகளை ஒரு வாக்கியத்தில் கூற வேண்டுமேயானால் அவரவர் / அவையவை இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாமே இயல்புதான்; இணக்கம்தான்.இதையேதான் கவிஞர் கண்ணதாசனும் எழுத்து வடிவில் கொடுத்தது மட்டுமல்ல...அதை நடித்தும் காட்டிச் சென்றுள்ளார். இன்றையப் பதிவு உறவின் தன்மையைச் சொல்ல வருவதுபோல் தெரிகிறது. ஒரு உறவில் நாம் இரும்பா...களிமண்ணா என்பதை விட நாம் இரும்பாயிருந்தால் நம் உறுதியை அடுத்தவருக்குக் கொடுப்பதும்,நாம் களி மண்ணாயிருந்தால் அந்த உறுதியைப் பெற்றுக் கொள்வதும் முக்கியம் என்பதை உணரவேண்டும்.நிறமற்ற நீர் தான் தொட்டுச் செல்லும் மண்ணின் நிறத்தைத் தன் வசமாக்கிக் கொண்டு,அந்த மண்ணுக்குப் பல வளங்களை அள்ளி இறைப்பது போல் ஒரு உறவில் நாம் கொடுப்பதும்,எடுப்பதும் சேர்ந்துதான் நம்மை மேன் மக்களாக்குகிறது. இயற்கைக்கு இணைந்து வாழும் உறவில் நாம் பார்ப்பது ஒரு சுக சங்கீத்த்தை.அதற்கு மாறாகப் போகையில் நாம் சந்திக்கப் போவதெல்லாம் காலம் தவறிப் பேய்கிறதே பருவ மழை அதனால் வரும் அவதி போன்ற விஷயத்தை மட்டுமே!" மனிதரில் இருக்கும் இறையியல்பு கூட களிமண்ணோடு கலக்கும் இரும்பு போலத்தானே!".... அழகான வரிகள்.இன்றைய பதிவில் காரணம் தெரியாத ஒரு புதுமையை உணர்கிறேன். தான் பிறக்கும் முன்பே வந்த ஒரு திரைப்படப் பாடலை மேற்கோள்காட்டி அதை 'தானியேலின்' வரிகளுடன் இணைக்க விட்டத் தந்தையின் நேர்த்திக்கு என்ன கொடுக்கலாம் ஒரு 'சபாஷ்' தவிர?!

    ReplyDelete