Monday, November 16, 2015

மீண்டும் பார்வை

'மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்!'

(திபா 119:134)

கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய வரலாற்றில் மிக சோகமான நாளாகக் கடந்து போனது.

பிரான்சு நகரின் பாரிசு நகரில் 8 இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்புக்களால் ஐரோப்பாவே கண்ணீருடன் நிற்கிறது.

இழந்த உயிர்கள். அவர்களுக்காக காத்திருக்கும் உறவுகள். காயம்பட்டவர்கள். கைகால் இழந்தவர்கள். உயிர். உடைமை. உறவு. இவ்வாறு பல இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு.

இறைவனின் பெயரால் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டது என்று நினைக்கும்போது இறைவன்மேல் கோபம் வருகிறது.

'ப்ரே ஃபார் ஃப்ரான்ஸ்'

இப்படி டுவிட்டரில் ஒரு ஹேஸ்டேக் வருகிறது.

எந்தக் கடவுளிடம் செபிக்க?

'உங்கள் பக்தர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!' என்று அல்லாவிடமா?

அல்லது

'உங்கள் பக்தர்களைக் காப்பாற்றுங்கள்!' என்று இயேசுவிடமா?

யார் இவர்கள்? யார்மேல் இவர்களுக்குக் கோபம்?

தங்களின் கோபத்தை ஒன்றுமறியாத மூன்றாம் நபரிடம் காட்டுவது என்ன நியாயம்?

யாரைப் பயமுறுத்துவதாக நினைக்கிறார்கள்?

இந்தப் பயமுறுத்தலால் இவர்கள் சாதித்துவிட்டது என்ன?

பழிக்குப் பழி என்றால்,

கண்ணுக்குக் கண் என்று எடுத்துக் கொண்டே போனால்

வெறும் காலணிகள்தான் மிஞ்சும்.

மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதருக்குள் நடக்கும் போராட்டத்திற்கே விடைதெரியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்க, நம் சொந்த இனத்தை அழிக்க, அவர்களுக்கு எதிராக போராட நாம் ஏன் துணிய வேண்டும்?

'மனிதர் மனிதருக்குச் செய்யும் தீங்கு' பற்றி நாளைய திருப்பாடல் (119) நமக்குச் சொல்கிறது. மனித இனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பண்பு மனிதரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

நம் நாளைய செபம் 'ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்!' என்று நற்செய்தி வாசகத்தில் இருப்பதுபோல இருக்கட்டும்.

என் அருகில் இருப்பவரை நிறத்தை, மதத்தை, இனத்தை, மொழியைக் கடந்து என்னைப்போல ஒருவராக நான் மீண்டும் பார்க்க வேண்டும் என்று கேட்போம்!

3 comments:

  1. விலங்கிலிருந்து வந்த மனிதன் திரும்ப அந்நிலைக்கே செல்கிறானா என்ற ஒரு சந்தேகத்தைத்தான் மக்கள் மனத்தில் விதைத்துள்ளது பாரிஸ் நகரில் அரங்கேறியுள்ள சம்பவம்.திரையரங்கின் நிகழ்ச்சி ஒன்றில் தங்களை மறந்து அமர்ந்திருந்தவர்களைக் கொல்வதென்றால் அவர்கள் எப்படிப்பட்ட ஈனர்களாக இருக்க வேண்டும்! மனத்தில் எழும் கேள்வியை அடக்க முடியவில்லை தான்.இறைவன் ஏன் இப்படிப்பட்ட விஷயங்களை அனுமதிக்கிறார்?இழந்த உயிர்கள்,அவர்களுக்காக்க் காத்திருக்கும் உறவுகள்,காயம்பட்ட ர்கள்,கைகால் இழந்தவர்கள்,....இவர்களுக்காக இறைவனின் இரக்கத்தைக் கேட்பதா இல்லை இல்லை மாக்களாக மாறி எவ்வித்த்திலும் அவர்களோடு சம்பந்தப்படாத அப்பாவிகளின் இரத்தத்தைக் குடிக்கிறார்களே...அவர்களின் மனமாற்றத்திற்காக இறைவனை வேண்டுவதா? தந்தையின் சொற்களில் உள்ள நியாயத்தைப் பார்க்கிறேன்.நம் மனத்தினுள்ளே நடக்கும் போராட்டத்திற்கே விடை தெரியாமல் இருக்கும்போது நம் சொந்த இனத்துக்கு துரோகம் செய்யவும்,அவர்களை அழிக்கவும் எப்படி மனம் ஒப்புகிறது? விளங்கவில்லை.கண்டிப்பாக நம் அருகில் இருப்பவரின் நிறத்தை,மத்த்தை,இனத்தை,மொழியைக் கடந்து என்னைப் போல் ஒருவனாகப் பார்க்கும் வரம் கேட்போம்." மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்.உம் நியமங்களை நான் கடைபிடிப்பேன்."...... மனத்தின் வலியுடன் இந்த வரியை இறைவனைப்பார்த்துச் சொல்ல ஒரு துணிச்சல் வேண்டும்.மனத்தைப் பிசைய வைக்கும்,கண்களைப் பனிக்க வைக்கும் ஒரு பதிவு. இந்த வாரமும் இன்னும் வரும் நாட்கள் அனைத்திலுமே இறைவனின் திருக்கரம் நம்மைப் பாதுகாத்திட வேண்டுவோம்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம். கடவுளின் பார்வையைப் பெற வேண்டும் என்றால் நாம் நம்முடைய குறுகிய பார்வைகளை அப்புறப்படுத்திவிட்டு, நம் அகக்கண்களை அகலத் திறக்க வேண்டும். இதற்குக் கடவுளின் அருள் நமக்குத் தேவை. எனவே, பார்வை பெற நாம் எப்போதுமே இறைஞ்சுவது முறையே.என் அருகில் இருப்பவரை நிறத்தை, மதத்தை, இனத்தை, மொழியைக் கடந்து என்னைப்போல ஒருவராக நான் மீண்டும் பார்க்க வேண்டும் என்று கேட்போம்! என்று நம்மை புரட்சியாளராக தூண்டப்பட்டிருக்கும் இந்த வார்த்தைக்களுக்காக தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும் !

    ReplyDelete