Thursday, May 18, 2023

துயரம் மகிழ்ச்சியாக

இன்றைய இறைமொழி

வெள்ளி, 19 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 18:9-18. யோவா 16:20-23.

துயரம் மகிழ்ச்சியாக

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், 'உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என மொழிந்த இயேசு, தம் சொற்களை ஓர் உருவகம் வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் விளக்கிச் சொல்கிறார்.

பிள்ளையைப் பெற்றெடுக்கிற தாய் பேறுகால வேதனை அடைகிறார். ஆனால், குழந்தை பிறந்தவுடன் இந்த உலகில் புதிய உயிர் வந்ததை நினைத்து மகிழ்கிறார். அவருடைய வேதனை அவருக்கு மறந்துவிடுகிறது. மேலும், தான் அடைந்த வேதனையின்போது அது அகல வேண்டும் என்று மன்றாடிய அவர், வேதனை மறைந்தவுடன் மன்றாட்டையும் மறந்துவிடுகிறார்.

இயேசு இந்த உலகத்தை விட்டு மறைதல் வேதனை தந்தாலும், அவரை மீண்டும் காணும்போது சீடர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என உரைக்கிறார் இயேசு.

மேற்காணும் உருவகம் நமக்குச் சொல்வது என்ன?

(அ) வேதனை என்பது சில நிமிடங்கள்தாம். அது மறைந்துவிடும்.

(ஆ) வேதனையைத் தொடர்ந்து வருகிற மகிழ்ச்சியை நாம் மனத்தில் கொள்வது நலம்.

(இ) எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நாம் பார்க்கும் விதத்தைப் பொருத்தே நம் பதிலுணர்வு அமைகிறது.

தொடர்ந்து இயேசு, இரண்டு வாக்குறுதிகள் தருகிறார்:

(அ) உங்கள் மகிழ்ச்சியை எவரும் உங்களிடமிருந்து பறித்துவிட முடியாது.

அதாவது, அதை எவரும் குறையுள்ளதாக ஆக்கிவிட முடியாது.

(ஆ) அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.

'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று மற்றவரைப் பார்த்து நான் சொல்லும்போது, அங்கே என் மனச்சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறேன். மகிழ்ச்சியும் மனநிறைவும் மனச்சுதந்திரமும் இணைந்தே செல்கின்றன. இயேசுவின் உடனிருப்பு நமக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் மனச்சுதந்திரமும் தருகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி அவரைத் திடப்படுத்துகிறார்.

துன்புறும் உள்ளத்தைத் திடப்படுத்த இறைவன் என்றும் துணைநிற்கிறார்.


No comments:

Post a Comment